Skip to main content

அரைச்சுக் குழைச்சுத் தடவ


அரைப்பு

“அடி
அரைச்சு அரைச்சுக்
குழைச்சு குழைச்சுத்
தடவத் தடவ
மணக்குஞ் சந்தனமே...!”
மகராசன்; தொண்ணூறுகளில் வெளியான ஒரு மரணவதைத் திரைப்படம். கமல் நட்புக்காக நடித்திருப்பார்.  அதில் வெளிவந்த சங்க இலக்கியப் பாடல்தான் இந்த "அரைச்சு அரைச்சு".  பாடலின் வரிகள் படான் என்றாலும் (உ.தா சின்ன சேலம் மாம்பழமே, மச்சான் தட்டுற மத்தளமே), வழமைபோல ராஜாவின் இசை நுணுக்கமானது. “சந்தனமே..”யில் விழும் சங்கதியை ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இதற்கு மேல் டீடெயிலாக எழுத இதுவொன்றும் இசைப்பதிவு கிடையாது. நிற்க.

“அரைச்சு அரைச்சு” பாடல், வெளிவந்த காலத்தில் பயங்கரப் பேமஸ். யாழ்ப்பாணத்தில் சரிந்து கிடந்திருந்த நியூமார்க்கட் வழியாக நடந்து செல்கையில் குறைந்தது இரண்டு புடவைக்கடை, ஒரு தேத்தண்ணிக்கடையிலாவது இதனைக் கேட்கமுடியும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பட்சத்தில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் ரோட்டுக்குச் சைக்கிள் மிதிப்பதற்குள் முழுப்பாடலையும் கேட்டு ரசிக்கலாம். எல்லாக்கடைகளிலும் ஒரே வானொலி. ஒரே பாடல். பயணவழி முழுதும் தொடர்ச்சியாகப் பாடல் அறுபடாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

ஏனோ இப்பாடலை கடந்த இருபது வருடங்களாக நான் தேடவேயில்லை. முற்றாக மறந்துபோயிருந்தேன். அண்மையில் ராஜாவின் யூடியூப் சனலிலே இதனைப் பதிவேற்றியிருந்தார்கள். கேட்கும்போது மீண்டுமொருமுறை வளையங்கள் சுற்ற ஆரம்பித்தன. ரிப்பீட்டில் கேட்டபடியே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

குழைப்பு



தொண்ணூறுகள் ஏன் எனக்குப் பிடித்தமான காலப்பகுதி என்பது ஒன்றும் பெரும் ரொக்கட் விஞ்ஞானம் கிடையாது. அது என்னுடைய பதின்மப் பருவம். அப்போது வெளியான மெலடிப்பாடல்கள், குறிப்பாக டூயட் பாடல்கள் எல்லாம் ஏன் பயங்கரமாகப் பிடித்துப்போயின என்பதும் அவற்றின் வரிகளை மரணப்படுக்கையிலும் ஏன் என்னால் மறக்க முடியாது என்பதுங்கூட ஒன்றும் பிரபஞ்ச விஞ்ஞானம் கிடையாது. ஒரே காரணம். காதல்.

ஒவ்வொரு மெலடிப்பாடலுக்கும் என்னோடு சேர்ந்து டூயட் பாட ஒரு சுண்டுக்குளியோ, வேம்படியோ, லேடிஸ் கொலிஜ்ஜோ கூடவே இருக்கும். பாடல்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கொன்வென்ட், உடுவில் என்று இந்த லிஸ்ட் விரிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நல்லூர் சீசனுக்கும் ஒவ்வொரு பெண். ஒவ்வொரு காதல். பிரச்சனையே இல்லாத காதல். கோகிலவாணி, மாளவிகா, சங்கீதா என்று இப்படி வரிசை மண்ணெண்ணெய்க்கியூபோல நீண்டுகொண்டேபோகும்.

Just bloody imagine. தினமும் நாங்கள் தூரத்தில் நின்று பார்த்த, எப்போதுமே பள்ளிச்சீருடையில் தெரிந்த பெண் கோயிலில் ஹால்ப்சாரி அணிந்து நடந்து போகிறாள். அதுவும் ஐந்தடி எட்டத்தில். இன்னமும் இரண்டு  எட்டு வைத்தால் அவள் வியர்வையைக்கூட வாசம்  பிடிக்கலாம். அப்படி ஒரு  நிலையில் அவளுக்குப் பின்னாலே உள்வீதி, வெளிவீதி என்று சுற்றுகையில், அவளுடைய காதுக்குத்தியோ, பின்முதுகு வியர்வைத் துளியோ, தலையுச்சிக் கனகாம்பரமோ ஏதாவது ஒன்று தெரிந்தாற் போதும், சனியன், காதல் வந்துவிடும். அவள் சிவலையா, கறுப்பியா, நீட்டு முகமா, வட்ட முகமா, எதுவுமே தெரியத் தேவையில்லை. ஐஞ்சாம் திருவிழாவில் கண்டுவிட்டால், மீதி இருபதுநாளும் அவளே வாழ்வு. அவளோடே வாழ்வு. அந்தச்சமயம் எந்தப்பாடல் பேமசாக இருக்கோ, அந்தப்பாட்டு அவளோடு சேர்ந்து மரத்தைச் சுற்றி அவசர அவசரமாகப் பாடப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்படும். “பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?” என்றால், ரோசாப்பூவுக்கு மற்றப்பக்கம் சோபனா நின்று “மீதி ஜீவன் என்னைப் பார்த்தபோது வந்ததோ” என்பாள். டிவைன். பூங்காவனமன்று இந்தக்காட்சி  உச்சம்  பிடிக்கும். அன்றைக்கு  சாமி  லேட்டாக சுற்றுமென்பதால், முருகன் இருப்புக்கு வருவதற்குள் இருட்டிவிடும். நல்லூரடியில் மெதுவான குளிர்காற்று வீச  ஆரம்பிக்கும். இத்தனை நாளும் ஹால்ப்சாரி அணிந்தவள் அன்றைக்கு மைசூர் சில்க்கில் வேறு வந்திருப்பாள்.  சாமி உள்ளே போனவுடன் அவளும் பரிவாரங்களும் கிழக்கு வாசல் முன்றல் மரத்தடியில் உட்கார்ந்து கதை அளப்பார்கள். அற்புதக் கணங்கள் அவை. உள்ளே போன முருகன்கூட வள்ளி தெய்வானையை வசந்தமண்டபத்தில் நித்திரையாக்கிட்டு எங்களோட வந்து நின்று அவளை ஆவென்று பார்க்குமளவுக்கு சீன் கமறும்.

ஆனால் இந்த ஆட்டமெல்லாம் பூங்காவனம்வரையிலும்தான். 



பூங்காவனம் முடிந்து அடுத்தநாள் இடம்பெறும் வைரவர் மடை அந்தத் திருவிழாவினுடைய எங்கள் காதல் தோல்வித் தினம். அவள் அந்தப்பக்கம் தலைவைத்தே படுக்கமாட்டாள். ஆனால் நாங்கள் கற்பனை செய்து கொள்வோம். தளபதி ரஜனிபோலக் குரல் இடறி “போடி, பேசாதே, போ” என்று இல்லாத அவளைத் திட்டி அனுப்ப, பின்னாலே இளையராஜா "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்று சோகப் பின்னணி இசைக்க,  பின்வீதி மணலைக் காலால் வீசி எறிந்து, இரண்டுநாள் பீலிங்காகப் பாடல்பாடி, மூன்றாம் நாள் பொன்னுச்சாமியிடம் தமிழ் வகுப்புக்கு வேளைக்கே செல்லும்போது; அவள் ஏலவே வந்து தனியாக அங்கிருப்பாள். இந்த அவள் அந்த அவள் அல்ல. புது அவள். புது வியர்வை. புதுக் காதுக்குச்சி. பதின்மப்பெண்களின் காதடியில் தலைமயிர் சுருண்டு அடங்காமற் கிடக்க அவர்கள் அடிக்கடி அதனைச் சுருட்டிச் சுருட்டி காதுமடலுக்கு மேற்புறமாக நீவி விட்டபடி இருப்பார்கள். இயல்பான வெட்கமோ, அல்லது எங்களுக்குக் காட்டும் வெற்றுச் சீனோ நானறியேன். ஆனால் அதைப் பார்க்கையில் சும்மா ஜிவ்வென்று .... 

வகுப்பில் வேறு எவரும் வந்திருக்கமாட்டார்கள். ஏதாவது பேசவேண்டும்.

“ராதிகா, நீங்கள் ஹோம்வேர்க் செய்திட்டீங்களா?”
நிற்க. 

ராதிகாவின் குரலை நீங்கள் எப்போதேனும் கேட்டிருக்கிறீர்களா? அப்படியே சித்ரா குரல் அவளுக்கு.  பாடத் தொடங்குவாள்.

“நிலா தமிழறிந்தால்,
அலை மொழியறிந்தால்
நம்மீது கவி எழுதி வீசும்!”

டூயட் தொடங்கிவிடும்.

தடவல்


ஆயகலைகள் அறுபத்துநான்கு என்கிறார்கள். இந்த அறுபத்துநான்கு கலைகளின் லிஸ்ட் முதன்முதலில் வாத்சாயனரின் காமசூத்ராவிலேயே வெளியானது. காமசூத்திரம் என்பது வெறுமனே காமத்துக்கானதும், புணர்ச்சிக்கலைக்குமானதுமான நூல் கிடையாது. ஆனால் அப்படி ஒரு தோற்றப்பாடு எம்மிடையே வந்துவிட்டது. காமசூத்ரா திரைப்படத்திலுங்கூட அதிலிருந்த “மோகனம்”, “வசீகரணம்”, “இரசவாதம்” என்ற கலைகளையே நாங்கள் அதிகம் ஆர்வமாகக் கவனித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படத்திலும் ஏனைய கலைகளையும் ஆங்காங்கே தெளித்திருக்கிறார்கள் என்பது இப்போது யோசித்துப்பார்த்தால் புரிகிறது. மீள ஒருமுறை பார்க்கவேண்டும்! உதாரணத்துக்கு “வித்து வேஷணம்” என்று ஒரு கலை உள்ளது. தமிழில் அதன் அர்த்தம் “நட்புப் பிரிக்கை”. Divide and Concur என்று நினைக்கிறேன். இது திரைப்படத்திலும் இருக்கிறது. இதுபோலச் சிற்பம், நடனம், தொன்மம் என்று பல ஐட்டங்கள் படத்தில் காட்டப்படுகின்றன. “நிமித்தக்கலை” என்பது சகுனம் பார்ப்பது. பொன், மணி தேடுவது ஒரு கலை. “பிறவுயிர் மொழி” என்று ஒரு அற்புதக்கலை உளது. காமசூத்திரா சொல்லும் அறுபத்துநான்காவது கலை “சூனியம்”!



