Skip to main content

"வெள்ளி" நாவல் பற்றி அமல்ராஜ் பிரான்ஸிஸ்



ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் நம்முடைய சங்க கால இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்க காலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க முடியுமா என்றால், ஆமாம், முடியும் என்கிறது வெள்ளி. அதற்குத் தேவை வெறொன்றுமல்ல, ஜெகே போன்ற ஒரு எழுத்தாளர். அவ்வளவுதான். அந்தத் தளத்தில் வெள்ளி ஒரு பிரமாதமான தொடக்கப்புள்ளி.

காலத்தை வைத்துப் பார்த்தால், இலக்கியத்தில் இதுவொரு hybrid நாவல். இரண்டு முனைகளை (காலங்களை) இழுத்து, ஒரேயிடத்தில் வைத்து முடிச்சிடும் வேலை. சங்க காலத்தில் நவீனமும், நவீனத்தில் சங்க காலமும் கலந்து, கலைந்து, சின்னாபின்னமாகாமல், ஒவ்வொரு காலத் தனித்துவங்களையும் அதனதன் சுவைகளோடு பரிமாறும் நேர்த்தி சூப்பராக இருக்கிறது.
இவ்வாறான ஒரு கதைக்களத்தின் போட்டேன்ஷியல் ரிஸ்க் என்று பார்த்தால், சிலவேளை பச்சை இலக்கிய கிழவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். ஒரு அந்நியச் சூழலில் பிறந்து வாழும் ஒரு நவீன இளைஞனுக்குக் கடுப்படிக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு interesting ஆன கன்செப்ட், திறப்பு. Such an innovative exploration!
புத்தகத்தின் வடிவமைப்பையும் அதே கென்செப்டிலேயே செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஜேகே அண்ணரின் மற்றைய மூன்று புத்தகங்களோடும் ஒப்பிட்டால் - வடிவமைப்பில் - ஒரு பெரும் மாற்றம். உண்மையில், புத்தக வடிவமைப்பு என்னைவிட யஷ்ஷுக்குப் பிடித்திருந்தது. அவனுடைய புத்தகங்களின் சாயல் அடித்ததோ என்னவோ. அட்டையும், பக்கங்களில் வரும் படங்களும், போட்டோத் தாள்களும் அவனுக்கு தன்னுடைய புத்தகங்களை ஞாபகமூட்டியிருக்கலாம். பை த வே, அந்தப் படங்கள் பிரமாதம். ஐ லவ்ட் இட்.
அதிக நீளமற்ற கதை. குறுநாவலை விட நீளம், நாவலை விடக் குள்ளம் எனலாம். தீவிர வாசிப்பாளர்கள் ஒரு கப்புச்சினோவோடு குந்தினால், இரண்டாவது குவளை பற்றிய டெம்டேஷன் வருவதற்குள் முடித்துவிடலாம். என்னைப் போன்ற சோம்பேறிகளும், மண்டை விறைக்கும் நேர வித்தியாசத்தில் ‘வேர்க்கிங் ஃப்ரம் ஹோம்’ வேலை பார்ப்பவர்களும் இரண்டு மூன்று நாட்களில் ஒப்பேற்றலாம்.
தனிப்பட்ட ரீதியில், ஜேகே அண்ணரின் மாஸ்டர் பீஸ் என்றால் எனக்கு எ(இ)ப்போதும் ‘என் கொல்லைப் புறத்துக் காதலிகள்’ தான். அடாவடித்தனமான எழுத்து அது. கதைகளிலும், எழுத்திலும் நம்மை ஒரு மாதம் கட்டிவைத்து நினைத்து நினைத்துச் சிரிக்கப்பண்ணியவர் மனுசன். வெள்ளி அதை மிஞ்சவில்லை. கந்தசாமியும் கலக்சியையும், வெள்ளியையும் ஒரே ஜோர்னரில் போடலாம் (கிட்டத்தட்ட, ஓரளவு) என்றால், என் பெட் கந்தசாமியும் கலக்சியுமுக்கே உண்டு.
ஈழத்து நாவல் பரப்பில், எதிர்பாராத அல்லது எதிரெதிரான துருவங்களை இணைத்து, கோடாக்கி, கதைகளைப் பின்னி, ஆச்சரியப்படுத்துவதில் ஜேகே அண்ணர் எப்பொதும் தனித்துவமானவர். படலையில் ஆரம்பித்து வெள்ளி வரை நல்ல அனுபவங்களையே தந்துகொண்டிருக்கும் எழுத்தாளர். கந்தசாமியையும் கலக்சியையும் ப ப்புவா நியூகினிக்கும், சமாதானத்தின் கதையை லெபனானுக்கும் அனுப்பியது போல வெள்ளியை பேங்கொக் வரை அனுப்பி வைத்ததற்கு நன்றிகள் தல. போகுமிடமெல்லாம் கூடவே வந்துகொண்டிருக்கிறீர்கள்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக