மொன்மார்த் (Montmartre) என்பது பாரிசின் மையத்திலிருந்து சற்றுத்தள்ளியிருக்கும் சிறு மலைப்பகுதியாகும். நவீனத்துவத்தின் முக்கிய பல கலைஞர்களான வான்ங்கோ, பிக்காசோ போன்றவர்களின் புகலிடமாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. பாரிஸ் நகரத்தின் அன்றாடங்களிலிருந்து சற்று வேறான, பொதுப் புத்தியிலிருந்து விலகிய கலையுள்ளங்களை ஊக்குவிக்கும் நகரமாக மொன்மார்த் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துள்ளது. பாரீசைப்போன்றில்லாமல் இங்குதான் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் மனிதர்கள் தன்னோடு நட்போடு பழகியதாக வான்ங்கோ குறிப்பிட்டிருக்கிறார். இங்கிருந்த ஒரு காலப்பகுதியில் எழுபது நாட்களில் எண்பது ஓவியங்கள்வரை மனுசன் வரைந்து தள்ளியிருக்கு. இம்பிரனிசம், கியூபிசம், சரயலிசம் போன்ற கலை வடிவங்கள் முகிழ்வதற்கு ஏது செய்த ஊரென்றும் இதனைச் சொல்லமுடியும்.
இன்றைக்கும் மொன்மார்த் நகரம் கலைஞர்களின் சொர்க்கமாகத்தான் திகழ்கிறது. இங்கு ஓவியர்களுக்கான திடல் ஒன்று காலை வேளைகளில் உயிர் பெறுகிறது. பல்வேறு ஓவியர்கள் அங்கு உட்கார்ந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை நாம் நேரடியாக கண்டு வியக்கலாம். அவர்களின் கண்களும் விரல்களும் ஒருசேர இணைந்து இயங்கும் அழகையும் உடல் மொழிகளையும் அவ்வப்போதான அவர்களின் கோபங்களையும்கூட பார்த்து இரசித்துக்கொண்டேயிருக்கமுடியும். ஒரு ஓவியரிடம் நீங்கள் பாரிசைச் சேர்ந்தவரா என்று ஜீவி கேட்டபோது, இல்லை, நான் மொன்மார்த்தன் என்று பெருமையோடு அவர் பதிலளித்தார். அது தன் ஊர்மீதான ஒருவரின் பெருமை கிடையாது. பாரிசின் பொதுப்புத்திக்கு நாங்கள் மாற்றானவர்கள் என்பதை உணர்த்தவே அவர் அப்படிச் சொல்லியிருந்தார். தன் கலையும் அப்படியானது என்பது அதன் உள்ளர்த்தம். கலைஞர்களின் கர்வம் என்றைக்கும் வெற்றும் பெருமைகளால் உருவானதல்ல.
வான்ங்கோ பற்றிய குறிப்புகளில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. தன் திறன் மீதான மதிப்பீடுகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாத காலகட்டத்தில்தான் அவருடைய படைப்புத்திறன் எல்லைகளைத் தாண்டி விரிய ஆரம்பித்தது என்று அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கணம் பிக்காசோவின் காட்சியத்தில் எழுதப்பட்டிருந்த புகழ்பெற்ற ஜேர்மனிய ஓவியரான ஓட்டோ டிக்ஸ் அவர்களின் வாசகமும் வந்து இணைந்துகொள்கிறது.
Comments
Post a Comment