தூத்துக்குடியை அண்டிய கடற்கிராமம். ஒரு குட்டி ஒழுகல் குடிசையினுள்ளே நான்கு வயது சிறுவன் மழைக்குளிரில் நடுங்கிக்கொண்டு; பக்கத்தில் தாய் படுத்துக்கிடக்கிறாள். சாமம். ஒரு குடிகார மீனவன் கதைவை தட்டி, சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு அந்த அந்த பெண்ணை நெருங்கும்போதுதான் அவள் குளிரில் விறைத்து இறந்து போய்கிடப்பது தெரிகிறது. அவளை கிராமத்தில் ஒதுக்கப்பட்டவர்களை புதைக்கும் இடத்தில் ஒரு ஐஸ் பெட்டியில், அதுவும் கால்கள் அதற்குள் அடங்காததால் மண்வெட்டியால் உடைத்து உள்ளே மடக்கி மூடி புதைக்கிறார்கள். அந்த குடிகாரன் தான் சிறுவனின் தந்தை. அரவணைக்காமல் துரத்திவிடுகிறான். சிறுவன் அந்த குடிகாரனின் வீட்டு வாசலில், ஏக்கத்துடன் கதவுத்தூணுடன் சாய்ந்தபடி நிற்பான். வெறும் பொத்தல் பனியன் மட்டுமே சட்டை. அவன் முகம் ஆயிரம் கதை சொல்லும். குளோசப்பில் அந்த சிறுவனின் முகம். “அம்மா தானேடா நீ என்ர அப்பன் எண்டு சொன்னது” என்று அவன் கண்கள் கதை பேசும். என்ன சீனுடா இது. என்னையறியாமலேயே நிமிர்ந்து உட்கார்ந்தேன்.