எங்கள் குடும்பம் சற்றுப்பெரியது. நான் பிறக்கும்போது ஏற்கனவே குடும்பத்தில் பதின்மூன்று, ஒன்பது, எட்டு, ஆறு வயதுகளில் சிறுவர்கள் வரிசைகட்டி நின்றார்கள். மூன்று அக்காமார். அண்ணா. தமக்கெல்லாம் ஒரு தம்பி வந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். பொறுப்பு, பொறாமை, சினேகம், விளையாட்டுக்கு ஒரு துணை. எத்தனை எண்ணங்கள் வந்து போயிருக்கும். எழுபத்தேழு கலவரத்தில் நுகேகொடவிலிருந்து அடித்துக்கலைப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பியிருந்த குடும்பம் அப்போதுதான் ஓரளவுக்குச் செட்டில் ஆகிக்கொண்டிருந்த சமயம். கம்பஸடியில் வாங்கிப்போட்டிருந்த காணியில் ஒரு கொட்டில் வீடு போட்டுக் குடியேறியிருந்தார்கள். வீடு என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு வரவேற்பறை. ஒரு படுக்கையறை. ஒரு பத்தி. பத்தியில்தான் சமையல் எல்லாம். பின்னர் அங்கிருந்தபடியே அம்மாவும் அப்பாவும் காணிக்குள் இப்போதிருக்கும் புது வீட்டினைக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள்.