சற்றுமுன்னர்தான் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொண்டு பேசினேன். தோழர் நேசமணி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மிகுந்த உற்சாக மனநிலையுடன் இருப்பதாகவும் கூறினார். தோழரோடு பேசப்போகிறீர்களா என்றும் கேட்டார். ஏதோ ஒன்று தடுத்தது. பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். நேற்றுத் தகவல் அறிந்தமுதல் எனக்குத் தோழர் நேசமணியின் ஞாபகமாகவே இருந்தது. பிரான்சில் இருக்கும் எம்முடைய இயக்கத்தோழரோடு அழைப்பெடுத்துப் பேசியபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இருவரும் தோழர் நேசமணியோடு பழகித்திரிந்த, கதைகள் பல பறைந்த அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தோம். காலமும் தூரமும் நம் உறவுகளை பிரித்தே வைத்திருந்தாலும் அனிச்சைகளால் நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.