Skip to main content

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 3

 



“வட மாகாண முதலமைச்சர் சிவகடாட்சம்”

புரஜெக்டர் திரையில் பளிச்சென்ற எழுத்துகள் மின்னவும் சிவகடாட்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவருடைய வீட்டிலிருக்கும் அலுவலக அறையில் கூட்டம் நிறைந்து வழிந்தது. வந்திருந்தவர்கள் எல்லோருமே சிவகடாட்சத்தின் மிக நெருங்கிய உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். சேந்தன் பல சுப்பர் மார்க்கட்டுகளின் உரிமையாளர். தணிகாசலம் குழந்தைகள் பராமரிப்பு, வயோதிபர் இல்லம் என்பவற்றை நடத்துபவர். மாறன் ஜெயமோகனால் ஈழத்து இலக்கியத்தின் ஒரே நம்பிக்கை என்று அடையாளப்படுத்தப்பட்டவர். பஞ்சன் பத்திரிகையாளர். டொக்டர் மரியநேசன் சிவில் அமைப்பின் தலைவர். மாணிக்கவாசகர் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் பட்டி மண்டபம், திருமுறை வகுப்புகள் எனக் கலக்குபவர். பாதிரியார் தேவராஜா அங்கிலிக்கன் பாடசாலை ஒன்றின் அதிபராகக் கடமை புரிகிறார். கனிஸ்டசும் சாரதாம்பாளும் புலம்பெயர் தேசங்களில் தாயக மக்களின் துயர் துடைக்கும் தமிழ் அமைப்புகளை இயக்கி வருபவர்கள். மேகநாதன் பழைய கூட்டமைப்பு எம்.பி. இவர்களோடு இந்தியத் தூதரகத்தில் பணிபுரியும் குருமூர்த்தியும் வருகை தந்திருந்தார். சுபத்ரா ஒவ்வொருவருடைய வரவையும் ஐபாடில் குறித்துக்கொண்டிருந்தாள்.
“நிர்மலராணியும் ஜெயரத்தினமும் சின்னராசுவும் வர முடியவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்களிடம் தனியாக நான் பேசிக்கொள்கிறேன். நாங்கள் ஆரம்பிக்கலாம்”
சுபத்ரா சிவகடாட்சத்தின் அக்காவின் மகள். அப்பிள் நிறுவனத்தின் மார்க்கட்டிங் டிப்பார்ட்மெண்டில் பணியாற்றியவள். கலிபோர்னியா மாநிலத்துச் சனநாயகக் கட்சி செனட்டருடைய தேர்தல் வெற்றியில் அவளுடைய பங்கும் கணிசமானது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிற்பாடு, தன் பிள்ளைகள் ஆயுதக் கலாச்சாரம் நிறைந்த அமெரிக்காவில் வளராமல் யாழ்ப்பாணத் தமிழ்ப் பண்பாட்டில் வளரவேண்டும் என்று கொழும்பில் வந்து குடியேறிவிட்டாள். அவளுடைய மாமனான சிவகடாட்சத்திற்குச் சின்னச் சின்ன சமூக சேவைகள் செய்து அலுப்புத் தட்டிப்போனதில், திடீரென்று வட மாகாண முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதற்கான திட்டத்தை வகுத்துத்தரும்படி அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவள் யாழ்ப்பாணம் வந்திருந்தாள்.
“இன்றைக்கு ஈழத்துத் தமிழ்ச் சமூகம் ஒரு மலத்தீன் போட்ட எறும்புப் புற்றுபோல சிதறிக்கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு ஓர் அமைப்பு வைத்து போராட்டம் செய்கிறார்கள். நற்பணிகள் செய்கிறார்கள். ஆளாளுக்கு ஓர் அரசியல் பேசுகிறார்கள். ஆனால் எவருமே எந்த மாற்றத்தையும் இங்கு கொண்டுவரவில்லை. தேர்தல் வந்தவுடன் புற்றீசல்போலச் சுயேச்சைகள் கிளம்பி அடங்குகின்றன. இங்கே சரியான ஒரு செயல் தலைவர் இல்லை. மாற்றத்துக்கான ஒரு ஒபாமா எங்களிடத்தில் இல்லவே இல்லை”
சுபத்ரா சொல்லச் சொல்ல ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.
நீளப்பாவாடை, டீசேர்ட் அணிந்து, கையில் பொயிண்டருடன் அவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பேசிய அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் என்று வந்தவர்கள் பெருமூச்சு விட்டார்கள்.
“எங்களுக்கு ஒரு நட்சத்திரத்தின் வரவு முக்கியமாகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப யாராவது ஒரு இறைத் தூதர் வரமாட்டாரா என்று சமூகம் ஏங்கிக்கொண்டிருக்கிறது. இப்படியான அல்லற் பொழுதில்தான் நம் தமிழ்த் தேசத்துக்குத் தலைமையாக என் சிவகடாட்சம் மாமா உருவாகியிருக்கிறார்.”
சுபத்ரா சொல்லியபடியே இரண்டு கைகளையும் தன் மாமனை நோக்கிக் கைகளைக் குவித்துக் காட்டினாள். சிவகடாட்சத்துக்கு சங்கடப்படுவதா, பெருமைப்படுவதா என்று தெரியவில்லை. ஏனையோர் எல்லோரும் அவரைத் திரும்பிப்பார்த்தார்கள். முன்னைய இரவில் திண்ணையில் கொடுக்கப்பட்ட பார்ட்டியின் ஹாங்கோவர் இன்னமும் பலருக்கு இருந்தது. குருமூர்த்தி கைகளைத் தட்டி ஆரம்பிக்க ஏனையவர்களும் சிவகடாட்சத்தைப் பாராட்டி கரகோசம் செய்தார்கள்.
“ஒரு சோதிட நிபுணர் எப்படி முதலமைச்சர் ஆகலாம் என்றொரு கேள்வி வருகிறது. ஒரு வாடகை பஸ் சேவை நிகழ்த்துபவர் எப்படி நம் மக்களுக்குத் தலைமை வகிக்கலாம்? ஒரு வியாபாரி எப்படி மக்களுக்காக கொள்கைகளை வகுக்கலாம்? இப்படி எல்லாம் கேட்கலாம். ஆனால் தமிழர் தலைவிதியை சட்ட நிபுணர்களும் ஆயுதம் தரித்தவர்களும் தீர்மானித்தது போதும். இன்றைக்கு உலக அரசியலே பெரும் வணிகம் ஆகிவிட்ட நிலையில், நமக்கு ஒரு தேர்ந்த வியாபாரிதான் தேவை. எதிர்காலத்தைக் கணித்து முடிவெடுக்கக்கூடிய ஒரு சாத்திரியால்தான் தகுந்த நகர்வுகளை எடுக்கமுடியும்.”
மேகநாதன் எம்.பி தன் கையை உயர்த்த, சுபத்ரா ‘எஸ்’ என்றாள்.
“இதெல்லாம் சரி. ஆனால் பெரிதாக மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவரைத் திடீரென்று எப்படித் தலைவராக முன்னிறுத்துவது?”
சுபத்ராவுக்கு சிரிப்பு வந்தது.
“மிஸ்டர் பிரபாகரன் போராட்டத்தை ஆரம்பித்தபோது மக்களுக்கு அறிமுகமான தலைவரா? சரி, அவராவது ஆயுதத்தால் பேசினார் என்று வைத்துக்கொள்வோம். மிஸ்டர் விக்னேஸ்வரனை எடுத்துக் கொள்ளுங்களேன். தமிழ் அரசியல் களத்துக்கு வர முன்னர் அவர் வெறுமனே ஒரு நீதியரசர்தான். இளஞ்செழியனைத் தெரிந்த அளவுக்குக்கூட வட மாகாண மக்களுக்கு விக்னேஸ்வரனைத் தெரியாது. அவருடைய அரசியல் நிலைப்பாடுகள் தெரியாது. அவர் தன் வீட்டிலேயே தமிழில் பேசுவாரா என்பதுகூட ஒருவருக்கும் தெரியாது. அவர் கொழும்பிலேயே வளர்ந்தவர். திருநெல்வேலிச் சந்தியில் கொண்டுபோய் ஆளை விட்டால் அது கோண்டாவில் சந்தி என்று சொல்லக்கூடியவர். அப்படியான, தமக்கு அறிமுகமில்லாத ஒருவரை வட மாகாண மக்கள் எப்படித் தெரிந்தெடுத்தார்கள்?”
எல்லோரும் விழித்தார்கள். இப்படியொரு கேள்வி தமக்கேன் இதுவரை எழவில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது.
“எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் மிஸ்?”
“நூறாவது குரங்கு விளைவு என்று இதைச் சொல்வார்கள். ஒரு பழக்கத்தை, உதாரணமாகச் சோடா மூடியைத் திருகினால் போத்தலைத் திறந்துவிடலாம் என்று ஒரு குரங்குக்குப் பழக்கிவிடுங்கள். அதைப்பார்த்து அடுத்த குரங்கும் பழகும். அதைப்பார்த்து இன்னொன்று. இப்படி நூறு குரங்குகள் பழகிவிட்டால் போதும். பின்னர் காட்டில் உள்ள குரங்குகள் அத்தனைக்கும், அதாவது இந்த நூறு குரங்குகளையும் பார்த்து அறியாத ஏனைய குரங்குகளுக்கும்கூட அந்தப் பழக்கம் தொற்றிவிடும்.”
எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சிவகடாட்சத்துக்குத் தன் மருமகளைப் பார்க்கவே பெருமையாக இருந்தது. தான் முதலமைச்சர் ஆனதும் ரணிலின் கால்களில் விழுந்து இவளை ஆளுநர் ஆக்கிவிடவேண்டும் என்று முடிவெடுத்தார். அப்புறம் அவள் ஆட்சியைச் செய்ய இவர் பாராட்டு விழாக்களுக்குப் போய் வரலாம்.
கனிஸ்டஸ் மட்டும் இடைமறித்து ‘இந்தக் குரங்கு விளையாட்டு எனக்கு விளங்கேல்ல தங்கச்சி’ என்றார்.
“யோசித்துப்பாருங்கள். மிஸ்டர் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வர முன்னர் தமிழ் பத்திரிகைகள் சில அவரைப்பற்றிக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தன. சில மேடைகளில் விக்னேஸ்வரன் பேச ஆரம்பித்தார். திடீரென்று தமிழ்ச்சூழலின் பிரபலங்கள் பலர் விக்னேஸ்வரன் தமிழர்களின் ஒரே நம்பிக்கை என்று சொற்பொழிவுகளையும் ஆற்றினார்கள். பின்னர் சுமந்திரனும் சம்பந்தனும் அவரின் பெயரை நைசாக முன் மொழிந்தார்கள். ஆனால் அவரோ தனக்குப் பதவி ஆசை இல்லை என்றார். பின்னர் எல்லோரும் கெஞ்சிக்கேட்டால் மக்களுக்காக வருவேன் என்றார். கடகடவென விக்னேஸ்வரன் ஒரு நல்லவர், அறிவாளி, சுயநலமற்றவர் என்றொரு விம்பம் மக்களிடையே கட்டமைக்கப்படுகிறது. இறுதியில் அவர் முதலமைச்சர் வேட்பாளராகவே அரசியலுக்கு வந்து வென்றும் விட்டார். கலியாணத்தன்று பொம்பிளை மாப்பிளையைப் பார்க்கிறதுபோல. விக்னேஸ்வரன் சிறந்த தலைவரா இல்லையா என்பது வேறு பிரச்சனை. இது அவரைப் பற்றிய விமர்சனம் இல்லை. ஆனால் மக்களுக்கு எந்த அறிமுகமும் இல்லாத ஒருவரை எப்படி இலகுவாக முதலமைச்சராக ஆக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம். நாட்டிலே நூறாவது குரங்குக்கு அந்த அறிமுகம் நிகழ்ந்தவுடன் ஊர் முழுதுக்கும் எப்படியோ அவரைப்பற்றிய அந்த விம்பம் தெரிய வந்துவிட்டது. புரிகிறதா?”
“புரியுமாப்போல இருக்கு மிஸ். ஆனால் சிவகடாட்சம் ஐயாவை முதலமைச்சராக முன்மொழிய, அந்த முதல் நூறு குரங்குகளுக்கும் எங்குப் போவது?”
“நீங்கள்தான் அந்த நூறு குரங்குகள். திங் டாங். இதற்காக பத்துப் புள்ளித் திட்டத்தைக் கால அட்டவணையுடன் உங்களுக்காக முன் வைக்கிறேன். சரியாகப் பதினெட்டு மாதங்களில் தமிழர்களின் இணையற்ற தேசியத் தலைமையாகச் சிவகடாட்சத்தைக் கொண்டு சென்று நிறுத்துவதற்கான திட்டம் இது. இதில் உங்கள் ஒவ்வொருவருடைய பங்கு, உங்களுக்கான தனிப்பட்ட பலன், நிதியுதவி, பதவி, முதலீடுகள் என எல்லாவற்றையும் என்னுடைய டீம் டீடெயிலாகக் கொடுத்திருக்கிறது. அவை உங்களுக்கு வட்சப்பில் அனுப்பப்படும்.”
சுபத்ரா பேசிக்கொண்டிருக்கும்போது அலுவலகக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சுபத்ரா போய்க் கதவைத்திறக்க வெளியே சிவகடாட்சத்தின் மனைவி தயாளினி பதற்றமாக நின்றிருந்தார்.
“என்ன மாமி?”
“மாமாவைக் கூப்பிடுறியா? அவசரமா நான் அவரிட்ட ஒண்டு சொல்லோணும்”
“ஒரு பத்து நிமிசம் பொறுக்கமுடியுமா? கூட்டம் முடியப்போகுது”
“இல்லை சுபத்ரா, அனகா பெரிசாயிட்டாள்”
“வாட்?”
“ஓமடி, இப்பத்தான். டியூசனில. மாஸ்டர்தான் இப்ப பிள்ளைய வீட்ட கொண்டுவந்து விட்டவர். எனக்கெண்டா கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல பிள்ள”
சுபத்ரா அறைக்குள் சென்று சிவகடாட்சத்தை வெளியே அழைத்து வந்தாள்.
“தயா என்ன பிரச்சனை? இதுக்க வந்து டிஸ்டேர்ப் பண்ணுறீர்? மீட்டிங் நடக்கிறது தெரியாதா? ஒரு முதலமைச்சர் அறையை இப்பிடியா வந்து தட்டுவீர்?”
சிவகடாட்சம் சுபத்ராவின் இரண்டு பவர் பொயிண்ட் ஸ்லைடுகளைப் பார்த்ததுமே மனசளவில் முதலமைச்சர் ஆகிவிட்டார்.
“அப்போய் …. பெட்டை பெரிசாயிட்டுது”
தயாளினி பரபரப்புடன் சொல்லச் சிவகடாட்சம் சடக்கென்று குளிர்ந்துபோனார்.
“நினைச்சன். நினைச்சன். செவ்வாய் பத்தில அவளுக்கு. எங்கை அவள்?”
“படுக்கறைல விட்டிருக்கு. எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல. ஐயோ, நேத்தைக்குத்தான் நான் பள்ளிக்கூடத்தில பி.டி கிளாஸில பெரிசானதுமாதிரி இருக்கு. அதுக்குள்ள என்ர பிள்ளை. அதுவும் என்னமாதிரியே கிளாஸில சாமத்தியப்பட்டிருக்கு”
“என்ன மாமி என்னவோ பர்ஸ்ட் கிளாசில பாஸ் பண்ணினமாதிரி சொல்லுறிங்கள். மாமா, நீங்கள் போய் பார்த்திட்டு வாங்கோ. நான் கூட்டத்தை சமாளிக்கிறன். இது நல்ல விசயம்தான். நாங்கள் பெரிசா சாமத்திய வீடு செய்வம் மாமா. எங்கட சாமத்திய வீட்டுக் கலாச்சாரத்தைக் கண்டு அமெரிக்கால வெள்ளைக்காரப் பெட்டையள் தங்களுக்கும் சாமத்திய வீடு கொண்டாடச்சொல்லி நிக்கிறதுகள். ஆனால் இஞ்ச சில தமிழ் கலாச்சார விரோதிகள் இப்ப இதுக்கு எதிராக் கிளம்பியிருக்கிறினம். உங்கட தலைமைல எங்கட பண்பாட்டை ரிவைவ் பண்ணுவம் மாமா. எல்லாரையும் இன்வைட் பண்ணுவம். இந்த பங்சனை வைத்தே சில காய்களை நகர்த்தலாம். சுமந்திரனையும் தண்ணி வார்க்க இன்வைட் செய்யோணும். மோடியைக் கூப்பிட்டாலும் நல்லம்.”
