தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின் சிறு விரக்தி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வியாபிக்கும் கொண்டாட்ட மனநிலை. தனிமைப் பயணங்களில் இவை எல்லாமே கலவையாக வந்துபோவதுண்டு.