“நெத்தலி மீன் மட்டும் எழுபது அந்தர் வரை தேறும்” என்றான் செமியோன். “இந்த கடலில் நெத்தலியிருப்பது முந்தி தெரியாது” என்று வியந்தார் யூசுப்பு சம்மாட்டியார். மரியதாஸ் தோணியை விட்டு கீழே குதித்தான். எல்லோரும் மரியாதையோடு பார்த்தார்கள். அவன் ஏளனமாக எல்லோரையும் ஒருமுறை சுற்றிபார்த்தான். அவனுடைய கண்கள் ஓரிடத்தில் ஒருகணம் நிலைத்தன. ஒருகணப்பொழுது தான். நாகம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.