Skip to main content

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

 

IMG_55332
அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதி அவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட!



கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர்.
கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர்.
இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர்.
உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!

சுடர்மிக்க அறிவுடனே இடம் தவறி பிறந்திட்ட
இடர் கண்ட மூக்கு நான். என் உரை கொஞ்சம் கேட்டிடுவீர்.
அறிஞரெல்லாம் கூடி இங்கே சிறந்த கவி பாடையிலே
அறுந்த என் கதையை சொல்லி அறுக்கபோறன் சகித்திடுவீர்!

சடைமுடியான் முடியிழந்து கொடுங்காடு எய்தினனே.
அவன் உடையாள், கொடி இடையாள் கூடவே வந்தனளே.
இளையவனும் காத்திருக்க இருவருமே பருகிட்ட – கோதாவரி
கரையருகே என்கோதாரியும் வந்தனளே.

25206-1324227430-0
வந்தவளும் மையலுற வரிசிலை அண்ணலுமே நின்றனனே.
நின்றவனை கொண்டவனாய் கண்டதுமே எண்ணினளே.
வெந்ததுவோ காமம். விளைந்ததுவோ மோகம்
மோகத்தின் பசலைத்தீ பொய்யின் சுவைபோல படர்ந்ததுவே.

கோமகனை தன் அழகில் யாசகனாய் மாற்றிடவே
பங்கயத்தின் மந்திரத்தால் (பியூட்டி)பார்லர் போயும் வந்தனளே.
பொன்மகளின் வண்ணமதில் மன்னவனும் தயங்கினனே
இங்கிவளும் வந்தனை நீ, எங்கனம்? என இயம்பினனே.

கேட்டவனின் காதினிலே காமுற்ற கதை சொல்லி
ஏற்றிடு நீ என்னை என்று நொய்யலும் பையநின்றாள்.
உண்டாட்டம் புரிந்தவனின் உள்ளார்த்தம் அறியாது
தப்பாட்டம் புரியஏனோ திண்டாட்டம் அன்பே? என்றாள்.

பன்னசாலை வெளியே வந்த பெண்ணரசி அழகை கண்டு
அடங்காத அழுக்காற்றால் அழகியைப்போய் அரக்கி என்றாள்.
கவர்ந்திவளை கொண்டுசென்று மறைத்திட்டால் – மன்மதனை
கந்தர்வம் புரிய இனி தடையில்லை என நினைத்தாள்.

சூர்ப்பனகை சூழ்ச்சியினை அறிந்திட்ட இளையானும்.
பேச்சுவார்த்தை இவளோடு பேதைமை என உணர்ந்தானே.
உடைவாளை உரிந்தானே. முடிபற்றி உதைத்தானே
முலைக்காம்பு காதிரண்டை மூக்கோடு அரிந்தானே

அரிகரனின் அவதாரம் தமக்கில்லை ஆனபின்னர்.
அரிந்தவனை மணந்திடவே அரக்கியவள் இசைந்தாளே.
சண்டைக்காரன் காலில்விழும் இந்தகால வழக்கம்போல – தனை
ஒறுத்தவனை காதலித்து, மீள, மூக்கறுபட்டு போனாளே!

மனிதஉரிமை மறுக்கும்மண்ணில் அறுந்துபட்ட பெண்மணிக்கு
மனுநீதி காத்தருள இராகவனும் மறந்தானே.
அவதார நோக்கத்தை அடைய வேறுவழியின்றி
அரசியல் போல் மூக்கறுத்து இராவணனை சென்றடைந்தானே.

தம்பியுடை மன்னவரின் சட்டாம்பிதனம் போல
அம்பி நீயும் செய்த செயல் அடுக்காது கண்டீரோ.
இன்றைக்கும் அன்றைக்கும் இதுவே எம் இழிவுநிலை
இதை சொல்லும் எவருக்குமே மூக் கறுபட்டஅவலநிலை.

மூக்கறுந்த பின்னாலும் மோகம் அடங்கும் நோக்கமில்லை
ஏக்கமுற்ற மூச்சினிலே இராமன் வாசம்எங்கும் நீக்கமில்லை.
மோகத்தின் வாசத்தை முகர்ந்து அவள் தொடர்வள் என்றோ
மூக்கரிந்து போட்டுவிட்டு காட்டினின்று நீங்கிவிட்டீர்?

அவளுக்கென்ன அரக்கியன்றோ? அடுத்த மூக்கை ஆக்கிடுவாள்.
அறுந்து கிடக்கும் எனைஎடுத்து எவன் முகத்தில் ஓட்டிடுவான்?
ஆரியனும் அறுத்த புழை, ஊடாக ஓடும் சொரி
ஆயிராமாம் ஆண்டு கழிந்தும் இன்றும் ஆறாக ஓடுதடி.

ஆற்றருகே அனாதையாய் அரற்றும்என்னை விட்டுவிட்டு
கம்பநாடன் காப்பியமும் கடந்து சென்று போனதுவே.
ஆழிதாண்டி சீதையினை ஈழம் சென்று மீட்டபின்னும்
மூளி என்னை மீட்காது புய்ப்பகத்தில் பறந்ததுவே.

