நிலாப்தீன் நம்பமாட்டாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார். “இராஜராஜனா? அந்த கைனோகோலஜிஸ்டையா சொல்லுறிங்க?” அவர்கள் வாகனத் தரிப்பிடத்திலிருந்து பொலீஸ் கடவையை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். கோட்டையில் கூட்டம் அள்ளியது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. திடலை நிறைய இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் நிறைத்திருந்தனர். ஐந்தாறு செயற்பாட்டாளர்கள் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். கோட்டைக் கொத்தளத்தில் பெரிய அரங்கு ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. சிங்கள, பர்மிய பிக்குகள், இந்து மத யோகிகள், கிருத்துவப் பாதிரியார்கள், இஸ்லாமிய மௌலவிகள் என மத குருமார்கள் பலர் அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். போர்த்துக்கல் நாட்டின் கடற்படை அதிகாரி ஒருவரும் மரியாதை நிமித்தம் அந்தக் கோட்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தெற்கிலிருந்து வருகை தந்திருந்த சில அரசியல்வாதிகளுடன் தமிழ் எம்.பிக்களும் இரண்டாவது வரிசையை நிறைத்திருந்தனர். கொத்தளத்தின் மத்தியிலிருக்கும் கொலைக்களனுக்குப் பெயிண்ட் அடித்து, அதனை அலங்கார வளையமாக்கி, நடுவில் ஒரு சிலை எ