அழுதுவிட்டு அகல்யா “சொறி அண்ணா” என்கிறாள். அண்ணருக்கு இப்படி எதிர்பாக்காமல் காதல் தோல்வி வரும் என்று தெரியாது. தண்ணி அடிச்சா தெம்பாக இருக்கும் என்று தவறணைக்குப் போகிறார். மப்பு பிடிபடுகிறது. அடுத்தநாளும் போகிறார். இரண்டு பிழா கேக்கிறது. மூன்றாம் நாள் கலன். ஐந்தாம் நாள் தவறணை திறக்கமுதலே அண்ணர் வாசலில் நிக்கிறார். ஆறுமாதம் கழித்து கோயிலடியில் கோமதியைக் காண்கிறார். கண்ட கணமே அவர் வீட்டு கனகாம்பரப் பூக்கள் எல்லாம் அவளுக்கு மாலை கட்ட நூலைத் தேடின. அண்ணர் அவசர அவசரமாக கோமதிக்கு நூலு விட்டுப்பார்த்தார். அவளோ “ஒரு சொப்ட்வேர்காரனுக்கு கழுத்தை நீட்டிச் சீரழிந்தாலும் சீரழிவேனேயொழிய உன்னைப்போல குடிகாரனுக்கு தலையை நீட்டமாட்டேன்” என்றுவிட்டாள். மீண்டும் காதல் தோல்வி. கனகாம்பரப் பூக்கள் வாடிப்போயின. மொழிப்பயன்பாடும் அப்படித்தான் என்கிறார் ஜோர்ஜ் ஒர்வல். எழுபது வருடங்களுக்கு முன்னர் “Politics and the English Language” என்று அவர் எழுதிய கட்டுரையின் சில குறிப்புகள். இப்போதும் தமிழுக்கு நன்றாகவே பொருந்துகிறது.