பாடல்கள் தரும் அனுபவங்கள் தனித்துவமானது. மேலும் மேலும் தேடல்களை உருவாக்கி அதற்குள் எம்மை தொலைத்துவிடும் அபாயங்களை ஏற்படுத்திவிடக்கூடியது. நேற்று அந்த தொலையும் அனுபவம் மீண்டும். இரவு ஒன்பது மணி இருக்கலாம். மேல்பேர்னின் கோடைக்காலத்து முதல் நாள். வெளிச்சம் இன்னமும் பரவலாக பல நிறங்களில் வியாபித்து, மெல்லிய சூட்டுடன் கொஞ்சமே தென்றலும் கூட சேர, நடை போவதற்கு அதைவிட சிறந்த நேரமோ காலமே கிடைக்காது. சகட்டு மேனிக்கு எங்கேயெல்லாம் போகப்போகிறோம் என்ற கவலையே இல்லாமல் பாட்டை கேட்டுக்கொண்டு நடக்கவேண்டும். பெயர் கூட கேள்விப்படாத பறவைகள் வற்றிப்போய்க்கொண்டிருக்கும் நீர்மண்டுகளில் தண்ணீர் தேடும், சேற்றில் சிறகடிக்கும். விளையாட்டு காட்டும். அவ்வப்போது பெண்கள் கூட்டம். கோடையின் வரவை பறைசாற்றிக்கொண்டு போட்டும் போடாமலும் ஓடும். பின்னாலே நாய்க்குட்டியும் ஓடும். எல்லாமே மனதுக்குள் ஒரு இதத்தை கொடுக்கவேண்டும். ஆனால் கொடுக்காது. பாரத்தை தான் கொடுக்கும். அந்த பாரம் நம்மை இன்னும் வேகமாக நடக்க செய்யும். இந்த முன்னிரவு அனுபவம் கொடுக்கும் துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லை. அதோடு இந்த பாட்டும் சேர்ந்துவிட்டால் கதை கந்தல்