அறம், பொருள் என்பவற்றுக்குப் பின்னேயே காமம் என்கிறது “காமசூத்ரா”. அதன் இரண்டாம் அத்தியாயம் மாத்திரமே காமத்தைப் பற்றிச் சொல்கிறது. மீதி எல்லாமே வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் பற்றிய அறிவுரைகள்தாம். பொய் சொல்லாதே, புலால் உண்ணாதே, பொறாமை கொள்ளாதே வகை விடயங்கள். திருக்குறள்போல் காமசூத்திராவும் ஒரு நீதிநூல். என்ன ஒன்று, அதன் மொழிபெயர்ப்புகள் பல காமத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி விளையாடிவிட்டன. இது திருக்குறளின் காமத்துப்பாலை மாத்திரம் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டு திருக்குறள் தமிழில் வெளியான அளப்பரிய காமநூல் என்று சொல்வதற்கு ஒப்பானது. 

வாத்சாயனரையும் வள்ளுவரையும் ஒப்புநோக்கி ஏதேனும் ஆய்வுகள் வந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. இன்றைக்கு காமசூத்திரம் என்பது என்னவோ வீட்டிலே வைத்திருக்கவே கூடாத நூல் ஆகிவிட்டது. அதன் அட்டைப்படங்களும் அப்படியே வெளிவருகின்றன. “The Art of War”, “The Prince”, “காமசூத்ரா” என்ற மூன்று புத்தகங்களும் எல்லோர் வீடுகளிலும் நிச்சயம் இருக்கவேண்டியவை என்பார்கள். நான் இன்னமுமே இந்த மூன்று நூல்களையும் முழுமையாக வாசிக்கவில்லை. காமசூத்திரம் தமிழில் வெளிவந்திருக்கிறதா என்று தெரியவில்லை. வந்திருந்தாலும் “சாந்தி ராஜேசின் காற்பெருவிரல் நகத்தைக் முனகிக்கொண்டே கடித்தாள்” என்று எழுதுவார்கள். செவ்வியல் இலக்கியவாதியின் கையில் கிடைத்தால் “பரமாத்மா, நிட்டையில் நீடித்து நின்ற ராதைதேவியை கண்ணுற்றுப்பார்த்தார். மெதுவான கால நீட்சியில் அவளுடைய பூலோக லௌகீகங்கள் என்ற மேலாடையை விலக்கி இப்பிறவியின் அவட்டைகளிலிருந்து விடுவித்து அவளைப் பிரபந்த மயக்கத்தில்...”. என்ன சனியனுக்கு. நமக்கு ஆங்கிலமே போதும்.

நிற்க.

காமசூத்ரா ஒரு ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்று வைத்துக்கொண்டாலும், ஆயகலைகள் அறுபத்துச்சொச்சத்தை நாங்கள் அதற்குப்பிறகு ஏன் இத்தனை ஆண்டுகளாக அப்டேட் பண்ண முயலவில்லை என்ற கேள்வி எழுகிறது. காமசூத்ரா என்றில்லை, வேதங்கள், திருமுறைகளைக்கூடத் தொடர்ச்சியாக ஒரு குழு அமைத்து அப்டேட் பண்ணிக்கொண்டே இருக்கலாம். இலக்கியங்களிலும், சங்க இலக்கியத்தைத் தொகுத்ததுபோலத் திணைப்படுத்தி தற்கால கவிதைகளையும் குறுந்தொகை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை அல்லது வேறு வகைகளில் பிரிக்கலாம். யாரேனும் ஏலவே பிரித்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியாது. விமர்சனப்பார்வை நீக்கி இரசனையோடு செய்யவேண்டும். ஸ்ரீபிரஷாந்தன் தொகுத்த “இருபதாம் நூற்றாண்டு ஈழத்துக் கவிதைகள்” அத்தகைய ரசனைத் தொகுப்புக்குச் சிறந்த உதாரணம். தனிநபர் தொகுப்புகள் பல இப்போது வருகின்றன. ஆனால் அவை ஒரு காலத்தின் இலக்கியத்தைப் பிரதிநிதிப்படுத்த முடியாது. எல்லோரும் ஆளுக்கொரு தவில் வாங்கி வாசித்துக்கொண்டிருப்பதில் கூட்டுக்கச்சேரிகள் இப்போதெல்லாம் சாத்தியப்படுவதில்லை. தன்னை முன்னிலைப்படுத்தாத தொகுப்பாளர்கள் வரவேண்டும். சங்க இலக்கியத்தைத் தொகுத்தது யார் என்றே நமக்குத் தெரியாது. இதெல்லாவற்றையும் யோசிக்கையில், தமிழை மயிலிறகுபோல பாடப்புத்தகத்துக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு அவ்வப்போது வளருகிறதா என்று கவனிக்க மாத்திரம் திறந்துபார்க்கிறோமோ என்று தோன்றுகிறது. நான்கு நாள்களுக்குப்பிறகு அது வளர்கிறது என்றும் நம்பத்தலைப்பட்டு விடுகிறோம். 

மணக்குஞ் சந்தனம்


இந்த அறுபத்துநான்கு கலைகளை அப்டேட் பண்ணும்போது தவறாமல் சேர்க்கவேண்டிய ஒரு கலையைப்பற்றியே எழுத ஆரம்பித்தேன். அதற்குள் இருபது ஓவர்கள் கடந்துவிட்டன. எண்பதுகளில் உருவான கலியாணவீட்டு வீடியோ கொப்பி/சிடியிலே என்னென்ன பாட்டுகளை எங்கெங்கே சேர்ப்பது என்பதுவே இங்கு எழுத எடுத்துக்கொண்ட கலையாம். 

