ஜாக்கு லூயி தாவித் வரைந்த நெப்போலியனின் பதவியேற்பு ஓவியம் அப்படிப்பட்டது.
இந்த ஓவியத்தைப் பாரிசின் லூவர் நூதன சாலையில் கண்ணுற்றபோது முதலில் அதன் பிரமாண்டமும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் பெரும் வியப்பையே உண்டு பண்ணின. 1804ம் ஆண்டு நிகழ்ந்த தனது பதவியேற்பு வைபவத்தை ஆவணப்படுத்தி ஓவியமாக்குமாறு நெப்போலியன் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாவித் இந்த ஓவியத்தை ஆரம்பித்திருக்கிறார். புகழ்பெற்ற நொஸ்றடாம் தேவாலயத்தில் நிகழ்ந்த அந்தப் பதவி ஏற்பில் தாவிதும் கலந்துகொண்டு ஓவியத்துக்கான குறிப்புகளையும் சில வரைபடங்களையும் உடனேயே வரைந்து, பின்னர் ஆறடிக்குப் பத்தடி பிரமாண்ட கன்வாசில் இறுதி ஓவியத்தை வரையத் தொடங்குகிறார். மூன்று வருடங்கள் கழித்து அந்த முயற்சி பூரணமாகியபோது, நெப்போலியன் தனக்கு முன்னே முழந்தாளிட்டு உட்கார்ந்திருக்கும் மனைவி ஜோசபினுக்கு மகாராணிக்கான மகுடம் சூடும் காட்சியே ஓவியமாக்கப்பட்டிருந்தது.
வரலாறு சொல்லப்படும்போதே புனைவாகும் புள்ளி அங்கிருந்தே ஆரம்பிக்கிறது.
இந்த ஓவியத்தைப் பார்க்கும் எவருக்கும் முதலில் ஏற்படக்கூடிய கேள்வி, நெப்போலியனின் பதவி ஏற்பில் எதற்காக அவனுக்கு மகுடம் சூட்டும் காட்சி இடம்பெறாமல் ஜோசபினுக்கு கிரீடம் சூட்டும் காட்சி இடம்பெறுகிறது என்பதுதான். தாவிதும் ஆரம்பத்தில் நெப்போலியனுக்குக் கிரீடம் சூட்டப்படும் காட்சியைத்தான் வரைந்திருந்தார். ஆனால் நெப்போலியன் அது வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்துவிட்டான். அந்த நிகழ்வில் நெப்போலியனுக்கு கிரீடத்தைச் சூட்டியது வேறு யாருமல்ல. சாட்சாத் நெப்போலியனே தனக்குத் தானே தன் தலையில் கிரீடத்தைச் சூட்டிக்கொண்டான். தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லா இந்தப் பூமியில் தன் தலையில் கிரீடத்தைச் சூட்டும் தகுதி வேறு யாருக்குமில்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது. தவிரப் பிரஞ்சுப் புரட்சியின் விளைபயிர்தான் நெப்போலியன் என்பதால் பாப்பரசர் தனக்குக் கிரீடம் சூடுவதை அவன் விரும்பவில்லை. இதனைச் சுட்டிக்காட்டுவதற்காக வத்திக்கானிலிருந்து பாப்பரசரை வேறு வரவழைத்து நிகழ்வில் ஒரு பக்கம் உட்கார்த்தி, அவர் கையால் கிரீடத்தை வாங்கி தன் தலையில் அவன் சூடிக்கொண்டான். ஆயினும் இரண்டு வருடங்கள் கழித்து ஓவியமாக அந்தக் காட்சியைப் பார்த்தபோது அவனுக்கே கொஞ்சம் அது அகங்காரச் செயலாகத் தோன்றியிருக்கவேண்டும். எதிர்காலம் தன்னை எப்படிப் பார்க்கும் என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதனால் ஓவியத்தை தான் தன் மனைவிக்கு மகுடம் சூடும் காட்சியாக மாற்றுமாறு அவன் தாவிதிடம் சொல்லிவிட்டான். ஒரு ஆட்சியாளன் மமதையுடன் தனக்குத்தானே முடிசூடும் காட்சி இப்போது ஒரு அரசன் அன்போடு தன் மனைவிக்கு முடிசூடுகின்ற மக்களைக் கவருகின்ற ராஜா ராணிக் காதல் கதையாகிவிட்டது. இன்றைக்கும் லூவர் காட்சியகத்தில் இந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தால், ஆரம்பத்தில் அவன் தனக்குத்தானே தலையில் கிரீடம் சூடும் காட்சி வரையப்பட்டுப் பின்னர் அது இப்போதைய வடிவத்துக்கு மாற்றப்பட்டதன் அடையாளங்கள் கொஞ்சம் புலப்படும். காட்சியை தாவீது மாற்றிய பின்னர் நெப்போலியனின் முதுகுக்குப் பின்னே ஒரு இடைவெளி வந்துவிட்டது. தாவித் அந்த இடத்தில் ஜூலியஸ் சீசரை இணைத்து நிரப்பிவிட்டார். அதாவது வரலாற்றில் ஜூலியஸ் சீசருக்கு அடுத்த இடம் நெப்போலியனுக்காம். பக்கத்தில் பாப்பரசர் அடக்கமாக உட்கார்ந்திருப்பது கிருத்துவம் தன் ஆட்சியைக் கட்டுப்படுத்தாது என்ற நெப்போலியனின் உறுதியைக் காட்டுகிறது. அதன் நீட்சியாகத்தான் அந்த தேவாலயத்தினுள் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இஸ்லாமிய ஓட்டோமன் தூதுவரின் பிரசன்னமும் செருகப்பட்டிருக்கிறது. அந்த ஆள் நிகழ்வுக்கு வரவேயில்லை என்பதுதான் நிஜ வரலாறு.
காட்சியில் தேவாலய உப்பரிகையில் ஒரு பெண்மணி கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் அல்லவா? அவர்தான் நெப்போலியனின் தாயாரான மரியா. ஆனானப்பட்ட பாப்பரசரே அடங்கி ஒடுங்கி உட்கார்ந்திருக்கையில் நெப்போலியனின் தாயார் உப்பரிகைமீது சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து யாருமே மதிமயங்கிவிடவேண்டாம். அந்த மனிசி நெப்போலியனின் பதவியேற்பு வைபவத்துக்கே வராமல் புறக்கணித்துவிட்டது. அந்தக் கால கட்டத்தில் நெப்போலியனின் குடும்பத்துக்குள் நிறைய சச்சரவுகள் இருந்தன. சகோதரர்கள் பிணக்குப்பட்டார்கள். மரியாவுக்கு ஜோசபினையும் பிடிக்காது. ஜோசபின் ஏலவே திருமணம் முடித்துக் கணவனை இழந்தவர். அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருந்தன. ஜோசபின், நெப்போலியன் தம்பதியருக்கும் குழந்தைகள் இல்லை. அதனால் ஜோசபினுக்கு இராணிப்பட்டம் சூட்டப்படுவதையே மரியா வெறுத்தார். சுவாரசியமான செய்தி. நெப்போலியனின் இளைய தம்பி திருமணம் முடித்தது ஜோசபின் மகளைத்தான். அவனும் ஓவியத்தில் இருக்கிறான். அதேபோல ஓவியத்தில் ஜோசபினுக்கு அருகில் காட்சியளிக்கும் நெப்போலியனின் சகோதரிகள் உண்மையில் நிகழ்வின்போது ஒதுங்கியே இருந்தார்கள். சொன்னாபோல பொதுவாக ஓவியர்கள் தம் ஓவியத்தின் மூலையில் கையொப்பம்தான் இடுவார்கள். ஆனால் இங்கே தாவிது கையொப்பத்துக்குப் பதிலாக தன்னையும் உப்பரிகையின் ஒரு மூலையில் பாத்திரமாக இணைத்துவிட்டார்.
இந்த ஓவியத்தில் மறைக்கப்பட்டிருக்கும் பெரும் வரலாற்று முரண் நகை இதில் தொங்கும் திரைச்சீலைகளும் பின்னணியில் காட்டப்படும் சுவர்களும்தான்.
1789ல் ஆரம்பித்து 1799ல் முடிவடைந்த பிரெஞ்சின் மக்கள் புரட்சியின்போது அரச, மத அதிகாரங்கள் பெரும்பாலும் குறிவைத்துத் தாக்கப்பட்டன. பிரபலமான நொஸ்றடாம் தேவாலயம்கூட இந்தத் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. அங்கிருந்த சிலைகள் எல்லாம் புரட்சியாளர்களால் சேதமாக்கப்பட்டன. இது ஒரு மத அதிகாரம் இன்னொரு மத அதிகாரத்தைத் துவம்சம் செய்த சம்பவமில்லை. மதம் தம்மீது செய்யும் அதிகாரத்தை எதிர்த்து புரட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை. புரட்சிக்குப் பின்னர் தேவாலயத்தைப் பகுத்தறிவுக் கோயில் (Temple of Reason) என்றுகூட பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். புரட்சியின்போது அங்கிருந்த அரச குடும்பம் மொத்தமாகக் கலைக்கப்பட்டு மதகுருமார்களிடமிருந்த ஆதிக்கமும் பறிக்கப்பட்டது. பிரான்சுக் குடியரசு உருவாக்கப்பட்டது. ஆயினும் குடியரசினால் ஒரு நிலையான ஆட்சியை அமைக்க முடியவில்லை. ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் ஆட்சியை மூழ்கடித்தன. புரட்சியை முறியடிக்க எதிரிகள் முனைகிறார்கள் என்று தம்மை எதிர்த்தவர்களை எல்லாம் அவர்கள் சிரச்சேதம் செய்தார்கள். அதில் சில ஆரம்பப் புரட்சியாளர்களும் அடக்கம். ஜோர்ஜஸ் டாண்டன் என்பவர் பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடிகளில் ஒருவர். அவரும் ஈற்றில் புரட்சிக்கு எதிரானவர் என்று சிரம் கொய்யப்பட்டார். சொல்ல மறந்துவிட்டேனே. நெப்போலியனின் மனைவி ஜோசபினின் முதல் கணவரும் இப்படிச் சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் லிஸ்டில் அடக்கம்.
இந்தக் களேபரத்திலிருந்துதான் நெப்போலியன் உருவாகிறான். பிரெஞ்சின் புரட்சிப்படையில் ஜெனரலாக இருந்தவன். மக்களாட்சிக்காகக் குரல் கொடுத்தவன். கொஞ்சம் கொஞ்சமாக நாசூக்காக அதிகாரங்களைத் தன் கட்டுக்குள் கொண்டுவருகிறான். நாடு முழுதுமே அவனது கட்டுக்குள் வருகிறது. மறுபடியும் அவனது குடும்பத்தின் மன்னராட்சியைத் தோற்றுவிக்க மக்களிடையே சர்வசன வாக்கெடுப்பு நிகழ்த்தப்படுகிறது. வாக்கெடுப்பின் பெண்கள் கலந்துகொள்ள முடியாது. குடியேறிகளுக்கும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. ஈற்றில் 99.93% வாக்குகள் நெப்போலியனுக்கு சாதகமாகக் கிடைத்தன. ஆம் 99.93%. வெறும் இரண்டாயிரம் வாக்குகள்தான் எதிராக விழுந்தன. வாக்கெடுப்பு முறைகேடாக நிகழ்ந்தது என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஒரு சனநாயக முறைப்படி மன்னராட்சியை உருவாக்குகிறேன் என்ற அபத்த நாடகம் முடிவடைந்து, கடைசியில் நெப்போலியன் தன்னைத்தானே மாமன்னனாக முடிசூடிக்கொள்கிறான். அதுவும் நொஸ்ரடாம் தேவாலயத்தில் வைத்து. அங்கு புரட்சியின்போது இடித்து அழிக்கப்பட்ட சிலைகளையும் ஓவியங்களையும் அதன் மத்தியகால கோத்திக் கலைவடிவங்களை மூடி மறைத்து திரைச்சீலைகளைக் கட்டி, அந்தத் தேவாலயத்தையே அரண்மனைபோல வடிவமைத்துத்தான் அவனது முடிசூட்டு வைபவம் நிகழ்ந்திருக்கிறது.
அரசு அதிகாரத்தை எதிர்த்து வெடித்த மக்கள் புரட்சியிலிருந்து எழுந்த ஒருத்தன், தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் கொன்று தொங்கவிட்டு, ஈற்றில் தன்னைத்தானே மாமன்னனாக முடி சூடிக்கொள்ளும் இந்த முரண்நகை பெரும் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் வரலாறு முழுதும் இது நிகழ்ந்தே வந்திருக்கிறது. தாவிது தன் ஓவியத்தில் பலதை உருவாக்கி, வரலாற்றை மாற்ற முயன்றது மாத்திரமின்றி, பலதை வரையாமல் தவிர்த்து, வரலாற்றை மறைக்கவும் முயன்றிருக்கிறார். வரலாறு ஒரு புனைவு எனில், கலைகள் பேசும் வரலாறு சமயத்தில் மீபுனைவையும் விஞ்சிவிடவல்லவை.
