Skip to main content

கலைஞர்களின் சொர்க்கம்



மொன்மார்த் (Montmartre) என்பது பாரிசின் மையத்திலிருந்து சற்றுத்தள்ளியிருக்கும் சிறு மலைப்பகுதியாகும். நவீனத்துவத்தின் முக்கிய பல கலைஞர்களான வான்ங்கோ, பிக்காசோ போன்றவர்களின் புகலிடமாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. பாரிஸ் நகரத்தின் அன்றாடங்களிலிருந்து சற்று வேறான, பொதுப் புத்தியிலிருந்து விலகிய கலையுள்ளங்களை ஊக்குவிக்கும் நகரமாக மொன்மார்த் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துள்ளது. பாரீசைப்போன்றில்லாமல் இங்குதான் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் மனிதர்கள் தன்னோடு நட்போடு பழகியதாக வான்ங்கோ குறிப்பிட்டிருக்கிறார். இங்கிருந்த ஒரு காலப்பகுதியில் எழுபது நாட்களில் எண்பது ஓவியங்கள்வரை மனுசன் வரைந்து தள்ளியிருக்கு. இம்பிரனிசம், கியூபிசம், சரயலிசம் போன்ற கலை வடிவங்கள் முகிழ்வதற்கு ஏது செய்த ஊரென்றும் இதனைச் சொல்லமுடியும்.

இன்றைக்கும் மொன்மார்த் நகரம் கலைஞர்களின் சொர்க்கமாகத்தான் திகழ்கிறது. இங்கு ஓவியர்களுக்கான திடல் ஒன்று காலை வேளைகளில் உயிர் பெறுகிறது. பல்வேறு ஓவியர்கள் அங்கு உட்கார்ந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை நாம் நேரடியாக கண்டு வியக்கலாம். அவர்களின் கண்களும் விரல்களும் ஒருசேர இணைந்து இயங்கும் அழகையும் உடல் மொழிகளையும் அவ்வப்போதான அவர்களின் கோபங்களையும்கூட பார்த்து இரசித்துக்கொண்டேயிருக்கமுடியும். ஒரு ஓவியரிடம் நீங்கள் பாரிசைச் சேர்ந்தவரா என்று ஜீவி கேட்டபோது, இல்லை, நான் மொன்மார்த்தன் என்று பெருமையோடு அவர் பதிலளித்தார். அது தன் ஊர்மீதான ஒருவரின் பெருமை கிடையாது. பாரிசின் பொதுப்புத்திக்கு நாங்கள் மாற்றானவர்கள் என்பதை உணர்த்தவே அவர் அப்படிச் சொல்லியிருந்தார். தன் கலையும் அப்படியானது என்பது அதன் உள்ளர்த்தம். கலைஞர்களின் கர்வம் என்றைக்கும் வெற்றும் பெருமைகளால் உருவானதல்ல.
வான்ங்கோ பற்றிய குறிப்புகளில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. தன் திறன் மீதான மதிப்பீடுகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாத காலகட்டத்தில்தான் அவருடைய படைப்புத்திறன் எல்லைகளைத் தாண்டி விரிய ஆரம்பித்தது என்று அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கணம் பிக்காசோவின் காட்சியத்தில் எழுதப்பட்டிருந்த புகழ்பெற்ற ஜேர்மனிய ஓவியரான ஓட்டோ டிக்ஸ் அவர்களின் வாசகமும் வந்து இணைந்துகொள்கிறது.
நீங்கள் தற்போது செய்யும் பணி என்பது உணமையில் அடுத்த நூற்றாண்டுக்கானது. சமகாலத்து அதிகாரத்துக்கும் பொதுப்புத்திக்கும் நீங்கள் எப்போதுமே ஒரு பிசாசாகவும் அருவருக்கத்தக்கவராகவும்தான் திகழ்வீர்கள்.











Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...