Skip to main content

அந்தி மழை பொழிகிறது


அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.

ஒரு பார்வையற்றவனுக்கு எப்படித் தன் காதலியின் முகம் மழைத்துளிகளில் தெரியமுடியும் எனப் பலர் இப்பாடலை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் இவ்வரிகளை அவ்வாறான நேர்கோட்டு அர்த்தத்தில் அணுகக்கூடாது என்று நினைக்கிறேன்.
பகல் முழுதும் வெயில் சுட்டுக்கிடக்கும் காலத்தில் அந்திப்பொழுது இதத்தினைக் கொணரும். அந்த இதத்தோடு மழையும் சேரும்போது அதன் உணர்வே அலாதியானது. அந்திப்போழுது ஆதலால் மறுநாள் சூரியன் எழும்வரை இரவெல்லாம் நீடிக்கக்கூடிய இதம் அது.
இப்போது பார்வைப்புலனற்ற காதலில் வசப்பட்ட ஒருவனின் கோணத்திலிருந்து யோசித்துப்பாருங்கள்.
இத்தனை காலமும் மதிய வெயில் சுட்டு வரண்டுபோய்க் கிடந்தவன் நான். அந்திப்பொழுது எனக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. அப்போது பெய்யும் மழையின் துளிகள் என் உடலை வருடிச்செல்கின்றன. அவற்றில் உன் முகத்தை நான் அறிகிறேன். துளிகளின் ஸ்பரிசத்தை நீ கொடுக்கும் முத்தங்களாக உணர்கிறேன். காதலற்று உலர்ந்து கிடந்த நிலத்தில் பொழிந்த அந்தி மழையின் அணைப்பு நீ. பார்வையற்றவனுக்கு எழக்கூடிய காதலின் உன்மத்தம். அதுதான்,
அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.
இது கவிதை இல்லையா?
நிற்க.
கவிஞர் வைரமுத்துமீது பலராலும் சுமத்தப்பட்ட அதிகாரப் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. அவை கண்டிக்கப்படவேண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நாம் நிற்பதும் முக்கியமானது. அதுவும் இத்தனை பெண்கள் துணிந்து முன்வந்து அக்குற்றச்சாட்டுகளைச் சுமத்தியபின்னர்.
வைரமுத்துவின் கவிதையில் பிழை கண்டு அதனை அவதூறு செய்ய முயற்சிப்பது அந்தப் பெண்களின் போராட்டத்தையும் குற்றச்சாட்டுகளையும் நீர்த்துப்போகவே வழிசமைக்கும். வைரமுத்துவின் கவிதைகளைப்போலவே இக்குற்றச்சாட்டுகளும் அவருடைய legacy. அவர்மீதான குற்றச்சாட்டுகளால் வெகுண்டெழுந்து அவரது வரிகள் கவிதைகளே இல்லை என்பதும் இலமே. அவர் கவிதைகளின்மீதான பேரபிமானத்தால் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுதலிப்பது அதனிலும் இலமே. இரண்டையும் அதனதன் தளத்தில் நின்று அணுகுவதே ஒரு சமூகப் பிரக்ஞை உடைய கலை இரசிகரின் மாண்பாக இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...