செல்வி திரிக்ஷா சரவணின் பூப்புனித நீராட்டு விழா தாஜ்மஹால் மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருந்தது. வாசலில் பாவை விளக்குகள்போல அலங்கரித்து நின்ற இளம்பெண்கள், வந்தவர்களைக் கற்கண்டு கொடுத்தும் பன்னீர் தெளித்தும் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். மின்வெட்டு நேரமாகையால் வாசலுக்கருகே ஒரு ஜெனரேட்டர் இரைந்துகொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே குளிரூட்டி நிறுத்தப்பட்டு வலுக்குறைந்த மின்சாரத்தில் மின் குமிழ்களும் விசிறிகளும் தூங்கி வழிந்தன. வந்தவர்களின் பலவித பெர்பியூமுகளுடன் அவர்களின் வியர்வையும் கலந்து புதிதான ஒரு நாற்றத்துடன் உடல்கள் எல்லாம் கசகசத்துக்கொண்டிருந்தன. நிறையப் பட்டுவேட்டிகளும் காஞ்சிபுரங்களும் தாவணிகளும் குறுக்கும் மறுக்கும் ஓடித்திரிந்தன. பிரதான மேடைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் நாதஸ்வரக் கோஷ்டியினரின் கச்சேரி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இரண்டு பக்திப் பாடல்களை இசைத்துவிட்டு இப்போது கண்ணான கண்ணேயும், கண்டாங்கி கண்டாங்கியும் மூத்த வித்துவான் வாசிக்க முயன்றுகொண்டிருந்தார். அருகே அமர்ந்திருந்த அவருடைய பத்து வயது ஒப்பு, பால்போச்சியைச் சூப்புவதுபோல பீப்பி முனையை