இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது. தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு…. சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தால் இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் ஆரம்பித்துவிடும். வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படும் சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மேட்ச். நித்திரை அதற்கு பிறகு வரவில்லை. “கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடித்து அஞ்சு விக்கட்டும் விழுத்தோணும்.” 1992ம் ஆண்டு. மாசி மாதத்து இறுதி வெ