Skip to main content

நிகழ்ச்சி அறிவித்தல் - எழுத்துப் பயிற்சிப் பட்டறை

                                          

வணக்கம் நண்பர்களே,

மெல்பேர்னில் வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி 'எழுத்துப் பயிற்சிப் பட்டறை' ஒன்றை ஒழுங்கமைத்துள்ளோம்.

நம்முடைய மெல்பேர்ன் வாசகர் வட்டத்திலாகட்டும், இளவேனில் சஞ்சிகைக் கலந்துரையாடல்களாகட்டும், அல்லது பொதுவான சந்திப்புகளாகட்டும், எல்லாவிடங்களிலும் எழுத்து பற்றிய உரையாடல்கள் அடிக்கடி எழுவதுண்டு. பலர், ‘தம்மிடமும் சொல்வதற்குக் கதைகள் பல உண்டு, ஆனால் எழுத உட்கார்ந்தால் வரிகள் வந்து தன்னாலே விழுவதாயில்லை’ என்று ஆதங்கப்படுவார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக இளவேனில் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுவதால், புதிதாக எழுத வருபவர்களின் ஆரம்பச் சிக்கல்களையும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. பல தடவைகள் தனிப்பட்ட ரீதியில் நண்பர்களோடு இவை பற்றி ஆழமாகக் கலந்துரையாடியுமிருக்கிறேன். இப்போது இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு பட்டறைப் பயிற்சியின் ஊடாக எழுத்திற்கான வெள்ளோட்டத்தைப் பலரிடத்தில் செய்துபார்க்கலாம் என்ற ஆவலில்தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

எழுத்து என்பது ஒரு தனித்த செயற்பாடு. அது தன்னினின்று முகிழ்வது. வற்றா ஊற்றைப்போல இறைக்க, இறைக்கப் பெருகிக்கொண்டே இருப்பது. ஆயினும், அந்த முதல் ஊற்றைக் கண்டடைய ஒரு கிணறு தோண்டுதல் அவசியமல்லவா? இராசாளிக் கழுகே ஆனாலும் அதனுடைய முதற் பறப்பில் ஒரு தயக்கமும் தள்ளாட்டமும் இருந்திருக்கும்தானே? அந்தப் புள்ளியை எப்படிக் கடந்தேறுவது என்பதற்கான ஒரு பட்டறைதான் இது.

எது எழுத்தாகிறது? எது எழுத்தாகாது? இத்துறையில் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? அடுத்த சொல்லைக் கண்டடைவது எவ்வாறு? போன்ற எழுத்தின் நுணுக்கங்களையும், இந்தச் செயல்பாட்டிற்கு உதவும் தொழில்நுட்பச் செயலிகளையும் பற்றி நானறிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

சுமார் 20-25 பேர் கொண்ட சிறு குழுவாக இருந்து, ஒவ்வொருவர் மீதும் பிரத்தியேகக் கவனம் செலுத்தும் வகையில் இந்த அரை நாள் அமர்வு அமையும். உணவு, அரங்கு வாடகை போன்ற செலவினங்களை ஈடுகட்டவும், வருகையை உறுதிப்படுத்தவும் சிறு கட்டணம் அறவிடப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் என்னையோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சாந்தி சிவகுமாரையோ  தொடர்புகொண்டு உங்கள் வருகையை விரைவில் உறுதிப்படுத்தினால், தயார்ப்படுத்தல்களைச் செய்வது இலகுவாக இருக்கும். நன்றி.

சந்திப்போம்.


Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?