Skip to main content

தீத்துது


நாலடியார் எழுதப்பட்டது சங்கமருவிய காலத்தில் (கி.பி 250) என்பார்கள். தமிழ் நிலங்களில் சமணம் கோலோச்சிய காலம் அது. இந்தத் தொகைகூட சமண முனிவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்றுதான் கருதப்படுகிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதியில் வருகின்ற ‘நாலு’ என்பது நாலடியாரைக் குறிப்பது என்பதை பலர் அறிந்திருக்கலாம். அந்த 'இரண்டு' எது என்று தெரியாவிடில் அடுத்த பத்தியை வாசிக்காதீர்கள்.
ஒரு கட்டுரைக்காக வெள்ளை யானையின் வாலைப்பிடித்துத் தொங்கிக்கொண்டு திரிந்ததில் இந்த இரண்டு பாடல்களும் கண்களின் மாட்டின. ஏலவே அறிந்தவைதான். ஆனால் இப்பாடல்கள் பலவும் ஒவ்வொரு வாசிப்பின்போதும் அப்போதைய மனநிலை சார்ந்து புதிய அனுபவங்களைக் கொடுப்பவை.
முதலாவது பாடல் அறிவுடைமையில் வருகிறது.
“உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்”
எத்தனை அழகு. அதிலும் ஈற்றடிதான் மேலும் கவர்ந்தது. எந்த அளவுக்கு அறிவுடையோருடன் கொண்ட நட்பு கூடில் இன்பமோ அதுபோல சொல்லும் சேதியைப் புரிந்துகொள்ளமுடியாத அறிவிலாரைப் பிரிந்தாற்தான் எம் துன்பமும் அகலுமாம். Do not stay in the toxic relationship! இப்பாடலில் எது sub text என்பதுதான் புதிரானது. அது அறிவுடைமையா? கலவியா?
அடுத்தபாடல் ஒரு கிளாசிக். எனக்கென்னவோ இப்பாடலைப் படிக்கும்போது விரிகின்ற காட்சிதான் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
“யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ்

சேனை தலைவராய் சென்றோரும் ஏனை

வினை உவப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட

மனையாளை மாற்றார் கொள”
ஒரு சமணத் துறவி வீதியோரமாக தன்பாட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அந்நாட்டின் அரசன் தன் சேனையோடு நகர் வலம் வருகிறான். அரசனின் சேனை வருகிறது என்றால் சும்மாவா? காவல் வீரர்கள் வீதியில் நின்ற மக்களை ஒதுங்குமாறு ஏய்த்திருக்கக்கூடும். பலரை முழுந்தாளிட்டு வணங்கச்சொல்லியிருப்பார்கள். கழுத்தில் கிடந்த துண்டுகள் அரைக்கு இடம் மாறியிருக்கலாம். கடைக்காரர்கள் முன்னே மேசை போட்டு கும்பம் வைத்து அரசனை வரவேற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்கள். இந்தக் கொடுமையை எல்லாம் அந்தத் துறவி கவனித்திருப்பார். நால்வகைச் சேனையின் வருகையால் நிலம் அதிர்ந்து புழுதி பறக்கிறது. துறவியின் கண்களுக்குள்ளும் புழுதி பறந்திருக்கக்கூடும். அவர் எரிச்சலோடு கண்களைக் கசக்கியபடியே விழித்துப்பார்த்தால் முன்னே அரசனின் யானை நெருங்கியிருக்கும். யானையின் மேலே அதன் பிடரியின்மீது அமர்ந்தபடி, அந்தப் பிடரியே தான் அமர்ந்ததினால்தான் அழகு பெற்றது என்ற திமிரோடு அரசன் இறுமாப்பாக அப்பால் செல்கிறான்.
இதனைப்பார்த்த துறவி என்ன நினைத்திருப்பார்? அவர் படித்த இலக்கியங்களும் அறிந்த வரலாறுகளும் திரும்பத் திரும்பச் சொல்வதுதான் ஞாபகம் வந்திருக்குமல்லவா? இப்படியெல்லாம் ஆடிக்கொண்டு திரிந்தவர்கள் எல்லோரும் அட்ரசே இல்லாமல் அழிந்து போவார்கள் என்று மனதுள் திட்டியிருப்பாரா இல்லையா? அதுதான் அந்த ‘ஏனை
வினை உவப்ப வேறு ஆகி வீழ்வர்’ ஆகிற்று. அதிலும் ‘ஏனை வினை உவப்ப’ என்றனர். அதாவது முன்னர் செய்த வினை வந்து நமக்கு ‘இந்தா தின்னு’ என்று தீத்திவிடுமாம்.
தீத்துது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக