அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.
ஒரு பார்வையற்றவனுக்கு எப்படித் தன் காதலியின் முகம் மழைத்துளிகளில் தெரியமுடியும் எனப் பலர் இப்பாடலை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் இவ்வரிகளை அவ்வாறான நேர்கோட்டு அர்த்தத்தில் அணுகக்கூடாது என்று நினைக்கிறேன்.
இப்போது பார்வைப்புலனற்ற காதலில் வசப்பட்ட ஒருவனின் கோணத்திலிருந்து யோசித்துப்பாருங்கள்.
இத்தனை காலமும் மதிய வெயில் சுட்டு வரண்டுபோய்க் கிடந்தவன் நான். அந்திப்பொழுது எனக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. அப்போது பெய்யும் மழையின் துளிகள் என் உடலை வருடிச்செல்கின்றன. அவற்றில் உன் முகத்தை நான் அறிகிறேன். துளிகளின் ஸ்பரிசத்தை நீ கொடுக்கும் முத்தங்களாக உணர்கிறேன். காதலற்று உலர்ந்து கிடந்த நிலத்தில் பொழிந்த அந்தி மழையின் அணைப்பு நீ. பார்வையற்றவனுக்கு எழக்கூடிய காதலின் உன்மத்தம். அதுதான்,
அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.
இது கவிதை இல்லையா?
நிற்க.
கவிஞர் வைரமுத்துமீது பலராலும் சுமத்தப்பட்ட அதிகாரப் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. அவை கண்டிக்கப்படவேண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நாம் நிற்பதும் முக்கியமானது. அதுவும் இத்தனை பெண்கள் துணிந்து முன்வந்து அக்குற்றச்சாட்டுகளைச் சுமத்தியபின்னர்.
வைரமுத்துவின் கவிதையில் பிழை கண்டு அதனை அவதூறு செய்ய முயற்சிப்பது அந்தப் பெண்களின் போராட்டத்தையும் குற்றச்சாட்டுகளையும் நீர்த்துப்போகவே வழிசமைக்கும். வைரமுத்துவின் கவிதைகளைப்போலவே இக்குற்றச்சாட்டுகளும் அவருடைய legacy. அவர்மீதான குற்றச்சாட்டுகளால் வெகுண்டெழுந்து அவரது வரிகள் கவிதைகளே இல்லை என்பதும் இலமே. அவர் கவிதைகளின்மீதான பேரபிமானத்தால் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுதலிப்பது அதனிலும் இலமே. இரண்டையும் அதனதன் தளத்தில் நின்று அணுகுவதே ஒரு சமூகப் பிரக்ஞை உடைய கலை இரசிகரின் மாண்பாக இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான எண்ணம்.
Comments
Post a Comment