அப்படியானால் நெப்போலியனின் பதவியேற்பு ஓவியத்தினூடாக நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்தான் என்ன?
வரலாற்றை அறிவுத்தேடலுக்காகத்தான் நாம் ஆராயவேண்டும். அப்போதும் அது இத்தனை ஆண்டுகளில் பல புனைவுகளால் உள்வாங்கப்பட்டது என்ற புரிதல் நம்மிடத்தில் இருத்தல் வேண்டும். வரலாற்றினூடாக நாம் பெருமைப்படுவதிலும் அர்த்தங்கள் ஏதுமில்லை. ஒரு மொழி உலகத்தில் மூத்தது என்பதிலோ, பல மொழிகளுக்குத் தாய் என்பதிலோ பெருமைப்படுவதில் என்ன பலன் உண்டு? நாகரிக மாற்றத்தினூடு மொழி மருவுவதும் புதிய மொழிகள் தோன்றுவதும் இயல்பே. என் இனம் உன் இனத்திலும் மூத்தது என்பதும் அபத்தமான வாதம்தான். முன்னோர்கள் பற்றிய பெருமையும் அப்படியானதே. அவர்களின் இலட்சணங்கள் பூசி மெழுகப்படாமல் வரலாற்றில் பதிவாகியிருப்பின் இன்றைக்குச் சந்தி சிரித்திருக்கும்.
இன்னொன்று அதிகாரம் பற்றியது. மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கும் சூழலில் அதனை எதிர்த்து எப்படியும் போராட்டங்கள் கிளம்பியே தீரும். அதன் வெற்றியை அப்போதைய சமூக, அரசியல் சூழல்களும் மக்களின் ஓர்மமும் தீர்மானிக்கின்றன. அப்படியே அந்தப் போராட்டங்கள் வெற்றி பெற்றாலும், அடுத்த கணமே நிலைத்த, சுபிட்சமான மக்கள் ஆட்சி மலர்ந்து விடும் என்று நினைப்பது என்பது அபத்தத்திலும் அபத்தம். அங்குமே அதிகார வெறியோடு இருக்கும் சிலர் ஆட்சியைப் பிடிக்கவே முயற்சி செய்வர். அதிகாரம் தன்னை வலுவாக வைத்திருக்க எதையும் செய்யக்கூடியது. சிலவேளை அது தன் குடும்பப் பரம்பரையைப் பயன்படுத்தும். இல்லாவிடில் மதத்தைப் பயன்படுத்தும். அல்லது மொழியை. இனத்தை. நிலத்தை. இவையெல்லாம் பயனற்றுப் போகையில் இவற்றுக்கெதிரான புரட்சியையே அது பயன்படுத்த வல்லது. எல்லாமே அதிகாரத்துக்கு வெறும் கருவிதான்.
நெப்போலியன் அதனைத்தான் செய்தான். புரட்சியில் குளிர் காய்ந்து, அதனை நைச்சியமாகப் பயன்படுத்தி, தன்னையே அவன் அதிகார மையமாக்கிக்கொண்டான். மக்கள் எழுச்சியும் புரட்சியும் தேவையானவைதான். ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது என்பது மானுட நீதி. தருமம். ஆனால் அந்த மக்கள் கூட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றிய அடுத்த கணமே நமக்குள் எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பிக்கவேண்டும். நாம் ஆதரித்த ஒரு குழு அதிகாரத்திலிருக்கிறது என்பதால், அதன்மீது ஒரு மென்போக்கைக் காட்டி, அது தவறு செய்யும்போதெல்லாம் அதற்காகச் சமாளிப்புகள் செய்து வாளாவிருந்தால், திடீரென்று ஒருநாள் அது முன்னதிலும் கொடூர அதிகாரமாக நிமிர்ந்து நின்று நம்மையே விழுங்கிவிடும் சூழல் உருவாகிவிடும்.
ஒரு புற நகர்ப்பகுதியில் தமக்கு நிகழும் கொடுமைகளைத் தாளாமல் தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து செய்த புரட்சி ஈற்றில் இப்படியான ஒரு பதவியேற்பு ஓவியத்தில் வந்து முடியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கையைத்தான் இந்தக் காட்சி நமக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.
***
Comments
Post a Comment