மழைக்கு பிந்திய கோவிலின் பிரகார வெளியில் மரங்கள் நீர்கோர்த்துக்கொண்டிருந்தன. பூக்கள் உதிர்வதைப்போல மழைத்துளிகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன. திருமால் ஈரக்கல்லை புரட்டி அதனடியில் மண்புழு ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தான். மண்ணைத் துளைத்துக்கொண்டு ஒரு புழு எட்டிப்பார்த்தது. அவன் அதோடு பேச விரும்பியவனைப்போல கேட்டான். “மண்ணு ருசியாவா இருக்கு. அதைப்போயி திங்குறே?” மண்புழு சப்தமில்லாமல் ஊர்ந்து திரும்பியது. அவன் தன விரல்களால் மண்புழுவை தொட்டுப் பார்த்தான். அது உடலை நெளித்தது. “உன் வீடு எங்கேயிருக்கிறது … அங்கே மழை பெஞ்சதா?” மண்புழு மண்ணை உமிழ்ந்தபடி சுருண்டது. அவன் ஆத்திரத்துடன் சொன்னான். “பதில் சொல்றயா … இல்லை மண்டையைத் திருகிப் போடணுமா?” மண்புழு எதையும் பொருட்படுத்தாதது போல ஊர்ந்து போகத்துவங்கியது. ஆத்திரத்துடன் மண் புழுவைக் கையில் எடுத்துக்கொண்டுபோய் கோவில் கிணற்றில் போட்டுவிட்டு வந்தான். அதே இடத்தில் இன்னொரு மண்புழு ஊர்ந்துகொண்டிருந்தது. பயத்துடன் அதினிடம் கேட்டான். “உனக்கு நீஞ்சத் தெரியுமா? எப்படி மேலே ஏறி வந்தே?”