Skip to main content

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

 

IMG_55332
அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதி அவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட!



கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர்.
கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர்.
இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர்.
உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!

சுடர்மிக்க அறிவுடனே இடம் தவறி பிறந்திட்ட
இடர் கண்ட மூக்கு நான். என் உரை கொஞ்சம் கேட்டிடுவீர்.
அறிஞரெல்லாம் கூடி இங்கே சிறந்த கவி பாடையிலே
அறுந்த என் கதையை சொல்லி அறுக்கபோறன் சகித்திடுவீர்!

சடைமுடியான் முடியிழந்து கொடுங்காடு எய்தினனே.
அவன் உடையாள், கொடி இடையாள் கூடவே வந்தனளே.
இளையவனும் காத்திருக்க இருவருமே பருகிட்ட – கோதாவரி
கரையருகே என்கோதாரியும் வந்தனளே.

25206-1324227430-0
வந்தவளும் மையலுற வரிசிலை அண்ணலுமே நின்றனனே.
நின்றவனை கொண்டவனாய் கண்டதுமே எண்ணினளே.
வெந்ததுவோ காமம். விளைந்ததுவோ மோகம்
மோகத்தின் பசலைத்தீ பொய்யின் சுவைபோல படர்ந்ததுவே.

கோமகனை தன் அழகில் யாசகனாய் மாற்றிடவே
பங்கயத்தின் மந்திரத்தால் (பியூட்டி)பார்லர் போயும் வந்தனளே.
பொன்மகளின் வண்ணமதில் மன்னவனும் தயங்கினனே
இங்கிவளும் வந்தனை நீ, எங்கனம்? என இயம்பினனே.

கேட்டவனின் காதினிலே காமுற்ற கதை சொல்லி
ஏற்றிடு நீ என்னை என்று நொய்யலும் பையநின்றாள்.
உண்டாட்டம் புரிந்தவனின் உள்ளார்த்தம் அறியாது
தப்பாட்டம் புரியஏனோ திண்டாட்டம் அன்பே? என்றாள்.

பன்னசாலை வெளியே வந்த பெண்ணரசி அழகை கண்டு
அடங்காத அழுக்காற்றால் அழகியைப்போய் அரக்கி என்றாள்.
கவர்ந்திவளை கொண்டுசென்று மறைத்திட்டால் – மன்மதனை
கந்தர்வம் புரிய இனி தடையில்லை என நினைத்தாள்.

சூர்ப்பனகை சூழ்ச்சியினை அறிந்திட்ட இளையானும்.
பேச்சுவார்த்தை இவளோடு பேதைமை என உணர்ந்தானே.
உடைவாளை உரிந்தானே. முடிபற்றி உதைத்தானே
முலைக்காம்பு காதிரண்டை மூக்கோடு அரிந்தானே

அரிகரனின் அவதாரம் தமக்கில்லை ஆனபின்னர்.
அரிந்தவனை மணந்திடவே அரக்கியவள் இசைந்தாளே.
சண்டைக்காரன் காலில்விழும் இந்தகால வழக்கம்போல – தனை
ஒறுத்தவனை காதலித்து, மீள, மூக்கறுபட்டு போனாளே!

மனிதஉரிமை மறுக்கும்மண்ணில் அறுந்துபட்ட பெண்மணிக்கு
மனுநீதி காத்தருள இராகவனும் மறந்தானே.
அவதார நோக்கத்தை அடைய வேறுவழியின்றி
அரசியல் போல் மூக்கறுத்து இராவணனை சென்றடைந்தானே.

தம்பியுடை மன்னவரின் சட்டாம்பிதனம் போல
அம்பி நீயும் செய்த செயல் அடுக்காது கண்டீரோ.
இன்றைக்கும் அன்றைக்கும் இதுவே எம் இழிவுநிலை
இதை சொல்லும் எவருக்குமே மூக் கறுபட்டஅவலநிலை.

மூக்கறுந்த பின்னாலும் மோகம் அடங்கும் நோக்கமில்லை
ஏக்கமுற்ற மூச்சினிலே இராமன் வாசம்எங்கும் நீக்கமில்லை.
மோகத்தின் வாசத்தை முகர்ந்து அவள் தொடர்வள் என்றோ
மூக்கரிந்து போட்டுவிட்டு காட்டினின்று நீங்கிவிட்டீர்?

அவளுக்கென்ன அரக்கியன்றோ? அடுத்த மூக்கை ஆக்கிடுவாள்.
அறுந்து கிடக்கும் எனைஎடுத்து எவன் முகத்தில் ஓட்டிடுவான்?
ஆரியனும் அறுத்த புழை, ஊடாக ஓடும் சொரி
ஆயிராமாம் ஆண்டு கழிந்தும் இன்றும் ஆறாக ஓடுதடி.

ஆற்றருகே அனாதையாய் அரற்றும்என்னை விட்டுவிட்டு
கம்பநாடன் காப்பியமும் கடந்து சென்று போனதுவே.
ஆழிதாண்டி சீதையினை ஈழம் சென்று மீட்டபின்னும்
மூளி என்னை மீட்காது புய்ப்பகத்தில் பறந்ததுவே.

அருந்தகையை ஆசையுற்ற தவறு என்ன சொல்லீரோ?
பரம்பொருளில் மயங்காதோர் தரணியிலே எவருமுண்டோ?
ராதையோடு கோபியரை கோகுலத்தில் கொண்டவரே – சீதையோடு
மாதர் இரண்டை சிந்தை ஏற்றமாட்டீரோ?

பிரிந்துபோன காதலரின் இறுதி வார்த்தை துடிப்பு போல
அணைந்துபோன அகல்விளக்கின் எஞ்சியிருக்கும் திரிபோல
இறுமாப்பாய் வாழ்ந்து வீழ்ந்த ஈழத்தமிழன் நிலை போல – ராமா
மூக்கறுந்து கிடக்கேன் நான். மீட்டுப்போக வருவாயோ?

IMG_55192
அகலிகையின் விமோசனத்தை அடிஎடுத்து முடித்துவைத்தாய்.
அணைகட்ட மணல் கொடுத்த அணிலுக்கும் அருள் செய்தாய்
அய்யனுனை கண்டுவிட்டே சபரியவள் முத்தி எய்தாள் – ராமா
அறுந்த இந்த மூக்கைமீட்க அவ|தாரம் ஒன்று எடுப்பாயா?

அரிந்த நாசி சாபத்தாலே அடைந்த நாசம் கொஞ்சமில்லை
பிரிந்த தேவி தேடி நீயும் அலையா இடம் எங்குமில்லை
பறந்து திரிந்த சடாயுவும் இறந்துபட்டு போயினனே
புறத்து நின்று வாலியை வென்று தீரா.. பழி சுமந்தாயே

வானுயர்ந்த இலங்கை தேசம் வால் நுனியில் எரிந்ததுவே.
சாமகானம் இசைத்த வேந்தன் தலைகள் பத்தும் சிதைந்ததுவே
காடு விட்டு நாடு போயும் கண்டகோலம் என்ன சொல்லும்? – நீரு
மீட்டெடுத்த சீதை கூட சென்றுவிட்டாள் காடு மீண்டும்.

மூக்கறுத்த சாபம் உமை முச் சந்தியிலே நிறுத்தியதே – மீண்டும்
பிறப்பெடுத்து வந்துஎந்தன் கோபத்தினை குறைப்பீரோ?
வரும்போது சீதையினை மிதிலையிலே விட்டுவாரும்
அவசரக்காரனையும் அயோத்தியிலே இட்டுவாரும்.

அம்பு ஒன்றும் இங்கு வேண்டாம். அன்புமட்டும் கொண்டுவாரும்.
அண்ணலோட அவதாரத்தில் இனி அகிம்சை கொஞ்சம் சொல்லவேண்டும்.
அரக்கியோட சூழ்ச்சிக்கெல்லாம் மூக்கை இனி அறுக்காதீம்.
அன்பேசிவம் என்று (அவள்) மனதைதிருத்த முயற்சி செய்யும்.

இல்லுக்காக வில்லெடுக்கும்
வில்லங்கம் இனி வேண்டாம்.
இம்சை என்று பெண்ணொன்றை
பங்கப்படுத்தும் நிலை வேண்டாம்.

கங்கை கொண்ட சிவனை போல
பெண்ணை உந்தன் கொண்டை மேலே
தங்க இடம் கொடுத்திருந்தால்
சண்டை ஏதும் வந்திராதே!

போக்குமிடம் வழி இன்றி புலம்பலுற்ற கவியன்றி
வாக்கு சொன்ன மூக்கின் கதையில்  - மனதை
தாக்க எதுவும் சொல்லவில்லை.
தப்பு என்றால் மன்னித்திடும். நாக்கை வேண்டின் நறுக்கிவிடும்.
வம்பு என்றால் சொல்லிவிடும்.
பாவம்... தம்பிதானே விட்டுவிடும்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏனைய கவிதைகள்
உயிரிடை பொதிந்த ஊரே!
மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!
காத்திருப்பேனடி!
எங்கள் வீட்டில் இலக்கியம் ...

Comments

  1. Very nice JK. I liked all the portions after //மனிதஉரிமை மறுக்கும்மண்ணில் அறுந்துபட்ட பெண்மணிக்கு
    மனுநீதி காத்தருள இராகவனும் மறந்தானே.//

    ReplyDelete
  2. very creative . தம்பியுடை மன்னவரின் சட்டாம்பிதனம் போல
    அம்பி நீயும் செய்த செயல் அடுக்காது கண்டீரோ.
    இன்றைக்கும் அன்றைக்கும் இதுவே எம் இழிவுநிலை
    இதை சொல்லும் எவருக்குமே மூக் கறுபட்டஅவலநிலை.

    ReplyDelete
  3. Sila Varikalil engalin varuththangalai konduvathu irukireengal........Nalla iruirathu Anna - Shaveetha

    ReplyDelete
  4. "பேசாப்பொருட்கள் பேசத்துணிந்தால்" என்று பலர் (பயத்தினால்/அறியாமையினால்) பேசாத பொருட்களை துணிந்து கவிபாடியதற்கு வாழ்த்துக்கள் (இப்படி பத்த வச்சி ரொம்ப நாளாச்சு...just kidding...Royal salute to your gutts). எனது சந்தேகங்கள் ‍‌கிழே:

    1. மனுநீதியும் மனிதஉரிமையும் ஒரே வகையானவையா? இன்று நடப்பவை மற்றும் (so-called) அரசியல் மேதைகள், மனிதஉரிமையாளர்கள் பேசுவது எல்லாம் "மனிதஉரிமை" என்பதை ஒரு குழப்பமான விஷயமாக்கிவிட்டது. அதில்லாம, எனக்கு மனுநீதி பற்றி ஒன்றும் தெரியாது.
    2. //நீரு மீட்டெடுத்த சீதை கூட சென்றுவிட்டாள் காடு மீண்டும்.// ஏன் சென்றார்? மனுநீதின்னு சொல்றாங்களே அதை காக்க சென்றாரோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி மோகன்.

      நான் மனுநீதி படிச்சதில்ல. ஆனா மனித உரிமைகள் அதில உள்ளடக்கப்பட்டு இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

      //ஏன் சென்றார்? //
      மனுநீதி காக்க மறந்ததால். இந்த இடத்தில் ஒன்றை சொல்லவேண்டும். கம்பர் இராமன் முடிசூட்டலோடு ராமாயணத்தை முடித்துவிட்டார். சீதை காடேகுவது வான்மீகியில் தான். ஆனா கவிதைல இதெல்லாம் பார்க்க ஏலாது!

      Delete
    2. Thanks for your reply. Honestly I did not expect it because even though the above mentioned are my genuine doubts, I understand that it is touchy subject. As I mentioned earlier, you bravely touched difficult topics which many people (including myself) prefer to avoid.

      Delete
  5. Mind blowing JK. Keep rocking.

    ReplyDelete
    Replies
    1. Thank you ... you forgot to leave your name.

      Delete
  6. u r another kannathasan, kavi kaalameham, KAMBAN.
    keep it up.

    siva

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த கொலைவெறி?

      Delete
  7. பல அழகிய பூக்கள் இழைந்து உருவான மாலை போல இருக்கிறது இந்த கவிதை. இதிலே வருகிற சூர்ப்பனகை, ராமன், இலக்குவன், இராவணன், சீதை என்ற எல்லா பாத்திரங்களும் கடந்துபோன ஒரு மைல் கல் போல் கிடக்கிறது அறுபட்ட மூக்கு. இந்த கவிதையில் சேர்க்கப்பட்டிருக்கும் நுண் அரசியல் கவிதையை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது. எனக்கு இந்த அறுபட்ட மூக்கு ஒரு ஆழமான படிமமாக புலப்படுகிறது. "அவளுக்கென்ன அரக்கியன்றோ? அடுத்த மூக்கை ஆக்கிடுவாள்.
    அறுந்து கிடக்கும் எனைஎடுத்து எவன் முகத்தில் ஓட்டிடுவான்?" என்கிற வரிகளில் மறக்கப்பட்டுவிட்ட சில தமிழ் உறவுகளை பார்க்கிறேன். யார் அறுத்தான் என்று தெரிந்தும், அவனிடமே கையேந்தும் அவல நிலை, வேறு வழியில்லாத வேற்று நம்பிக்கை என்று நீங்கள் காட்டும் மூக்கின் இயல்புகள் இன்றைய தமிழர் நிலையை குறிகாட்டுவதாக படுகிறது. கவிதையை அரங்கிலே ரசித்தேன், ஆனால் இந்த பொருள் புலப்பட சற்று நாளெடுத்தது. மொழியிலும், சந்தத்திலும் இன்னும் சற்று முதிர்ச்சி இருந்திருக்கலாமோ என்றொரு எண்ணம் இருக்கிறது, ஆனால் பொருளில் இது மணற்கேணி, எல்லா ஆழங்களிலும் உட்பொருட்கள் ஊறுகின்றன. முன் கதை சுருக்கம் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேதா....
      //மொழியிலும், சந்தத்திலும் இன்னும் சற்று முதிர்ச்சி இருந்திருக்கலாமோ என்றொரு எண்ணம் இருக்கிறது, //
      இது கைவசப்படுதில்லை ... பார்ப்போம் .. வாசிக்க வாசிக்க மாறலாம் என்று நினைக்கிறேன்.

      //முன் கதை சுருக்கம் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. //
      இது எனக்கும் தோன்றினது.. வழமை போல எழுதினா பிறகு எடிட் பண்ண மனம் கேட்க இல்ல :D

      நன்றி மீண்டும் உண்ட கருத்துக்கு ... யோசிச்சு எழுதினத ஒராள் வாசிச்சு சொல்லேக்க அது தனி சந்தோசம்.

      Delete
  8. அன்பானஜேகே,
    அறுபட்ட மூக்குக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் கவிதையை இப்போதுதான் முழுமையாகப் படித்தேன். மிக நன்றாக சிந்தித்திருக்கிறீர்கள். அழகாகவும் கொண்டு சென்றிருக்கிறீர்கள். சில இடங்களில் கவிதைக்கீற்றுகள் நன்றாக வந்து விழுந்திருக்கின்றன. மேடையில் நீங்கள் இந்தக் கவிதையை வாசிக்கும் நேரத்தில், பார்வையாளர்கள் அனைவராலும் கவிதையைப் பின்பற்றி வந்திருக்க முடியுமா என்னும் ஒரு சிந்தனை மட்டும் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பார்வையாளர்கள் நன்கு ரசித்தனரா..?
    அறுபட்டுக் கிழே விழுந்த மூக்கு என்னாயிற்று என்பதற்குக் கதையில் எந்தக் குறிப்பும் இல்லை. நீங்கள் மிகச் சரியாகத் தொட்டிருப்பதும் அறுந்த மூக்கு இராமன் வருகைக்குக் காத்திருப்பதாக அமைத்திருப்பதும் அழகு.
    அறுந்த மூக்கு என்னவானது அல்லது அதனால் நிகழ்ந்தது என்ன என்று கற்பனை செய்து, ஒரு கதையே எழுதுங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா. பார்வையாளர்கள் பின்பற்றுவார்களா என்ற சந்தேகம் எழுதும்போது இருந்தது. அதனாலேயே இடையிடையே கொஞ்சம் நகாசும் சேர்த்தேன். ஆச்சர்யமாக அது வேலை செய்தது. புரிந்துகொண்டார்கள் என்பது இடையிடையே விழுந்த கைதட்டுகளில் புரிந்தது.
      நீங்கள் சொன்னது போல கொஞ்சம் கொஞ்சம் கதையாக்கலாம். இல்லை இராமன் மீண்டும் வந்து மூக்கை மீட்பதாக "மூக்கு படலம்" எழுதலாம். முயலவேண்டும்.
      அதற்கு முதல், கொஞ்சம் தமிழை அதிகம் வாசித்து சந்தம், சொற்களை கைவசப்படுத்தவேண்டும். உங்கள் அருள் அன்போடு கூடிய சீக்கரம் அது வசப்படும் என்று நம்புகிறேன்.
      மீண்டும் நன்றிகள் ஐயா.

      Delete
  9. Mayilan G Chinnappan ஐயங்கள் நிறைய இருக்கு தல...

    Mayilan G Chinnappan மொபைல் என்பதால் அனைத்தையும் கேட்க ஏதுவாய் இல்லை... இருந்தும், சிலவற்றைக் கேக்குறன்... முதலில் சில வரிகள் மூக்கின் கூற்றாய் இல்லாமல் சூர்ப்பனாவின் கூற்றைப் போன்றே தோன்ற காரணம்? இரன்டாவது,மூக்கறுந்த என வரும் இடங்களில் "நானறுந்த" என வந்தால் இன்னும் பொறுத்தமாய் இருக்குமோ? இதைத் தாண்டி பொருளறிதலில் எனக்கு கொஞ்சம் தகராறு இருக்கிறது... கனிப்பொறி வாயிலாய் வருகிறேன்...

    Jeyakumaran Chandrasegaram எழுதும்போதும் இந்த சந்தேகம் வந்தது. ஆனால் லொஜிக் மீறலை தாண்டி சொல்லும் விஷயம் நயமாக இருப்பது போல தோன்றியதால் விட்டுவிட்டேன்! மூக்கு சூர்பனகை கதையை சொல்லுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். "நான் மூக்கறுந்த" என்று மூக்கு சொல்லும்போது அதிலே ஒரு நகாசு இருக்கிறது. மூக்கே மூக்கறுந்த கதை சொல்லுவது போல!
    ஜேகேயை கவுத்திட்டாங்கள்டா என்று நானே சொல்லலாம் இல்லையா! தவிரவும் கவிதை சொல்லவந்த செய்தி, மற்றும் நயம் கருதி தளத்துக்கு வெளியே போவதை நான் மறுக்கவில்லை. மூக்குக்கு எப்படி தெரியும் சீதை மீட்டெடுக்கப்பட்ட செய்தி? அதுக்கும் விளக்கம் சொல்லலாம்! .. நீக்கமற நிறைந்திருக்கு இராம வாசம் (கவிதைல இருக்கு) .. இதோட விடுவோம் தல.

    ஆனா கேளுங்க. இந்த வகை கேள்விகள் தான் எழுதியவனுக்கும் உவகை கொடுக்கும்!

    Mayilan G Chinnappan நீங்களே ஒரு டாபிக்கை உடைத்துவிட்டீர்கள்... இன்னும் ரெண்டு மூனு இருக்குது... ஏற்கனவே சொன்ன மாதிரி அது அர்த்தம் புரிதலில் இருக்கும் சங்கடம்... விலாவாரியா கேக்குறன்... ரெடியா இருங்க

    -- copied from facebook

    ReplyDelete
  10. Jude Prakash இறுமாப்பாய் வாழ்ந்து வீழ்ந்த ஈழத்தமிழன் நிலை போல – ராமா
    மூக்கறுந்து கிடக்கேன் நான். மீட்டுப்போக வருவாயோ?

    அரசியலையும் இலக்கியத்தையும் அளவோடு கலந்து அழகாக படைக்கப்பட்ட படைப்பு

    ReplyDelete
  11. Gunaratnam Kumaraperumal மிகவும் அருமை . அறுந்த மூக்குக்கு இத்தனை நீண்ட கவிதை, இது உங்களால்தான் முடியும் .வாழ்த்துக்கள் \

    ReplyDelete
  12. Pon Arul வாழ்த்துக்கள்! அருமையான கவிதை தந்தான் பெருமைப்படுகிறேன் இவனை மருமோன் எனச்சொல்லி. எதுகையோடு மோனை எடுப்பாய் இருந்தது குமரா! யாப்பறிந்த கவிஞனிவன் பாப்புனைந்தான் நாம் மகிழ. வம்பென்றால் சொல்லிவிடுமென்றான் – ஏன் விடுவான்? கொண்டைமேல் பெண்ணைச் சிவன் வைத்ததுபோல் என்றாய் சண்டைவராமல் இருக்க வேறொரு பெண்ணைக் கொண்டைமேல் வைக்கலாமோ? உம்முடன் சண்டைக்கு வர மாட்டாளோ உம்மை மணம்கொண்ட மங்கையவள். (சும்மா வம்புக்கு). கம்பனின் மறுபிறப்பிவன் ஆனாலும் வம்பனல்லன் இக்குமரன். வேகமாய்த் தமிழ் இனி வளரும் வேற்று மொழிகளையும் முந்தி. உன்னால் தமிழ் வாழும் தமிழால் நீ வாழ்வாய்! வாழ்க!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட