Skip to main content

2019

ஞாபகத்திலேயே இல்லாத, ஷோர்ட் லெக்குக்குள் சும்மா தட்டிவிட்டு அவசரமாக ஓடி எடுத்த ரன்போல இந்த ஆண்டு கழிந்துவிட்டது. இன்னொரு ஐந்து வருடங்களில் இப்படியொரு ஆண்டு கழிந்ததே ஞாபகத்தில் இருக்கப்போவதில்லை என்று தோன்றியது. 2017ல் என்ன செய்தேன் என்பதும் ஞாபகமில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான். வருடம் முழுதும் மொங்கி மொங்கி வேலை செய்து என்ன பயன் என்று யோசித்தேன். அதைவிட வேலைக்கு மகிழுந்தில் பயணம் செய்வது கொடுக்கும் அலுப்பு. ச்சைக்.
தொடருந்தின் யன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி, வாசிப்பில் அலிஸ் மன்ரோ, அவ்வப்போது தடங்களின் ஓரங்களில் அமைந்திருக்கும் வீடுகளின் கூரைகளையும் வேலைகளையும் விடுப்புப்பார்ப்பது, முன்னிருக்கையிலிருக்கும் பள்ளிச்சிறுமியும் பாட்டியும் பேசுவதை ஒட்டுக்கேட்பது. இடையிடையே ‘பூந்தோட்டத்தில்… ஹோய் காதல் கண்ணம்மா’. குளிர்மிகு மெல்பேர்ன் நகர மையத்தில் காலைக் கோப்பி. இரவு உணவு. எப்படி இவற்றையெல்லாம் தொலைத்தேன் நான்? ஆன கதை எழுதி எத்தனை நாளாகிவிட்டது? ஒரு புத்தகம் வெளியிட்டு எத்தனை ஆண்டுகளாகிவிட்டது?

‘சந்திரா என்றொருத்தி இருந்தாள்’ என்ற சிறு கதையில் எழுதியிருந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.

“நேரத்தை எப்போதிருந்து தொலைக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. வேலைப்பளு என்றைக்குக் கனக்க ஆரம்பித்தது என்றும் ஞாபகமில்லை. நட்சத்திரங்கள் இன்னமும் கண் சிமிட்டுகின்றனவா? யாராவது ரசிக்கிறீர்களா? அவ்வப்போது தட்டிச் சொல்லுங்களேன்.”

‘போகப்போகச் சரியாயிடும்’ என்று அலெக்ஸ் சொன்னதுபோலவே இவ்வருடத்தை(யும்) ஓட்டியிருக்கிறேன். இப்படியே இனியும் இருத்தலாகாது. நிறையப்பயணங்கள், நிறைய வாசிப்பு, எழுத்து, புத்தகங்கள், வேலை நேரத்தில் மாத்திரம் வேலை என நாள்கள் நிரம்பவேண்டும்.

“சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையிலேயே இதற்கான தீர்வும் எழுதப்பட்டிருந்தது.

“ஒரு ஞாயிறு அதிகாலைப்பொழுதில் கண்விழித்தபோது அலுவலக மேசை முன்னிருந்தேன். அன்றே வேலையைத் துறந்துவிட்டேன்”

சிக், என்ன செய்துகொண்டிருக்கிறேன் நான்?

எதையுமே யோசியாமல் வேலைத்துறப்பு மின்மடலை விறுவிறுவென்று எழுதி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்தேன். டீக்கப்பில் வெறும் மண்டிதான் கிடந்தது. மீண்டுமொரு டீயை ஊற்றிக்கொண்டுவந்து அமர்ந்தேன். முன்னே அலிஸ் மன்றொவின் ‘My Best Stories’ முழித்துக்கொண்டு ‘என்னை வாசியேன்’ என்றது. எடுத்துப்பிரட்டினேன்.

பக்கம் 403.

Not long afterwards came the news from California. Sofie and Ian were going to get married.

“Wouldn’t it be too smarter to try living together for a while?”, said Eve on the phone from her boarding house, and Sofie said, ‘Oh no, He’s weird. He doesn’t believe in that.’

“But I can’t get off for a wedding,” Eve said. “We run till the middle of September”.

“That’s ok” said Sophie. “It won’t be a wedding wedding”

And until this summer, Even had not seen her again.

சின்னதாக சிரிப்பு வந்தது. எதேச்சையாகப் பிரட்டிய ஒரு பக்கத்தின் ஐந்தே வரிகள். யாரந்த ஈவ்? யாரந்த சோபி? கடைசியில் சோபியும் இயனும் திருமணம் முடித்தார்களா? பிரிந்தார்களா? ஈவ் ஏன் போர்டிங்கில் தங்கியிருக்கிறாள்? அவளுக்கு காதலனோ காதலியோ இல்லைபோல. அல்லது திருமணங்களில் நம்பிக்கையில்லாதவள். அல்லது தீய்ந்த அனுபவம். இல்லையேல் சோபி திருமணம் முடிப்பதில் சிறு பொறாமை. இத்தனைக்கும் அவர்கள் அடிக்கடி சந்தித்துப்பேசுவதுகூட இல்லை. அவ்வப்போது போனில்தான். கதையில் பெயர் என்ன என்று பார்த்தேன். “The Love Of A Good Woman”. கதையை முன்னேயும் பின்னேயும் வாசிக்கவே விருப்பமில்லாமலிருந்தது. முழுமையாக வாசித்தால் ஒரேயொரு சாத்தியம்தான். வாசிக்காதபோது எத்தகை சாத்தியங்கள்?

மியூட்டிலிருந்த போனில் நிர்வாக இயக்குநரின் அழைப்பு மீண்டுமொருமுறை மின்னி மறைந்தது. பன்னிரு மிஸ்ட் கோல்கள். சமாளிக்கவேண்டும். முடிவில் பிடிவாதமாக இருக்கவேண்டும். ஊதிய உயர்வுகளுக்கு மயங்கலாகாது. கொஞ்சக்காலம் இடைவெளிவிட்டுப் பேசலாம். எடுத்துச்சொல்லலாம். ஒருவரையே நம்பி எந்த அணியும் இல்லை. எந்த நிறுவனமும் இல்லை. எந்தக் குடும்பமும் இல்லை. எவரின் வாழ்க்கையும் இல்லை. எல்லாமே தோற்ற மயக்கங்கள்தாம்.

இன்னொரு பக்கத்தைத் திருப்பினேன்.

பக்கம் 469.

She asked Grant when they’d moved to this house.

“Was it last year or the year before?”

He said that it was twelve years ago.

She said, “That’s shocking”.

அவ்வளவும்போதும். கதையின் தலைப்பைப் பார்த்தேண்.

“The Bear Came Over The Mountain”

டீயை ஒரு மிடறு அருந்தியபடி கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன்.

“This is fucking awesome.”

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக