Skip to main content

‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா



பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார்.

பின்னர் 2021 ஆண்டில் திரு ஜெயமோகன் அவர்களின் ‘சங்கச்சித்திரங்கள்’ விகடனில் தொடராகவும்,பின் தமிழினி பதிப்பக வெளியீடாக புத்தகமாகவும் வாசிக்கக் கிடைத்தது. அப்புத்தகத்தில் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் ‘கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது,வாழ்வை விரிவு படுத்துவது,வாழ்வை வைத்துத்தான் கவிதையை வாசிக்க வேண்டும்’ என்கிறார். வாழ்வில் தான் கடந்து வந்த பலவிதமான நிதர்சனங்களை அழகாக, மிக ரசனையான நாற்பது கட்டுரைகளாக வாசகனுக்குத் தந்து, அக் கட்டுரைகளில் குறுந்தொகை பாடல் மற்றும் விளக்கம் இரண்டையும் இணைத்திருப்பதின் வழியாக வாசக மனதில் குறுந்தொகைப் பாடல்களையும் அவர்களது வாழ்வையும் நினைத்துக் கடக்கும் ஒரு கவிதை மனதையும் நமக்குத் தருகிறார். ஒவ்வொன்றும் ஒரு சிறு கதை போன்ற வசீகரமான கட்டுரைகள் அவை.

2023 ஆண்டில் திரு. ஜேகே அவர்களின் ‘வெள்ளி’, மெல்பர்ன் வாசகர் வட்டத்தின் முதல் பொது நிகழ்வில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. மிகுந்த ரசனைக்குரிய பதினோரு குறுந்தொகைப்பாடல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்த மாய அறிவியல் புனைவை எனக்கும் வாசிக்க கிடைத்தது.

புத்தக வடிவமைப்பே அசத்துகிறது. அட்டைப்பட ஓவியங்களோ புத்தகத்தை பிரிக்கவிடாமல் ஓவியத்திலேயே தங்கிவிடச்செய்கின்றன. இளம் காலை வேளையில் மஞ்சள் வானமும், பட்டறையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பின் கணப்பும், நெருப்பின் வெளிச்ச தீற்றலில் வெள்ளியும். அப்படியே பின்னட்டைக்குத் தாவினால் அங்கும் கனன்று கொண்டிருக்கிறது நெருப்பு. திரைச்சீலை விலக்கிய ஜன்னலில் வெகு தொலைவில் வானில் மின்னும் வெள்ளியும், மாநகர நவீன கட்டடங்களில் சிறு வெள்ளிகளாக மின்னும் விளக்குகளையும் கடந்து அறைக்குள் வந்தால், அரை இருளில் மனச்சோர்வோடு அயர்ந்து அமர்ந்திருக்கும் கோடன்,அருகில் ஐஹோம்.

மெதுவாய்ப் புத்தகத்தை பிரித்தால், ‘ஆரம்பிக்கலாமா’ என அமர்க்களமாக ஆரம்பிக்கும் கதை பெரிய எழுத்துக்களில், வழு.. வழு.. பக்கங்களில் வழுக்கிச் செல்கிறது.பக்கத்திற்கு பக்கம் அற்புத ஓவியங்கள் கிராபிக் நாவல்போல நம்மை கதைக்குள்ளும் கவிதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் ஒட்டிக்கொள்ளவைக்கின்றன.

தாத்தாவிற்கு எழுதும் கடிதம் மூலமாக இந்த மாய அறிவியல் புனைவு நாவலுக்குள் நம்மை உடன் இழுத்து செல்கிறார் ஜேகே.




‘எப்போதும், எங்கோயோ, ஏதோ இடறுகிறது’, 'செருப்பில் ஏறிக்கிடக்கும் சிறு முள்ளு துருத்திக்கொண்டேயிருப்பதுபோல’ கோடனின் எண்ணவோட்டத்தோடு வாசகனையும் இணைத்து கொள்கிறார்.அதே கடிதத்தில் தாத்தாவிடம் ஒரு பாட்டு சொல்வீர்களே என பாடலின் பொருளை சொல்ல, உடனே ஐஹோம் அது என்ன பாடல், அப்பாடல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, அது எந்த சங்ககாலப் பாடல் என விவரிக்கிறது. உடன் வந்த ஞாபகம் திரு ஆதிஷா அவர்கள் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய ‘சர்வைவா’ தொடர்தான். அதில் அவர் திரு சுஜாதா அவர்களின் ‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ பற்றிய குறிப்பும் தந்திருப்பார். ஐஹோமுடனான கோடனின் உரையாடல் அவ்வகை.

தாத்தாவின் ஆறுதலான பதில் கடிதம் ஆழ்ந்த அமைதியான வார்த்தைகளால் கோடனை(வாசகனையும்)சாந்தப்படுத்த முயலுகிறார். அவரின் அதி அற்புத மென்பொருளையும் (Augmented reality (AR)மற்றும் Virtual reality (VR) இரண்டும் கலந்த Mixed reality (MR) மூலமாக சங்ககால தமிழர் வாழ்க்கையை ஒரு மெய்நிகர் உலகத்தில் வளம் வரச்செய்யும் மென்பொருள் அறிமுகம் செய்ய, உடன் நாமும் கோடனோடு,

இந்திரவிழாவிற்குள் நுழைகிறோம் .

விழாக்கோலம் பூண்ட நகரும், பூக்களால் நிறைந்த ஆறும் ஆற்றில் துள்ளிடும் மீன்களும், முகிலுக்குள் ஓடி ஒளியும் நிலவும், படகில் காதலில் களித்து கிடக்கும் ஆண் பெண் காதல் இணைகளும், மணற் குன்றும், அதில் ஒற்றை புன்னை மரமும். ஜேகே தன்னுடைய virtual writing ஸ்டைலால் கண்முன் காட்சிகளாகத் தந்து நம்மையும் பயணிக்க வைக்கிறார் .

கதையோடு கலந்து குறுந்தொகை பாடல்களை வைத்தது மட்டுமில்லாமல்,

கவிஞர்களையும் பாத்திரங்களாக உலவ விட்டிருப்பது புது முயற்சி.

உணர்வுகளைக் கலவையாக்கி, கதையும் ஆக்கி மனித மனதின் மென்மையான பக்கங்களை வருடிச்செல்கிறார் ஜேகே. இறுதியில் ஐஹோமின் உதவியோடு, சங்கப்பாடல்களைக் குறிப்புகளாக வைத்து வெள்ளியை சென்றடையும் கோடன். வரும் ஆண்டுகளில் வெள்ளிகளைத்தேடி கோடன்கள் மெய்நிகர் உலகில் அலையப்போவதென்னவோ நிஜம் (பேட்டண்ட் ரைட்ஸ் வாங்கி வைப்பது உசிதம்)

நன்றி.
உங்களின் அன்பான ரசிகன்,

ராஜா

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...