அருந்தகையை ஆசையுற்ற தவறு என்ன சொல்லீரோ?
பரம்பொருளில் மயங்காதோர் தரணியிலே எவருமுண்டோ?
ராதையோடு கோபியரை கோகுலத்தில் கொண்டவரே – சீதையோடு
மாதர் இரண்டை சிந்தை ஏற்றமாட்டீரோ?

பிரிந்துபோன காதலரின் இறுதி வார்த்தை துடிப்பு போல
அணைந்துபோன அகல்விளக்கின் எஞ்சியிருக்கும் திரிபோல
இறுமாப்பாய் வாழ்ந்து வீழ்ந்த ஈழத்தமிழன் நிலை போல – ராமா
மூக்கறுந்து கிடக்கேன் நான். மீட்டுப்போக வருவாயோ?

IMG_55192
அகலிகையின் விமோசனத்தை அடிஎடுத்து முடித்துவைத்தாய்.
அணைகட்ட மணல் கொடுத்த அணிலுக்கும் அருள் செய்தாய்
அய்யனுனை கண்டுவிட்டே சபரியவள் முத்தி எய்தாள் – ராமா
அறுந்த இந்த மூக்கைமீட்க அவ|தாரம் ஒன்று எடுப்பாயா?

அரிந்த நாசி சாபத்தாலே அடைந்த நாசம் கொஞ்சமில்லை
பிரிந்த தேவி தேடி நீயும் அலையா இடம் எங்குமில்லை
பறந்து திரிந்த சடாயுவும் இறந்துபட்டு போயினனே
புறத்து நின்று வாலியை வென்று தீரா.. பழி சுமந்தாயே

வானுயர்ந்த இலங்கை தேசம் வால் நுனியில் எரிந்ததுவே.
சாமகானம் இசைத்த வேந்தன் தலைகள் பத்தும் சிதைந்ததுவே
காடு விட்டு நாடு போயும் கண்டகோலம் என்ன சொல்லும்? – நீரு
மீட்டெடுத்த சீதை கூட சென்றுவிட்டாள் காடு மீண்டும்.

மூக்கறுத்த சாபம் உமை முச் சந்தியிலே நிறுத்தியதே – மீண்டும்
பிறப்பெடுத்து வந்துஎந்தன் கோபத்தினை குறைப்பீரோ?
வரும்போது சீதையினை மிதிலையிலே விட்டுவாரும்
அவசரக்காரனையும் அயோத்தியிலே இட்டுவாரும்.

அம்பு ஒன்றும் இங்கு வேண்டாம். அன்புமட்டும் கொண்டுவாரும்.
அண்ணலோட அவதாரத்தில் இனி அகிம்சை கொஞ்சம் சொல்லவேண்டும்.
அரக்கியோட சூழ்ச்சிக்கெல்லாம் மூக்கை இனி அறுக்காதீம்.
அன்பேசிவம் என்று (அவள்) மனதைதிருத்த முயற்சி செய்யும்.

இல்லுக்காக வில்லெடுக்கும்
வில்லங்கம் இனி வேண்டாம்.
இம்சை என்று பெண்ணொன்றை
பங்கப்படுத்தும் நிலை வேண்டாம்.

கங்கை கொண்ட சிவனை போல
பெண்ணை உந்தன் கொண்டை மேலே
தங்க இடம் கொடுத்திருந்தால்
சண்டை ஏதும் வந்திராதே!

போக்குமிடம் வழி இன்றி புலம்பலுற்ற கவியன்றி
வாக்கு சொன்ன மூக்கின் கதையில்  - மனதை
தாக்க எதுவும் சொல்லவில்லை.
தப்பு என்றால் மன்னித்திடும். நாக்கை வேண்டின் நறுக்கிவிடும்.
வம்பு என்றால் சொல்லிவிடும்.
பாவம்... தம்பிதானே விட்டுவிடும்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏனைய கவிதைகள்
உயிரிடை பொதிந்த ஊரே!
மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!
காத்திருப்பேனடி!
எங்கள் வீட்டில் இலக்கியம் ...

Popular posts from this blog

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு

  கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான். 'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ?' எனும்; 'அயலோர் யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். “ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்ப...

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

  என் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

சப்புமல் குமாரயாவின் புதையல்

  குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். "யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு" கிணற்றடியில்  நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I LOVE YOU. அவள் கொஞ்சம் ஒபின் டைப். திருப்பி 143 என்றாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. அன்றைக்கே கல்யாணியில் பெடியளுக்கு ஸ்பெஷல் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள்தான். அடுத்தநாள் வந்து விளக்கம் கொடுத்தாள். 143 என்றால் அவள் அகராதியில் I HATE YOU வாம். இப்படி நிறையச் சொல்லவேண்டும்.  ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல முடியாது. காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்தக்கதையில் அடுத்த இரண்டு வரிகளில் "உம்மளை ஒருக்கா பி.கே சேர் வரச்சொன்னார்...