எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவே வளர்ந்தது. காய்த்து கொட்டியது. இலைகளை விட காய்களின் எண்ணிக்கை தான் அதிகம். வளரும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. காய்க்க ஆரம்பித்துவிட்டதா? பாத்தி எல்லாம் கட்டி ஒரே அமர்க்களம் தான். தனியாக தண்ணீர் பாய்ச்சி, தேயிலை சாயம், கோழிச்செட்டை எல்லாம் வெட்டித்தாட்டு பெற்ற பிள்ளையை கவனிப்பது போல கவனிக்கத்தொடங்கினோம். சனிக்கிழமை வந்தால் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் எழுப்பி விடுவார்கள். ஒரு பிளேன்டீயை குடித்துவிட்டு ஒரு துவாயை தலையில் முண்டாசு போல கட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் யாழ்ப்பாண பனிக்கு முட்டுச்சளி தலைக்குள் ஏறிவிடும். எலுமிச்சை மரத்தடிக்கு போய் சந்தைக்கு கொண்டு போகக்கூடிய பதமான காய்களை பிடுங்கவேண்டும்.