“பாட்டடிப்பது” என்ற இந்தக் கலையைச் செய்வதற்கென்றே அன்று தொட்டு பல கலைஞர்கள் உருவாகி வந்துள்ளார்கள். அவர்கள் இசைக்கலைஞர்கள் அல்லர். ரசிகர்கள். எண்பதுகளில் இக்கலைஞர்கள் தங்கள் வீட்டிலே அடுக்கடுக்காய் மக்ஸல், TDK கசட்டுகளில் பாடல்களை ரெக்கோர்ட் பண்ணி வைத்திருப்பார்கள். கசட் கவரின் பின்புறம் “A” பக்கம் உள்ள பாடல்கள் லிஸ்ட், “B” பக்கம் உள்ள பாடல்கள் லிஸ்ட் என்று அழகான கையெழுத்தில் உருட்டி உருட்டி எழுதப்பட்டிருக்கும். கசட்டின் நடுத்தண்டுப் பகுதியில் “இளையராஜா இன்னிசை பகுதி 1” என்றோ “Evergreen Songs Part 2” என்றோ எழுதியிருக்கும். பின்னாட்களில் கசட் சிடியாக மாறி, சிடி ஐபொட், யூஎஸ்பியாக மாறி இன்று ஸ்ட்ரீமிங் பிளேலிஸ்டாகப்போனாலும் அந்த ஆதாரக்கலையும் அதன் நோக்கமும் மாறவேயில்லை.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நண்பர் கூட்டத்தினுள்ளும் இதற்கென்றே ஸ்பெஷலாக ஒருவர் இருப்பார். தற்போது பிரபல கெமிஸ்ட்ரி வாத்தியாராக உள்ள சிவத்திரன் அண்ணை ஒரு பயங்கர மெல்லிசை வெறியர். பாட்டடிக்குங் கலைஞர். எண்பதுகளில் ஒரு கலியாண வீடு என்றால் அண்ணர் சைக்கிள் கரியரில் கார்  பட்டிரி, ஸ்டீரியோ ரேடியோ, ஒரு கார்ட்போர்ட் பெட்டி நிறைய பாட்டுக்கசட்டுகள் சகிதம் வந்திறங்குவார். பட்டிரிக்கு அசிட் நிரப்பிச் சார்ஜ் பண்ண ஐம்பது ரூபாய் ஆகும். ஆரியகுளத்தடி கராஜில் செய்துகொள்ளலாம். அதற்கானச் செலவு கலியாண வீட்டுக்காரர் தலையில் கட்டப்படும். 

கலியாணத்துக்கு மூன்று நாள் முன்னமேயே சொக்கட்டான் பந்தல் போடத்தொடங்கையில் கசட்டில் “இதழோடு இதழ் சேரும் நேரம்” பாடல் ஊர் முழுதும் அலறும். அடுத்தது “பொங்கியதே காதல் வெள்ளம்”. அடுத்தது “ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே”, "வைகாசி மாசத்துல பந்தல்". இப்படி இரவு இரண்டு மூன்று மணிவரைக்கும் பாட்டு போய்க்கொண்டே இருக்கும். தொண்ணூறுகளில் இந்த லிஸ்ட் “மலரே மவுனமா”, “புதுவெள்ளை மழை”, “செம்பூவே”, “அத்திப்பழஞ் சிவப்பா”, "புறா புறா பெண்புறா", "முத்துமணி மாலை" என்று மாறியது. இப்போது “அய்யய்யோ ஆனந்தமே” முதல் “மாயநதி” வரை போய்க்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” என்கிறார்களோ தெரியாது.

கலியாணம் முடிந்து இரண்டு நாட்களில் வீடியோக்காரருக்கு பாட்டு லிஸ்ட் எழுதிக்கொடுக்கவேண்டும். இருபது பாடல்களேனும் தேவைப்படும். எந்தெந்த சிட்டுவேஷனுக்கு என்று விவரித்து பாடல்களைக் குறித்துக் கொடுத்து, வீடியோக்காரரிடம் அப்பாடல்கள் இருந்தால், சுபம். இல்லாவிட்டால் வீடியோக்காரர் தன்னுடைய டேஸ்டுக்கு “போவோமா ஊர்கோலம்”, “நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று” என்று ஒரே டெம்ப்ளேட்டாகப் போட்டு கலியாண வீட்டுக்கொப்பியை பிள்ளையார்கோயில் திருவிழாக்கோஷ்டிக் கச்சேரி ஆக்கிவிடுவார்.

இதற்கும் ஆபத்பாந்தவனாய் சிவத்திரன் அண்ணா ஆஜராகிவிடுவார். ஒரு வீடியோக்கொப்பிக்கு பாடல்கள் கொடுப்பது ஒரு திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைப்பதுபோல; சீனுக்குச் சீன் பாடல்கள் வைக்கவேண்டும். பாடல்கள் சீசனுக்கு ஏற்ப மாறுபடும்.

ஒரு ரஷ் பார்ப்போம்.

அநேகமான கலியாணவீட்டு வீடியோ கொப்பிகள் வாசல் வாழைக்குலையில் செருகியிருக்கும் இளநிக்கோம்பையிலிருந்தே ஆரம்பிப்பதுண்டு. கிழக்கு வானம் கிழிபட்ட வாழையிலைகளுக்குள்ளால் வெளிக்கும்போது ஒளிக்கீற்றுகள் பலவண்ணங்களில் சிதறும். எங்கள் வீடியோக்காரருக்கு ஸ்கோப் கிடைக்கின்ற முக்கியமான இடமிது. 

இந்த இடத்தில் நம்மாள் எப்படியான பாடல்கள் கொடுப்பார்?

எண்பதுகளில் “காலைத்தென்றல் பாடிவரும் இராகம்” இதற்கு மிகப் பொருத்தமான பாடல். சிவத்திரன் அண்ணா “புத்தம் புதுக்காலை” போடவேணும் என்று அடம்பிடிப்பார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதே சிவத்திரன் அண்ணா “இளநெஞ்சே வா” என்று அப்டேட் ஆகிக்கொன்டார். தொண்ணூறுகளின் இறுதியில் நானும் இந்தக்கலைத்துறையில் சிறிதுகாலம் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய தெரிவு “பச்சைக்கிளிகள் தோளோடு”. அப்படியே அந்த “தந்தானானே தானானே” என்ற இசையோடு வாழைக்குலையில் இளநிக்கோம்பையை நினைத்துப்பாருங்கள். கூவும். பிற்காலத்தில் “திருமண மலர்கள் தருவாயா” என்று ஒரு பாடலை பல வீடியோ கொப்பிகளில் அவதானித்ததுண்டு.

வாழைக்குலை ஸீன் முடிய காட்சி தோரணங்களுக்கு முன்னேறும். தாய்மாமனோ பெரியப்பாவோ பட்டை, சந்தனம், குங்குமத்தோடு வாசலில் மாவிலைத்தோரணம் செருகிக்கொண்டிருப்பார். ஐந்து அல்லது ஏழு மாவிலைகளைத் தொங்கவிடுவர். இன்னொரு மாமா, மாமி சோடி பூரண கும்பம் வைத்து விளக்கு ஏற்றுவதாகப் போஸ் கொடுப்பார்கள். அப்போது சிறு பிள்ளைகள் குறுக்காலும் மறுக்காலும் ஓடும். லேட்டாக எழும்பியவர்கள் அப்போதுதான் துவாயோடு கலக்சிக்குப் போவார்கள். இவை வெகு இயல்பாக வீடியோவில் எட்டிப்பார்க்கும். இது எல்லாமே பச்சைக் கிளிகளுக்குள் அடங்கிவிடும்.

அடுத்து தலைப்பாகை மாற்றும் படலம். மாப்பிள்ளை அறை. மாப்பிள்ளை இரவிரவாக அடுத்தநாள் இராத்திரிக்காக ரிஹெர்சல் பண்ணிவிட்டு லேட்டாகத்தான் நித்திரை கொள்ளப் போயிருப்பார். அந்தாளைக் கையில் வெத்திலையைக் கொடுத்து வெறும்மேலுடன் நடுஹோலில் உட்கார்த்திவிடுவார்கள். சிவந்த கண்களுடன் அப்போதுதான் அண்ணர் வேள்விக்கு நேர்ந்த சாவல்போல சிலிர்த்துக்கொண்டு இருப்பார். ஆளாளுக்கு அறுகம்புல்லையும் பாலையும் தலையில் தப்புவார்கள். பாலூத்தி முடிய தோயவார்ப்பு. கிணற்றடியில் ஆளை உட்கார்த்தி வைத்து, வீடியோ லென்சில் தெறிக்காதவாறு தலையில் தண்ணீர் ஊற்றவேண்டும். வேட்டி நனைந்து, எல்லாம் தெரிந்து, எல்லோரும் அகன்று, அண்ணர் குளித்துத் திரும்பினால், அடுத்த சீன் மாப்பிள்ளை அறையில். கட்டிலில் வேட்டி, சால்வை, குளித்துவிட்டு உரிந்துபோட்டுக்கிடக்கும் சாரம். துவாய், பெல்டு, இடுப்புக்குக் கட்ட சணல் கயிறு, புது அப்பிள் பெண்டர்கள் என்று பல ஐட்டங்கள் பரவிக்கிடக்கும். மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் அங்கு கூடிவிடுவார்கள். காலங்காலமாக அடிக்கும் ஒரே பகிடிகளை மீண்டும் விடுவர். மாப்பிள்ளைக்கு வேட்டி கட்டிவிடுகிறேன் பேர்வழி என்று அயர்ன்பண்ணி வைத்திருக்கும் பட்டுவேட்டியை உண்டு இல்லை என்று பண்ணுவர். இன்னொருவன் நெருப்புக் குச்சியால் நெற்றியில் மூன்று குறி வைப்பான். இதையெல்லாம் சகித்துக்கொண்டு கடல் படத்துக்கு கமரா பிடித்த ராஜீவ்மேனன்போல அலட்டிக்கொள்ளாமல் வீடியோ பிடிக்கவேண்டும். கொப்பனையும் கொம்மாவையும் பெத்த மகனைக் கொஞ்சச்சொன்னால் அதுகள் மகன் என்ன பவுடர் போட்டிருக்கிறான் என்று சொக்கையை மணந்து பாக்குங்கள். எதையுமே காட்டிக்கொள்ளாமல் ராஜீவ்மேனன் கர்மவீரன்போல அடுத்தகாட்சிக்குத் தாவவேண்டும். இந்த சீன் அப்படியே மாப்பிள்ளை தலைப்பாகை மாற்றி, வந்தவர்கள் சாப்பிட்டுப்போகும்வரைக்கும் நீடிக்கும். இந்தச் சிட்டுவேசனுக்கு சிவத்திரன் அண்ணா “வராது வந்த நாயகன், தராதரம் நிறைந்தவன்” என்று சோங் கொடுப்பார். நான் “கொக்கு சைவக் கொக்கு” என்பேன். இப்போது எந்தப்பாடல் பொருந்தும் என்று தெரியவில்லை. 

இனி மாப்பிள்ளை கார் புறப்படும்போது கட் பண்ணினால், அடுத்த சீன் மண்டபத்தில் கார் வந்து சேர்கையில் ஆரம்பிக்கும். மாப்பிள்ளை இறங்கி நடந்துவரும்போது, சிம்பிளாக அலட்டிக்கொள்ளாமல் “தானந்தனக் கும்மி கொட்டி”, “கட்டி வச்சுக்கோ”, “தவமின்றிக் கிடைத்த வரமே” போன்ற பாடல்களையே கொடுக்கவேண்டும். அதிகப்பிரசிங்கித்தனமாக “தங்கமகன் இன்று சிங்கநடை” என்றாலோ “நீ நடந்தால் நடை அழகு” என்று லொள்ளுப் பண்ணினாலோ வீடியோக் கொப்பி நாறிவிடும்.

அடுத்தது அல்டிமேட் சீட்டு நுனி சீன். மணமகள் அறிமுகம்.

எப்படி சூப்பர்ஸ்டார் தோன்றும் காட்சியில் மண் புழுதி, விரல் நுனி, கால், கை என்று ஆரம்பித்து கடைசியில் தலைவரின் மூஞ்சியைக் குளோஸ் அப்பில் காட்டுவார்களோ அப்படித்தான் கலியாண வீட்டுக் கொப்பியிலும் மணமகளுக்கும் பயங்கர பில்டப் கொடுப்பார்கள். முதலில் ஒரு வெறும் பனித்துளிதான் போகஸ் ஆகும். பனித்துளியினுள் அறைக்குள் தொங்கிக்கொண்டிருக்கும் தோரணமெல்லாம் மின்னுவது தெரியும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கமரா ஸூம்அவுட் ஆகையில் அது பனித்துளி அல்ல வியர்வைத்துளி என்பது விளங்கும். மேலும் கமரா ஸூம்அவுட் ஆக ஆக, வியர்வைத்துளி இருப்பது மணமகளின் முதுகின் தாழமுக்கப் பிரதேசம் என்பது புலப்படும். இப்போதே நம்மாள் சீட்டு நுனிக்கு வந்திருப்பான். சொல்லப்போனால் மாற்றான் மனைதான். பட் இது நோக்கல் அன்றி காட்டலாதலால் கலைக்கண் வெட்டாமல் பார்க்கலாம். 

கமரா இன்னமும் ஸூம் அவுட் ஆகையில், வியர்வைத் துளிகள் அருகே மயிர்க்காம்புகள் குத்தீட்டுகொண்டு நிற்பது புலப்படும். மேலும் ஸூம் அவுட்டாக முதுகு சென்றல் கொலிஜ் கிரவுண்ட் மாதிரி வெளிச்சுக் கிடப்பது விளங்கும். அது திறந்தவெளி முதுகு பஷனாக இருந்த காலம். எந்தளவுக்கு கண்ணிவெடி அகற்றி முதுகைக் கிளியர் பண்ணலாமோ அந்தளவுக்கு பிளவுஸ் தைப்பவர்கள் காணிகளை விடுவித்திருப்பார்கள். மேக்அப்காரி அதில் ஏதோ ஒரு பிங்க் பவுடைரை அடுப்படியை சாணியால் மெழுகுவதுபோல மெழுகி வைத்திருப்பார். மின்விசிறி, குளிரூட்டு வசதிகள் இல்லாத காலமாததால் வியர்வையில் முதுகுத்தண்டுவழியே பிங்க் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். கமக்கட்டு வியர்த்து அந்த ஏரியாவேறு கறுத்துப்போய் இருக்கும். 

முதுகு ஸூம் அவுட்டாகி முடிகையில் அப்படியே பின்னாலே ஆளுயுர சடைநாக முடி நீளும். கமராவும் முடியோடு கீழே இறங்கி சுழன்றடித்து மணப்பெண்ணின் முன்னங்காலைப் போகஸ் பண்ணும். மருதொண்டி, கியூடக்ஸ் எல்லாவற்றையும் காட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாரியின் பிளீட்ஸ் காட்டி அப்படியே மேலே எழும். அப்படியே எழுந்து இனி மூஞ்சியைக் காட்டுவார்கள் என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. காட்சி பக்கென்று முன்னாலிருக்கும் டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியைக் காட்டும். அதிலே கொஞ்சம் கொஞ்சமாக மணமகளின் மூஞ்சி புலப்பட ஆரம்பிக்கும். கண்களிலிருந்து ஆரம்பிப்பார்கள். கிட்டத்தட்ட “மெல்லத் திறந்தது கதவு” அமலாவின் கண்கள் அளவுக்கு பில்டப் கொடுப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாம் பிறை, நாலாம் பிறையாகி, பத்தாம் பிறையாகி முழுமதி முகமும் முழுதாய்த் தெரியும்போது ப்பா. அன்றிரவு நிலாவில் தரையிறங்கப்போகும் ஆம்ஸ்ட்ரோங்கை நினைக்க நினைக்கப் பாவமாய் இருக்கும்.



சிவத்திரன் அண்ணா இந்த மணமகள் இன்றோ சீனுக்கு சுரணையே இல்லாமல் “பூ முடித்து போட்டு வைத்த வட்ட நிலா” என்ற பாடலைக்கொடுப்பார். நான் மட்டும் சும்மா ஆளா?  எனக்குப் “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ” பிடிக்கும். பிற்காலத்தில் இந்தக் காட்சிக்கு “யாரோ ஒருத்தி என்றவளை”, “அழகோ அழகு” என்றெல்லாம் பாடல்களைப் போட்டு வதைத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் முடிந்து பெண்ணின் தாயையும் தகப்பனையும் கூடவிட்டுப் படமெடுப்பார்கள். அலை பாயுதேயின் “யாரோ யாரோடி” அதற்கு நன்றாகப் பொருந்தும். அடுத்தகட்டம் மணமகள் மண்டபத்துக்குள் நுழையும் தருணம். காலம் காலமாக இந்தக்கட்டத்துக்கு “வாராயென் தோழி வாராயோ”, “மணமகளே மருமகளே வா வா” பாடல்களையே போடுவார்கள். அரசியல் படத்தின் “வாராயென் தோழியே” பாடல் இங்கு மிகப்பொருத்தமாக இருக்கும். அண்மையில் ஒரு வீடியோவில், மணமகள் மிக மெதுவாக குனிந்த தலையோடு மணவறைக்குள் என்ரியாகையில் “பூக்களே சற்று ஓய்வெடுங்கள், அவள் வந்துவிட்டாள்” என்று ஒலித்தது!

இதற்குப்பின்னர் ஸ்டாண்டர்ட் டூயட் பாடல்கள் என்று கொஞ்சம் இருக்கின்றன. அந்தந்தக் காலங்களில் புகழ்பெற்ற பாடல்கள். “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”, “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே”, “என் வீட்டுத்தோட்டத்தில்”, “கண்ணாமூச்சி ஏனடா”, “ஒருநாளும் உனை மறவாத”, “காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா”, “மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா?” என்று பாடல்கள் நீண்டுகொண்டேபோகும். தாலிகட்டுச் சமயத்தில் மாத்திரம் இடையில் நிறுத்தி லைவ் ரெக்கோர்டிங் ப்ளே பண்ணுவார்கள். ஐயர் மந்திரம் சொன்னதும் யேசுதாஸ் பாடிய “சீதா கல்யாணம்” வேர்ஷன் போட்டால் அற்புதமாக இருக்கும். கேட்டுப்பாருங்கள்.

அடுத்து, வந்தவர்கள் மொய் கொடுப்பதற்காகக் கியூவில் நிற்கும் சீன். அது கபாலியில் மனைவியைத் தேடிப்போகும் சீன்போல மணிக்கணக்காக நீண்டுகொண்டு போகும் ஒரு சீன். ஆனால் யார் யார் திருமணத்துக்கு வந்தார்கள் என்ற வரலாற்றுப்பதிவுக்கு இந்தக்காட்சியே முக்கியம் என்பதால் எடுத்தே ஆகவேண்டும். அதன்பின்னர் சாப்பாட்டுப்பந்தி. இந்தச் சமயங்களில் கொஞ்சம் விறுவிறுப்பான காதல்பாடல்கள் இசைக்கப்படும். “ஒட்டகத்தைக் கட்டிக்கோ”, “ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ளே”, “மைனா மைனா மஞ்சள் மைனா” வகைப்பாடல்கள். “அடி அரைச்சு அரைச்சு” பாடலைப் புகுத்த மிகச்சரியான தருணமும் இதுவே!

இதெல்லாம் முடிய மணமகனும் மணமகளும் திருமணமண்டபத்திலிருந்து ஸ்ட்ரெயிட்டாக மகாபலிபுரத்துக்குச் சென்றுவிடுவார்கள். அடுத்தகணம் சுவிட்சர்லாந்து பனிமலைகளுக்கு மத்தியில் அவன் தோளில் அவள் சாய்ந்தபடி காட்சி கொடுப்பாள். அந்தக்குளிரிலும் இருவரும் வியர்வையில் குளித்திருப்பார்கள்! திடீரென்று தஞ்சைப் பெருங்கோயில் முன்னர் காட்சி கொடுப்பார்கள். பிறைநிலாவில் ஊஞ்சல் ஆடுவார்கள். திருவிளையாடல் படத்தில் நாரதர் திரிவதுபோல முகில்களுக்குள் நடமாடுவார்கள். சில நேர்த்தியான கோச்சடையான் குவாலிட்டி கிரபிக்ஸ்காரர்கள் செம்பரத்தம் பூவுக்கு நடுவில் ஓட்டை போட்டு, உள்ளே மாப்பிள்ளை பொம்பிளையை காட்டுவதுமுண்டு. திடீரென்று பத்துப் பதினைந்து மாப்பிள்ளை பொம்பிளைப் படங்கள் வட்டமாகச் சுற்ற ஆரம்பிக்கும். இப்படியான ஸ்பெஷல் எபெக்ட் காட்சிகளுக்கு என்று ஸ்பெஷலான பாடல்கள் எதுவும் கிடையாது. எந்த டூயட்டும் பொருந்தும். பல்வேறு அதிசயங்களில் இடம்பெறும் காட்சி என்பதால் “பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசயம்” கொஞ்சம் பொருந்திவரும். “அதிசயமே அசந்து போகும் நீயெந்தன் அதிசயம்” என்னும்போது நம்ம ஐஸ்வர்யாராய் ஒரு சிரிப்புச் சிரிக்குமே. ப்பா. செத்தே போகலாம். போவீர்கள். 

எல்லாம் முடிந்து இறுதி எழுத்தோட்டக் காட்சியில் “கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல” என்று மணமக்களுக்கு வாழ்த்துப்பா பாடுவதுடன் அந்தத் திருமண வீடியோக் கொப்பி கடைக்காரரின் முகவரியோடு  இனிதே நிறைவுறும்.

தொடர்புகளுக்கு
கரன் வீடியோஸ் நிறுவனத்தார்
42, ஸ்டான்லி வீதி (ஆரியகுளச் சந்திக்கருகில்)
யாழ்ப்பாணம்.

அடி


சாமத்தியவீடு, திருமணம், செத்தவீடு, இன்னபிற வீடுகளின்போது எடுக்கப்படும் வீடியோக்கள் எத்தனை தடவை பார்க்கப்படுகின்றன என்பது சந்தேகத்துக்குரியது. தொண்ணூறுகளில் வீடியோ கொப்பி வெளியானதுமே மொத்த ஊருமே அதைப்பார்க்கவேண்டும் என்று அடம்பிடிக்கும். காரணம் வீடியோ பார்ப்பதற்கு ஜெனெரேட்டர் வாடகைக்கு எடுக்கையிலே, கையோடு மேலும் ஐந்து தமிழ்ப்படங்களை இரவோடு இரவாகச் சேர்த்துப்போடுவார்கள். மற்றும்படி வீடியோவைப் பார்க்கவேண்டும் என்ற நிஜமான ஆர்வம் மணமக்களின் பெற்றோருக்கும், வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்களுக்கும் மாத்திரமே இருப்பதுண்டு. மணமக்களுக்குக் கூட தங்களின் வண்டவாளத்தை வீடியோவில் பார்க்கும்போது “அந்தரமாக” இருக்குமே ஒழிய அதை ரசிக்கமுடியாது. ஏனைய ஐந்துகள் எல்லாமே மூன்று மணிநேர வீடியோவில் அவர்கள் தோன்றும் ஐந்து செக்கன் காட்சிக்காகவே முழு வீடியோவையும் கொழுக்கட்டை மூஞ்சியோடு உட்கார்ந்திருந்து பார்ப்பார்கள். குறிப்பிட்ட மாப்பிள்ளை பொம்பிளைகூட இரண்டாம்தடவையேனும் அந்த வீடியோவை வாழ்நாளில் பார்த்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.

இப்போதெல்லாம், தெரிந்தவர் வீட்டுத்திருமணத்தின் வீடியோக் கொப்பி ரிலீஸ் ஆகிய பின்னாலே அவர்கள் வீட்டுக்குப் போவது என்பது பிரான்சு நாட்டு பீச்சிலே பிக்கினி இல்லாமல் முழு ஆடையுடன் நுழைவது போன்றது. உரிந்து எடுத்து விடுவார்கள். அதுவும் மாப்பிள்ளையின் தாயோ மணப்பெண்ணின் தாயோ வீட்டிலிருந்தால் கதை கந்தல். உட்கார்த்தி வைத்து வீடியோவைக் காட்டாமல் அனுப்பமாட்டார்கள். வேண்டாம் என்று மறுக்க முடியாது. தரித்திரம், கொப்பியை ஓடவும் விடாமல் எழுத்தோட்டத்திலிருந்து போட்டுத் தாலியறுப்பார்கள். அவர்களுக்கு வீடியோவை மீளவும் பார்க்க ஒரு காரணம் வேண்டும். அதற்கு நாம்தான் வசமாகச் சிக்குவோம். வீடியோகூட ஓகே. பார்த்திடலாம். ஆனால் பக்கத்திலிருந்து அந்த மனுசி கொடுக்கும் ரன்னிங் கொமென்றியைத் தாங்கவே முடியாது.

"இவர் இன்னார்". "இவர் இன்னாரின் மகன்". " இன்னாரின் இன்னாரின் மகள்". "இவர் இன்னாரின் மாமியின் அண்ணன்காரின் இரண்டாவது மகள் முடித்தது". "இன்னார் நாங்கள் இடம்பெயர்ந்து குளப்பிட்டியில் இருந்தபோது மூன்றாவது வீட்டில் இருந்தவர்". "இன்னார் நோர்வேயிலிருந்து வந்து நிக்கிறார்". "இன்னாருக்கு முதல் தாரத்தோடு இரண்டு பிள்ளை இருக்கு". "இந்தப்பிள்ளை இப்ப பங்களாதேஷில் மெடிசின் செய்தது". "இவளுக்கு பேராதனையில சிநேகிதம் இருக்கிறதாக் கேள்வி, தேப்பன் பாவம்". "அந்த ஒட்டியாணம் நல்லாப்பொருந்துது என்ன? பிளவுஸ் இறுக்குது என்று சொல்லிக்கொண்டிருந்தவள், நல்லகாலம் வீடியோவில தெரியேல்ல". "சீலை இந்தியாவுக்குப் போய் எடுத்தது". "வீடியோவுக்கு மட்டும் ரெண்டு லட்சம் முடிஞ்சுது". 

அன்ரியின் ஒவ்வொரு கொமேண்டுக்கும் அபத்தமாகச் சிரித்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது பதில் சொல்லவேண்டும். நீங்கள் வீடியோவில் மொய் கியூவில்தான் தெரிவீர்கள். அன்ரி அதனைக் கவனித்துக்கூட இருக்கமாட்டார். வீடியோ முடியும் வரைக்கும் தப்பமுடியாது. அதற்குப்பிறகுதான் தேத்தண்ணியே கிடைக்கும். சரி தேத்தண்ணியையாவது நிம்மதியாகக் குடிக்கலாம் என்றால், அப்போதுதான் அன்ரி ஆரம்பிப்பார்.
“ஐய்யய்யோ, வீடியோ பார்த்தனீங்கள், உங்களுக்கு வெடிங் அல்பத்தைக் காட்ட மறந்தே போனன்”

&&&&&&&&&&&&&&&&&&&&&&
படங்கள்:
thumbs.dreamstime.com
www.gettyimages.com.au/detail/photo/nallur-festival-high-res-stock-photography/456465343
s7.photobucket.com/user/satish80/media/KSFINAL6.jpg.html

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக