Skip to main content

ஆடை நீக்கு

 

அழுதுவிட்டு அகல்யா “சொறி அண்ணா” என்கிறாள். அண்ணருக்கு இப்படி எதிர்பாக்காமல் காதல் தோல்வி வரும் என்று தெரியாது. தண்ணி அடிச்சா தெம்பாக இருக்கும் என்று தவறணைக்குப் போகிறார். மப்பு பிடிபடுகிறது. அடுத்தநாளும் போகிறார். இரண்டு பிழா கேக்கிறது. மூன்றாம் நாள் கலன். ஐந்தாம் நாள் தவறணை திறக்கமுதலே அண்ணர் வாசலில் நிக்கிறார். ஆறுமாதம் கழித்து கோயிலடியில் கோமதியைக் காண்கிறார். கண்ட கணமே அவர் வீட்டு கனகாம்பரப் பூக்கள் எல்லாம் அவளுக்கு மாலை கட்ட நூலைத் தேடின. அண்ணர் அவசர அவசரமாக கோமதிக்கு நூலு விட்டுப்பார்த்தார். அவளோ “ஒரு சொப்ட்வேர்காரனுக்கு கழுத்தை நீட்டிச் சீரழிந்தாலும் சீரழிவேனேயொழிய உன்னைப்போல குடிகாரனுக்கு தலையை நீட்டமாட்டேன்” என்றுவிட்டாள். மீண்டும் காதல் தோல்வி. கனகாம்பரப் பூக்கள் வாடிப்போயின.

மொழிப்பயன்பாடும் அப்படித்தான் என்கிறார் ஜோர்ஜ் ஒர்வல். எழுபது வருடங்களுக்கு முன்னர் “Politics and the English Language” என்று அவர் எழுதிய கட்டுரையின் சில குறிப்புகள். இப்போதும் தமிழுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

A man may take to drink because he feels himself to be a failure, and then fail all the more completely because he drinks. It is rather the same thing that is happening to the English language. It becomes ugly and inaccurate because our thoughts are foolish, but the slovenliness of our language makes it easier for us to have foolish thoughts. The point is that the process is reversible. Modern English, especially written English, is full of bad habits which spread by imitation and which can be avoided if one is willing to take the necessary trouble.

அதே அண்ணரின் கதைதான் இங்கும். எங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் பிற்போக்குத்தனமாக இருந்ததால் மொழிப்பாவனையிலும் அது எதிரொலித்தது. பிறகு பரந்த மொழிப்பாவனையினால் அந்தப் பிற்போக்குத்தனம் தலைமுறைதாண்டியும் கடத்தப்படுகிறது. எவனாவது ஒரு “பைத்தியக்காரன்”தான் இடையில் புகுந்து இந்த சங்கிலியை உடைக்க முயலவேண்டும். பாரதி அந்த டைப் என்று நினைக்கிறேன். மனுதர்மமாக இருக்கட்டும், நம் இலக்கியங்களில் பெண்களாக இருக்கட்டும், அரசன் அடிமைப் பண்புகளாக இருக்கட்டும், ‘நான் சொல்கிறேன் நீ கேள்’ என்கின்ற மையவாத அதிகாரங்களாக இருக்கட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டதாலேயே சப்பை விளக்கங்களுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவல நிலைதான். அதனாலேயே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் மூதாதையருக்கு அகல்யா கிடைக்கவில்லை. இன்று நம்மை கோமதி குடிகாரன் என்கிறாள்.

எழுதும்போதும் சில விதிகளைத் தவிர்க்க முயலுங்கள் என்கிறார் ஜோர்ஜ். அவற்றைத் தமிழ்ப்படுத்த முயல்கிறேன்.

1 தெரிந்த உவமானத்தையோ சொல்வடையையோ பயன்படுத்துவதை தவிருங்கள்.

“மேகலா சிரிக்கும்போது நட்சத்திரங்கள் கலகலவென தரையில் சிந்தின” என்று மொக்கை போடாதே என்கிறார். மேகலா புன்னகைத்தா்ள் என்றாலே போதும். அவனவன் தன் மேகலாவின் சிரிப்பை யோசித்துக்கொள்வான். “கப்பல் கவிழ்ந்ததுபோல கவலையில் ஆழ்ந்தா்ள்” என்பதெல்லாம் தப்பாட்டம். வேண்டாம். “கோமதிக்கு நூலு விட்டுப்பார்த்தார்” என்று எழுதியதும் அயர்ச்சிதரும் உவமானமே! கோமதிக்கு ஸீபிளேன் விட்டுப்பார்த்தார் என்று எழுதியிருக்கலாம். ஆனால் கனகாம்பரக் கதை தொடர்ச்சியில்லாமல் போயிருக்கும்!

2 சிறிய வசனங்களை எழுதமுடியுமென்றால் நீளமான வசனங்களைத் தவிருங்கள்.

சொல்ல எடுத்துக்கொண்ட விடயத்தை சிறிய வசனங்கள் மூலம் தெளிவாகச் சொல்லமுடியுமென்றால் அதனை நீண்ட சிக்கலான நடையிலே எதற்கு எழுதுகிறாய் என்கிறார். உதாரணத்துக்கு.

“நடு இரவு மேகமூட்டமில்லாத தெளிவான நட்சத்திர வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் பிரபஞ்சம் எத்தனை பிருமாண்டமானது என்பதை உணர்வதோடு அதனை உள்வாங்கையில் பிரபஞ்சம் வேறு எங்குமே இல்லை எனக்குள்ளேயே இருப்பதுவும் என் ஒவ்வொரு உடல் அங்கங்களின் ஒவ்வொரு கலங்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் ஒவ்வொரு அணுக்களின் ஒவ்வொரு புரோட்டோன்களும் இலத்திரன்களுக்கும் குவார்க்குகளும் பொசன்களும் வெற்றிடங்களும்தான் பிரபஞ்சமாக வெளிப்பட்டு நிற்கிறதோ, நான்தான் இந்தப் பிரபஞ்சமோ என்ற எண்ண அலைகளையும் இது என்னுள் ஏற்படுத்துகிறது”

இதை சற்று ‘ஒர்வல்’படுத்திப்பார்ப்போம்.

“நடு இரவு. மேகமூட்டம் எதுவும் இல்லாத தெளிவான வானம். நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். இந்தப்பிரபஞ்சம்தான் எத்தனை பிருமாண்டமானது. தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கையில் இந்தப்பிரபஞ்சம் ஒன்றும் வெளியேயில்லை, எனக்குள்ளேயே இருக்கும் ஒன்று என்றே தோன்றுகிறது. நானேதான் பிரபஞ்சமாக விரிந்து நிற்கிறேனோ? என் உள்ளே இருக்கின்ற கோடிக்கணக்கான அணுக்களின் கூறுகள்தான் பிரபஞ்சமாக சிதறிக்கிடக்கின்றனவோ? என் புரோட்டன்களும் இலத்திரன்களும் குவார்க்குகளும் பொசன்களும் ஏன் வெற்றிடமும்கூட இந்தப் பிரபஞ்சமாக விரிந்து காட்சியளிக்கிறதோ? வியக்கிறேன்.”

அவ்வளவுதான் மாட்டர்!

3 ஒரு வார்த்தை தேவையற்றது என்றால் தூக்கிவிடுவது நன்று

மேலே உள்ள வாக்கியத்தின் “மேகமூட்டம் எதுவும் இல்லாத தெளிவான வானம்” என்ற வசனதை வெறும் “தெளிவான வானம்” என்றே எழுதியிருக்கலாம். அதுகூடத்தேவையில்லை. தூக்கிவிடலாம். நட்சத்திரங்களைப் பார்க்கிறேன் என்றால் வானம் தெளிவாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

4 நாளாந்த பாவனையில் ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்குமென்றால் தேவையில்லாமல் வேற்றுமொழி வார்த்தையையோ, விஞ்ஞானக் கலைச்சொற்களையோ பிரதியிடுவதைத் தவிர்ப்பது நன்று.

இயலுமானவரை எளிமையான தமிழ்வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு கீழே மூன்று வசனங்கள் இருக்கின்றன. எது உங்களின் தெரிவு?

கனகலிங்கம் காலையில் எழுந்து தனக்கு டீயும் மனைவிக்கு கோப்பியும் ஊற்றினார்.

கனகலிங்கம் காலையில் எழுந்து தனக்கு தேநீரும் தாரத்துக்கு குளம்பியும் தயாரித்தார்.

கனகலிங்கம் காலையில் எழுந்து தனக்கு தேநீரும் மனைவிக்கு கோப்பியும் ஊற்றினார்.

5 கருத்து சொல்லும்போது “இதை நீ செய்யாதே”, “ஒருபோதும் இப்படிச் செய்யாதே”, “சொல்லுறது விளங்காதா? மடையா, செய்யாதே” என்று பலகைக்கட்டையில் நின்றுகொண்டு மற்றவர்களை இருத்திவைத்து அறிவுரை சொல்லுவதும் எந்தப் பயனையும் கொடுக்காது

உதாரணத்துக்கு மூன்றாவது புள்ளியில் “ஒருவார்த்தை தேவையற்றது என்றால் ஒருபோதும் அதனை எழுதாதே” என்றுதான் முதலில் குறிப்பிட்டேன். பின்னர் “தூக்கிவிடுவது நன்று” என்று மாற்றினேன்.

அதிகாரம் சத்துரு.


Sources
http://www.economist.com/blogs/prospero/2013/07/george-orwell-writing?fsrc=scn/fb/te/bl/ed/georgeorwellonwritingthosesixlittlerules
https://www.mtholyoke.edu/acad/intrel/orwell46.htm

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக