மொன்மார்த் (Montmartre) என்பது பாரிசின் மையத்திலிருந்து சற்றுத்தள்ளியிருக்கும் சிறு மலைப்பகுதியாகும். நவீனத்துவத்தின் முக்கிய பல கலைஞர்களான வான்ங்கோ, பிக்காசோ போன்றவர்களின் புகலிடமாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. பாரிஸ் நகரத்தின் அன்றாடங்களிலிருந்து சற்று வேறான, பொதுப் புத்தியிலிருந்து விலகிய கலையுள்ளங்களை ஊக்குவிக்கும் நகரமாக மொன்மார்த் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துள்ளது. பாரீசைப்போன்றில்லாமல் இங்குதான் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் மனிதர்கள் தன்னோடு நட்போடு பழகியதாக வான்ங்கோ குறிப்பிட்டிருக்கிறார். இங்கிருந்த ஒரு காலப்பகுதியில் எழுபது நாட்களில் எண்பது ஓவியங்கள்வரை மனுசன் வரைந்து தள்ளியிருக்கு. இம்பிரனிசம், கியூபிசம், சரயலிசம் போன்ற கலை வடிவங்கள் முகிழ்வதற்கு ஏது செய்த ஊரென்றும் இதனைச் சொல்லமுடியும். இன்றைக்கும் மொன்மார்த் நகரம் கலைஞர்களின் சொர்க்கமாகத்தான் திகழ்கிறது. இங்கு ஓவியர்களுக்கான திடல் ஒன்று காலை வேளைகளில் உயிர் பெறுகிறது. பல்வேறு ஓவியர்கள் அங்கு உட்கார்ந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை நாம் நேரடியாக கண்டு வியக்கலாம். அவர்களின் கண்களும் விரல்களும் ஒருசேர இணைந்து இயங்கு...