சுபத்ரா சொல்லிவிட்டு உள்ளே செல்ல, சிவகடாட்சம் தயாளினியை அரவணைத்தபடி படுக்கையறைக்கு விரைந்தார்.
“டென்சன் ஆகாதீம் ஐஸே. பொம்பிளைப் பிள்ளை எண்டா சாமத்தியப்படத்தான் போகுது. எல்லாமே நல்ல சகுனம். உம்மட தம்பியை உடன கூப்பிட்டு தண்ணியை வார்க்கச்சொல்லுவம். டொமினிக்க படம் எடுக்கக் கூப்பிடும். அதோட செக்கு நல்லெண்ணை, ஊர் முட்டை எல்லாம் பஞ்சனிட்ட சொல்லி ஊரிலயிருக்கு எடுப்பியும். பத்தியக்கறி வைக்கத்தெரியுமே?”
“எனக்கென்ன தெரியும்? உடம்பெல்லாம் படபடவெண்டு உதறுது. வவுத்த குமட்டுது. நான் அம்மாவைக் கூப்பிடப்போறன்.”
“அம்பது வயசாகப்போகுது, உமக்கு இன்னும் மச்சுரிட்டி வரேல்ல தயாளினி.”
சிவகடாட்சம் பகடியாகக் கண்ணடித்து மனைவியின் இடுப்பைப் பிடித்து அருகில் இழுத்தார். தயாளினிக்குக் கூச்சம் வந்தது.
“ச்சிக் பெரியாக்கள் எல்லாம் அங்கால இருக்கிறினம். என்ன வேலை செய்யிறியள்?”
“பிள்ளை பெரிசானாலும் நீர் இன்னும் சிறுசாத்தான் இருக்கிறீர் ஐஸே”
“போதும். எனக்கு மச்சுரிட்டி இல்லை எண்டுறியள். ஆனா அம்பத்தஞ்சு வயசில நீங்க மசுக்குட்டியை வச்சுக்கொண்டு சும்மா இருக்க மாட்டியள்”
சிவகடாட்சம் இப்போது வெட்கப்பட்டார்.
“அடச்சிக், ஒரு யாழ்ப்பாணத்து பொம்பிளைப்பிள்ளை கதைக்கிற கதையா இது? அதுவும் வடமாகாண முதலமைச்சரோட இப்பிடி அரியண்டமா கதைக்கலாமே?”
அவர் செல்லமாக மிரட்ட தயாளினி ‘உவேக்’ என்றாள்.
“என்ன இதுக்கே ஓங்காளிக்கிறீர். நாளைக்கு உலகம் முழுக்க எங்கட போஸ்டர்தான்”
சொல்லியபடியே அவர் அறைக்குள் நுழைய கட்டிலில் படுத்திருந்து, ஐபாடில் கேம் விளையாடிக்கொண்டிருந்த அனகா விறுக்கென்று சங்கடமாக எழுந்தாள் ‘அப்பா’ என்றாள்.
“பிள்ளை, இனி இப்பிடி டக்கெண்டு எழும்பக்கூடாது. இப்பத்தான் உனக்கு பம்பர்ஸ் மாத்தினதுமாதிரி இருக்கு. அதுக்குள்ள பெரிய பிள்ளையாயிட்டாய். நான் சீதனமே சேத்து முடிக்கேல்ல”
தந்தை வந்து ஆதரவாகத் தன் தலையைத் தடவிவிடுவார் என்று அனகா எதிர்பார்த்திருக்கவேண்டும். கொஞ்சம் விசனத்தோடுதான் சிரித்தாள்.
“சரி ரெஸ்ட் எடு. நான் முக்கியமான கூட்டத்தில இருக்கிறன். பிறகு வாறன்”
அவர் சொல்லிவிட்டுத் திரும்ப, தயாளினி மீண்டும் ‘உவேக்’ என்றாள். இவர் சந்தேகத்துடன் அவளைப் பார்த்தவாறே கூட்டம் நடந்த அறைக்குத் திரும்பினார். உள்ளே சுபத்ரா தனது பத்துப் புள்ளித் திட்டத்தில் ஐந்தாவது புள்ளிக்கு நகர்ந்திருந்தாள்.
“சிவகடாட்சம் தமிழரசுக் கட்சியில் இணையவேண்டும். சுமந்திரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக மாற வேண்டும். கூட்டமைப்பு பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது. அடுத்த தலைவர் சுமந்திரன். ஆனால் வடக்கின் அரசியலைக் கவனிக்கப் பெரிதாக ஆட்கள் இல்லை. எங்களுக்கு ஆங்கிலம் பேசக்கூடிய, யாழ் இந்து அல்லது சென் ஜோன்சில் படித்த, சைவ உயர் வெள்ளாள ஆண் மகன் ஒருவரே இங்கு தேவைப்படுகிறார். சிவகடாட்சம் தன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தைக் கைக்குள் வைத்திருப்பவர். சிவ பக்தர். சாத்திரி. இவரை மக்கள் இலகுவாக நம்புவர். மாமா தமிழரசுக் கட்சியில் சேர்ந்தால் எளிதாக யாழ் மாவட்டத்தில் தேர்தலில் நின்று வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகமுடியும்”
கூட்டம் ஆமோதித்தது. சுபத்ரா அடுத்த ஸ்லைடுக்குப் போனாள்.
6. சிவகடாட்சத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்தி வருவதை நாம் உறுதி செய்யவேண்டும். அதுவும் குழப்பமற்ற எளிமையான செய்திகள். சிவகடாட்சம் நேர்மையானவர், ஊருக்கு உதவி செய்வார், மக்கள் பிரச்சனைக்குக் குரல் கொடுப்பார். இந்த மூன்று புள்ளிகள் மட்டும் போதும். பலர் தமது அனுபவங்களை முதலில் பகிர்வார்கள். பின்னர் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம். சிலருடைய பேச்சுகள். வாட்சப் குரூப்புகளில் அவரைப்பற்றிய செய்திகள். எல்லாமே அந்த மூன்று புள்ளிகளில் மாத்திரம் நிலைக்கவேண்டும். குழந்தைகளைக் கவனித்தீர்கள் என்றால் அவர்கள் எப்போதும் எளிமையான குழப்பமில்லாத விசயங்களைத்தான் தொடர்ந்து திரும்பத் திரும்ப டிவியில் பார்ப்பார்கள். மக்களும் குழந்தைகள்போலத்தான். அவர்களுக்குச் சிக்கலான சமூகப் பிரச்சனைகளைப் புரிய வைக்க முனையக்கூடாது. கீப் இட் சிம்பிள் அண்ட் கிளியர். ஒகே?”
குருமூர்த்தியைத் தவிர ஏனையோர் அனைவரும் ‘ஓகே மிஸ்’ என்றார்கள். சுபத்ரா எட்டாவதுக்குத் தாவினாள்.
7. சிவகடாட்சத்துக்கு என்று தனியான தத்துவம் ஒன்றை நாம் உருவாக்கவேண்டும். தமிழ்த்தேசியம், திராவிடம், இடதுசாரி, மய்யம், ஆன்மீகம் என்றெல்லாம் பல தத்துவங்கள் நம்முள் உண்டு. நாம் ‘அன்பு அரசியல்’ என்ற புதிய தத்துவத்தைச் சிவகடாட்சம் சார்பாக அறிமுகப்படுத்துவோம். அதன் இலச்சினையாகச் சுடலைக் கூத்து ஆடும் ஒருவன் அன்போடு மக்களைப் பார்த்து வணங்கும் உருவம் வடிவமைக்கப்படும்.
சுபத்ரா அந்தப் படத்தைக்காட்ட, அனைவரும் வியப்போடு கண்களை அகல விரித்தனர். பாதிரியார் மாத்திரம் சந்தேகத்துடன் கேட்டார்.
“இந்தச் சிவன் இலச்சினை இந்துக்களை மட்டும் குறிக்கிறதல்லவா? இதைப்பார்த்து கிறிஸ்தவர்கள் டென்சன் ஆக மாட்டார்களா?”
“நல்ல கேள்வி. இது சிவன் இல்லை. சிவகடாட்சம். பாருங்கள் தலையில் கங்கை இல்லை. மூன் இல்லை. குடுமியை விரித்துப்போட்டு வெற்று மேனியானாய் இருந்தாலும் இதை ஒரு ஏசுவின் உருவாகவும் பார்க்கமுடியும். சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த ஏசுவை மக்களைப் பார்த்து வணங்கி அன்பு செலுத்துவதாகவும் கொள்ளமுடியும். அன்பு அரசியலில் மதங்களுக்கு இடமில்லை. நீங்கள் ஒரு திருப்பலி உரையின்போது இதனைக் குறிப்பிட்டுப் பேசினால் போதுமே பாஃதர்?”
பாதிரியார் ஆமோதித்துத் தலையசைத்தார். சுபத்ரா அடுத்த புள்ளியை தொடர்ந்தாள்.
8. சிவகடாட்சம் ஒரு மக்கள் போராட்டத்தை முன்னின்று நிகழ்த்தவேண்டும்.
உடனே மேகநாதன் தமிழர்களின் சைவத் தொன்மங்களைப் பௌத்த மயமாக்கும் செயற்பாட்டை எதிர்க்கலாம் என்று கருத்துச் சொன்னார். சுபத்ரா அவரை அமைதியாக இருக்குமாறு சொன்னாள்.
“நாங்கள் சகோதர இனத்தையும் இந்திய மத்திய அரசையும் அதிகம் சங்கடத்துக்குள் ஆக்கக்கூடாது. எங்களுக்கு இப்போது இருக்கும் தலையாய பிரச்சனை பண்ணைக்கடல் மாசடைதல்தான். யாழ்ப்பாணத்தில் சீன நிறுவனங்கள் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பண்ணைக்கடல் மாசடைகிறது. அதனால் ‘கோ பாக் சீனா’ என்ற போராட்டத்தைச் சிவகடாட்சம் முன்னெடுப்பார். சீன நிறுவனங்கள் திரும்பிச்சென்றால் ஏற்படக்கூடிய பொருளாதார நட்டத்தை ஈடு செய்ய இந்திய அரசு எமக்கு உதவி செய்யும். சூழல் மாசடையாத வண்ணம் இந்திய நிறுவனங்கள் அந்தக் கடலட்டை பண்ணைகளைக் கையேற்று நிர்வாகம் செய்யும்.
மாணிக்கவாசகர் சத்தமாகவே கைதட்டி ‘பலே’ என்றபடி குருமூர்த்தியைப் பார்க்க, அவர் மெலிதாகப் புன்னகை செய்தார். சுபத்ரா அடுத்த ஸ்லைட் என்றாள்.
9. முதன்முதலாகச் சிவகடாட்சத்தின் தலைமையில் புலம்பெயர் உள்நாட்டு நிதியம் ஒன்றை உருவாக்கப்போகிறோம். அதற்கு சாரதாம்பாளும் தணிகாசலமும் நிர்வாக இயக்குநர்களாகச் செயற்படுவார்கள். எங்களுடைய முதலாவது செயற்பாடாகப் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பூனை வளர்ப்புத் திட்டத்தை உருவாக்கப்போகிறோம்.
டொக்டர் மரியநேசன் கை உயர்த்தினார்.
“மிஸ் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எல்லாம் இப்போது வளர்ந்து சிலது கலியாணமும் செய்திட்டுதுகள்”
சுபத்ரா சற்றுத் தடுமாறிவிட்டாள்.
“நான் சொன்னேன் அல்லவா? நம் மக்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்று சொன்னால் போதும், பின்னர் அதுபற்றி அவர்கள் ஆராயமாட்டார்கள். தவிர இப்படிச் சொன்னால்தான் புலம்பெயர் அப்பப் பார்ட்டி, இசை நிகழ்வுகளில் பணம் சேகரிப்பது எளிது. நாங்கள் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பூனைகளைக் கொடுக்கப்போகிறோம். எல்லாப் பூனைகளும் வெளிநாட்டுப் பூனைகள். கனிஸ்டஸ் கனடாவிலே பூனைகளுக்கான பிரீடிங் சென்ரர் வைத்திருக்கிறார். பூனைகளை எப்படி வளர்ப்பது, அவற்றுக்கு எந்த நேரம் பூனை உணவு கொடுப்பது, அவற்றின் வயிற்றை எப்படித் தடவிவிடுவது, பூனைகளுக்கான முதலுதவி என்று முழுப் பயிற்சி முகாம்களையும் நாம் வட மாகாணத்தில் நிகழ்த்துவோம். பூனைகளுக்கான வேர்ச்சுவல் மருத்துவமனைகளையும் நிறுவலாம். அது வேறு ஒன்றுமில்லை. ஒரு வட்சப் குரூப்பில் எமக்குத் தெரிந்த கால் நடை வைத்தியர்களை இணைத்துவிடுவோம். உங்கள் பூனை சுகமற்று இருந்தால் நீங்கள் அதன் வீடியோவை எடுத்து வட்சப்பில் போட்டால் வைத்தியர்கள் ஆலோசனை தருவார்கள். தவிர இன்ஸ்டகிராமிலும் டிக்டோக்கிலும் இந்தச் சிறுவர்கள் தம் பூனைகளுடன் விளையாடும் கணங்கள் #அன்புஅரசியல் #சிவகடாட்சம் என்ற டாக்குகளில் வெளியாகும். சிறந்த பூனைக் காணொலிகளுக்கு பரிசில்களும் உண்டு. இவற்றை எல்லாம் எங்களுடைய இணைய அணி ஒழுங்கமைக்கும்.”
‘சூப்பர் மிஸ், நானும் பூனை உணவை சூப்பர் மார்க்கெட்டில் விற்கலாம். அதையும் வீடியோவில போடுங்கோ’, சேந்தன் சொல்ல சுபத்ரா அதைக் கவனியாது இறுதிப் புள்ளியைப் பேச ஆரம்பித்தாள்.
10. இது முக்கியமானது. இடதுசாரிகள். பேஸ்புக் போராளிகள், இந்த இருவரோடும் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் மாமாவை எதிலாவது மாட்ட வைக்க முனைவார்கள். மாமா ஒரு கூட்டத்தில் தன்னை கம்யூனிஸ்ட்டாக அடையாளப்படுத்தவேண்டும். ‘பிரடெரிக் ஏஞ்செல்சின் சோசலிசமும் சிவகடாட்சத்தின் அன்பு அரசியலும் இணைகின்ற புள்ளி’ என்ற ஒரு கட்டுரையை நியுயோர்க்கில் வாழ்கின்ற பிரபல மார்க்சியவாதியான சண்முகவடிவேல் தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்காக வெளியிடுவார். இதுபற்றி வேறும் சில கம்யூனிஸ்ட்டுகளிடமும் கேட்டிருக்கிறோம். எதிர்வினைகள் வந்தால் உங்கள் மேலான விமர்சனங்களுக்கு நன்றி. நான் என்னை அனுதினமும் செப்பனிட அவை உதவி செய்கின்றன, #அன்புஅரசியல் என்று நாம் பதிவிட்டுத் தப்பிவிடலாம்.
“அன்பு அரசியல் என்றால் என்ன மிஸ்?”, தேவராஜா கேள்வி கேட்டார்.
“அன்பு அரசியல் என்றால் அன்பைச் செலுத்தும் அரசியல்தான். நாங்கள் இந்த விசயத்தில் திறந்த புத்தகமாக இருப்போம். சக மனிதருக்கு அன்பைக் கொடுப்பதைவிட வேறு பெரிய அரசியல் ஏதும் இல்லையல்லவா? எல்லோரும் அன்பாக இருந்தால் இந்த உலகம் முழுதுமே சாந்தியும் சமாதானமும் நிறைந்துவிடுமே?”
“விளங்கேல்ல மிஸ், அன்பு அரசியல் என்றால் தமிழ்த் தேசியமா?”
“தமிழ்த் தேசியம் என்றும் சொல்லலாம். கம்யூனிசம் என்றும் சொல்லலாம். முதலாளித்துவத்தையும் நாங்கள் வெறுக்கவில்லை. திராவிடத்தின் கூறுகளும் இதனுள் உண்டு. இது ஒரு புதிய தத்துவம். மக்களுக்கு அதன் விளக்கங்களைக் கொடுக்கத்தேவையில்லை. சொன்னேன் அல்லவா. மக்கள் குழந்தைகள்போல. அவர்களுக்கு வெறுமனே இனிப்புகளையும் கார்ட்டூன்களையும் மாத்திரம் நாம் காட்டவேண்டும். சிவகடாட்சம் அரசியலுக்கு வருவதே மக்களின் வலிகளைத் தீர்க்கத்தானே. பிறகு ஏன் புதிதாகத் தத்துவங்களை விளக்கி வலிகளை மக்களுக்குக் கொடுக்கவேண்டும்?”
இறுதியில் சிவகடாட்சம் தன் பேச்சை ஆரம்பித்தார். அமெரிக்காவிலிருந்து சுபத்ரா சில டெலி புரம்ட் கருவிகளை அவள் தருவித்திருந்தாள். அதில் அவள் எழுதிய உரை வரிகளாக ஓட, சிவகடாட்சம் அதனைப் பார்த்துத் தட்டுத்தடுமாறி வாசித்து முடித்தார். ஆனாலும் வந்திருந்தவர்கள் நம்பிக்கையுடன் கை தட்டினார்கள். கூட்டம் முடிந்ததும் சிவகடாட்சத்தைக் கட்டி அணைத்தார்கள். ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நாம் கட்டியெழுப்புவோம் என்றார்கள். பின்னர் எல்லோருக்கும் விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. பியர், வைன், விஸ்கி எனப் பலவித மது வகைகள் பரிமாறப்பட்டன. சீருடை அணிந்த வேலையாட்கள் தட்டுகளில் சிற்றுண்டிகளைக் கொண்டு திரிந்தார்கள். எல்லோரும் நின்றபடியும், இருந்தபடியும் தொடர்ந்து தமிழரின் அரசியல் எதிர்காலத்தைக் கலந்தாலோசிக்கத் தொடங்கினார்கள்.
சிவகடாட்சம் எல்லோருக்கும் நன்றி சொல்லியபடி சுபத்ராவுடன் மெதுவாக வெளியே வந்தார்.
“சுபத்ரா நீ சுப்பராச் செய்தாய். இனி எங்களை ஆருமே அசைக்கேலாது”
“இல்லை மாமா, இதுக்குள்ள எத்தினைபேர் முதுகில குத்துவினமோ தெரியாது. நீங்களும் உங்கட பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.”
“உண்மைதான் பிள்ளை, எப்ப பாத்தாலும் சாத்திரம், மினிபஸ் எண்டு இருந்திட்டன். வாசிக்கிறதுக்கு டைம் கிடைக்கிறதில்லை. நான் திருக்குறள், சேக்ஸ்பியர் எண்டு தொடங்கட்டா?”
“அதெல்லாம் இனி வேலைக்காகாது. நான் சொல்லுறதை மட்டும் செய்யுங்கோ. டெலி புரம்ட் இல்லாமல் எங்கேயும் பேசிடாதீங்கோ. நான் பேசும் ஒவ்வொரு சொல்லும் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட்டவை. அப்படிப் பொறிக்கப்பட்டவையை நான் புரொம்டரில் பார்த்து வாசிக்கிறேன் என்று சொன்னால் உங்களை யாரும் அட்டாக் பண்ணமுடியாது”
சிவகடாட்சம் அவளை வியந்து பார்த்தார். இந்தப் பிள்ளை தன் அருகிலேயே இருந்தால் இலங்கைக்கே சனாதிபதி ஆகிவிடலாம்போலத் தோன்றியது. இருவருமே அனகாவை பார்க்கவென அறைக்குள் நுழைந்தார்கள். அங்கே தயாளினி கட்டிலில் கிடந்ததைச் சிவகடாட்சம் கவனித்தார்.
“என்ன தயாளினி, என்னவோ நீர் சாமத்தியப்பட்டதுபோலக் கட்டிலில கிடக்கிறீர்?”
சிவகடாட்சம் பகடியாகச் சொல்ல அனகாதான் பதில் அளித்தாள்.
“அம்மாவுக்கு ஏலாம இருக்கு அப்பா. வயித்தப் பிரட்டுதாம்”
தயாளினி எழுந்திருக்க முயன்றாள். அப்போது மீண்டும் அவருக்குக் குமட்டிக்கொண்டு சத்தி தொண்டைவரை வந்து அடங்கியது. சிவகடாட்சம் மனைவியைக் கவலையோடு பார்த்தார்.
“என்ன ஓங்காளிக்கிறீர்? முகம் எல்லாம் களைச்சுப்போய்க் கிடக்கு. ஏதாவது ஏடாகூடமா சாப்பிட்டனீரா?”
“இல்லையப்பா …. கத்தரிக்காய் குழம்புதான் … உவேக்”
அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அடக்கமாட்டாமற் பளாரென்று சத்தியெடுத்துவிட்டார். சிவகடாட்சத்தின் வேட்டி முழுதும் மஞ்சள் திரவத்தால் நனைந்தது. திடீரென்று சிவகடாட்சம் சில கணக்குகள் போட்டார். சில சோதிடப் பாடல்களை முணுமுணுத்தார். தயாளினியின் குறிப்பைத் தன்னுடைய அலுமாரியிலிருந்து தேடி எடுத்தார். சில சமன்பாடுகளை மேசையிலிருந்த கொப்பியில் கிறுக்கினார். திருக்கணித பஞ்சாங்கத்தை எடுத்து பக்கங்களைத் தட்டினார். சுபத்திரா போய் தயாளினியில் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். இதற்கிடையில் சிவகடாட்சம் வியர்த்து விதிர்விதிர்த்துப்போய் இருந்தார்.
“தயா, உமக்குக் கடைசியாக எப்ப சுகமில்லாமல் வந்தது? நாள் தள்ளிப்போனதா?”
“ஏன் கேக்கிறிங்கள்? கொஞ்ச மாசமாகவே அடிக்கடி லேட்டாறதுதான். இந்த முறை மூண்டு கிழமையாயிட்டு. நான் மெனோபஸ் ஆக்குமெண்டு விட்டிட்டன்”
“என்ன சொல்லுறீர்? கடைசியா பங்கிறச்சி சமைச்சுச் சாப்பிட்டு நாங்கள் தனியாக் கிடந்தது எப்ப?”
தயாளினி கூச்சத்துடன் சுபத்ராவைப் பார்த்தார். சுபத்ராவும் புரிந்தவளாய் அதிர்ச்சியுடன் ‘வட் டு யு மீன் மாமா?’ என்று திரும்பினாள்.
“என்னப்பா சொல்லுறியள்? என்ர நல்லூரானே”
“குறிப்பிலயும் இருக்கு ஐசே … மகளுக்கும் பத்தில செவ்வாய். உமக்கும் அதே ராசிதான். இந்த நேரத்தில நிலத்தில கல்லைப்போட்டாலும் அள்ளிக்கொண்டு வளரும். முதலும் ஒருக்கா பார்த்திட்டு நான் பேசாம விட்டிட்டன். எண்ட கணிப்பு சரி எண்டால் இதுவும் பெட்டைதான்”
“என்ன மாமா விசர்க்கதை கதைக்கிறியள்? அம்பத்தாறு வயசில பிள்ளையா? யாழ்ப்பாணமே அலறுமே. சமாளிக்க முடியாது. மாமி உங்களிட்ட பிரக்னன்சி டெஸ்டிங் கிட் இருக்கா?”
“அது ஏண்டி அம்பது வயசு கிழவிட்ட இருக்கப்போகுது? என்னட்ட கோவிட் கிட்தான் இருக்கு”
“அப்ப அம்பது வயசு கிழவிமாதிரி கந்தசட்டி கவசம் பாடிக்கொண்டு இருந்திருக்கவேண்டியதுதானே? ஷிட். இந்த ஊரில ஒரு கவசத்தை ஒழுங்கா போடத்தெரியாம எப்பவுமே அக்சிடண்ட்தான். என் விதி. இரண்டு பேரும் இங்கேயே இருங்கோ. வேற ஆரிட்டயும் மூச்சு விடாதீங்க. நான் போய் பார்மசில டெஸ்டிங் கிட் வாங்கியோண்டு வாறன். மாமா முதலில இந்த வேட்டியை மாத்திட்டு வந்தாக்களோடை போய் நெட்வேர்க்கிங் செய்யுங்கோ”
சுபத்ரா வேகமாக அறையைவிட்டு வெளியேறினாள். ஹோலில் இவளைக்கண்டதும் மாணிக்கவாசகர் ஓடிவந்தார்.
“மிஸ், கந்தபுராணப் பெரு விழா ஒன்று யாழ்ப்பாணத்தில எடுக்கப்போகிறோம். அதில சிவகடாட்சத்துக்கு ‘தமிழ் வேலன்’ என்ற விருது கொடுத்து கௌரவிப்பமா? சூரனை அன்பு அரசியல்கொண்டு வதம் செய்ய வந்த பெருந்தகை என்று அவரைப் பாராட்டி…”
“குட் ஐடியா மிஸ்டர் மாணிக்கவாசகர். நான் அவசரமாக வெளியே போகவேண்டும். நீங்கள் தொடர்ந்து கலந்துரையாடுங்கள். நான் அஞ்சு நிமிசத்தில திரும்பிடுவன்.”
மற்றவர்களும் பின்னே வந்தார்கள்.
“மிஸ், அந்தக் கடலட்டை பிஸ்னெஸ்ல இந்தியாக் கொம்பனியோட நாங்களும் பார்ட்னர்ஷிப் போடலாமா?”
“பூனையோட சேர்த்து நாய், முயல் எல்லாம் வளர்க்கக்குடுத்தா என்ன?”
“‘இந்திய ஞான மரபில் அன்பு அரசியலுக்கான வகிபாகம்’ என்றொரு தொடர் கட்டுரையை நான் எழுதட்டா மிஸ்? ஜெயமோகன் வெப்சைட்டில அது வந்தா இலக்கிய உலகமே அதிரும் மிஸ்”
“சிவகடாட்சம் பாண்டே, சித்ரா லக்ஸ்மனன் என்று சில நேர்காணல்களில கலந்துகொண்டால் நல்லம். ஒரு யூடியூப் சானலில் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வாங்குவம். இப்பெல்லாம் இந்தியாக்காரன் கை காட்டினாத்தான் இங்க பெரிய ஆள் எண்டு நம்புவாங்கள்”
அவர்களிடம் தப்பி சுபத்ரா பார்மசிக்கு ஓடினாள். உள்ளே சிவகடாட்சம் வாந்தி தோய்ந்த வேட்டியை கழட்டி எறிந்துவிட்டு புது வேட்டியை மாற்றி செண்ட் அடித்தார். அனகா நடப்பது எதுவும் புரியாமல் தன் ஐபாடை எடுத்து கேமைத் தொடர்ந்து விளையாடத் தொடங்கினாள்.
“ஐயோ … உவேக்”
தயாளினி சத்தி எடுக்க சிவகடாட்சத்தின் வேட்டி மறுபடியும் காவியானது.
- தொடரும் -

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக