Skip to main content

என் சொல்லே!

படைக்கும் வார்த்தைகளை விட
அழிக்கும் வார்த்தைகள் அதிகமாயின.

முதல்வரியிலேயே முழுநாளும்
சிறுகதைகள் தேங்குகின்றன.

எது எழுதியும் எழுதா வரியதைத் தேடி
மனம் அலைகிறது.

வார்த்தைகளுக்காய் காத்திருந்து
வாயிலிலே கறையான் ஏறிவிட்டது.

வருதும், வருதும் என்று
வழிபார்த்து கண்மூடி.
துளிசோர கிடந்தேனடி.

வருவாயோ. வரம் தருவாயோ.
என் மனது சஞ்சலிக்கிறது.

வருவதை எலாம் வீதியில் வைத்து
வேடிக்கை மனிதரலாம்
வெட்டிப் புதைத்தனரடி.

பசிக்கிறது.

வாசிப்பு,
இருக்கும் ஓரிரு வார்த்தைகளையும்
பிடுங்கிக்கொள்கிறது.

எல்லாமே இங்கே எழுதிச்
சிறை பிடிக்கப்பட்டுவிட்டது.

தப்பிய வார்த்தைகள்
கண்காணா பிரபஞ்சத்துள்
சுற்றித் திரிகின்றன.

எனக்கு அவை வேணும்.
எடுத்து வா.

எப்போதோ எனக்காக
புறப்பட்ட ஒளிக்கதிரின்
துணுக்குகளில் உட்கார்ந்து
கடுகதியில் பறந்துவா.

என் சொல்லே!

ஊடலுற்ற காதலிபோல
உம்மணாமூஞ்சியுடன்
என்னைப்பார்த்து நீ
திருப்பிக்கொள்ளாதே.

என் காதல் சொல்ல நீ வேண்டும்.
நான் காதலிக்க சொல் வேண்டும்.
வார்த்தைகளின் வரம் வேண்டும்.

அடியேய் சிவசக்தி.
அதை அருள்வதில் உனக்கெதுந்
தடையுண்டோ?

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.