Skip to main content

நாச்சார் வீடு : கடிதங்கள்

நாச்சார் வீடு பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துகள்.

ஜே.கே., பொய்யுக்குச் சொல்லவில்லை. மெய்யாலுமே நாச்சார் வீடுகளில் அபரிமிதமான காதல் உண்டு. பிடித்த வீடும் அதுதான். இங்கே அவுஸ்திரேலியாவில் கூட, வசதி இருந்திருந்தால் நான் சின்ன அளவிலான நாச்சார் வீடு கட்டிக் குடியிருந்திருப்பேன். படங்கள் ஏதாவது பார்க்கும் போது, நாச்சார் வீடு காட்டினால், பாத்திரங்களில் ஒன்றாமல், வீட்டை 'ஆவென்று' பார்ப்பது வழக்கம். நாச்சார் வீட்டு மோகம் உங்களுக்கும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. வராந்தா வைத்த இங்குள்ள கிராமத்து வீடுகள் கூடப் பார்க்கும் போது ஒரு சந்தோசம் தரும். 

நாம் சின்ன வயதில் பள்ளி விடுமுறைக்குச் சண்டிலுப்பாயில் உள்ள அப்பாச்சி வீட்டுக்குப் போவோம். எங்கள் பொழுது முழுக்கப் பக்கத்து அன்ரி வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவதில் கழியும். அது நீங்கள் சொன்ன அதே குணமும், மணமும் கொண்ட நாச்சார் வீடு. ஜே.கே. நீங்கள் புதுசு, புதுசாக எழுதும் போது, அது எல்லோர் வாழ்விலும் எங்கோ தட்டுப்படுகிறது. 

நாம் இந்தியா போகும் போது இதற்காகவே பாலக்காடு கல்பாத்திக்குப் போனோம். திண்ணைகள் வைத்த, கட்டு வீடுகள் கொண்ட நாலு தெருவும், ஒவ்வொரு மூலையிலும் அமைந்த கோயில்களும் அபாரம். திண்ணைகளில் ஆற, அமர இருந்த தாத்தா, பாட்டிகளைக் கண்டு கதைக்க முடிந்தது. அந்தத் தெருக்களில் நடந்த ஆனந்தமே தனி. இந்தியா போனால், நேரம் கிடைப்பின் போய்ப் பார்க்கவும்.

-- சுபா அக்கா

பெரிய வளவில் பலா மரங்கள். எப்போதும் சுறுசுறுப்பாய் எதையோ கொத்தித்திரியும் பல கோழிகள். கீச்சிடும் குஞ்சுகள். மேற் பார்வைக்கு ஒரு சேவல். வேலியில்லா பக்கத்துக் காணியில் கள்ளன் போலிஸ் விளையாட்டு. 
ஒழுங்கை முடிவில் சின்னக் கடையில் வாங்கிய பல்லிமிட்டாய். 
வீட்டு மத்தியில் துளசி மரம். இன்னமும் இனிக்கும் கூழ், tin milk பாவித்து செய்த ரவா லட்டு.
மிகச் சின்ன வயதில், கொக்குவில் நாச்சார் வீடொன்றில் நானிருந்த இனிய சில நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை. 
ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி
-- ஜெய் ஸ்ரீகாந்தா

இடம்பெயர்த காலத்தில் பத்து குடும்பங்கள் ஒரு நாற்சார் வீட்டில் வாழ்ந்தோம்.1835 ம் ஆண்டு என்று ஓட்டில் எழுதியிருந்தது. மேல்தளத்தில் இரண்டு அறைகள் பலகைகளால் உறுதியாக கட்டப்பட்டு இருந்தது. படிக்க்ட்டுகூடபலகைகளால் ஆனது.எழதிய அனைத்தும் அங்கே காணப்படாது.ஆனால் அதன் கதை சொல்ல உரிமையாளர் எவரும் அங்கேயில்லை.எங்களுக்கு இன்னும் அது கோயில்.
- சசீலாதேவி 

வலிகாமம் மேற்கு பகுதிகளில் (சித்தங்கேணி, பண்ணாகம், சுழிபுரம், வட்டுக்கோட்டை) இரட்டை நாச்சார் அதாவது இரண்டு முற்றம் கொண்ட நாச்சார் வீடுகள் இருந்திருக்கின்றன என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தற்போதும் அந்த வீடுகள் இருந்தாலும் பெரும்பாலும் ஆட்கள் இல்லாமையினால் ஒரு நாச்சார் வீட்டை இடித்துவிட்டு ஒற்றை நாச்சார் வீடு மட்டுமே மீதி இருக்கின்றன....

உரிமை கோரவே ஆட்கள் இல்லாமல் யாரோ.... எங்கிருந்தோ... வந்து குடியேறி அந்த வீட்டுக்கு உரிமை கோரும் சம்மந்தமே இல்லாத புதிய தலைமுறை வாழும் நாச்சார் வீடுகளும் இங்கு உண்டு... 

எனக்கும் நாச்சார் வீடுகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ஒரு இனிய வசந்தத்தை விழுங்கிய அமைதியும் ஏப்பமும் அவைகளில் எப்பொழுதும் உண்டு.....
-- சிவசங்கர் 

எமது அம்மா பிறந்து வளர்ந்தது நாச்சார் வீட்டில்தான். நான்கூட 5 வயது வரை வளர்ந்தது அதே வீட்டில் தான். புது வீடு கட்டி குடிபுகுத்தாலும் குழந்தைப் பராயம் முழுவதுமே அதே வீட்டில்தான் கழிந்தது. நண்பிகளுடன் கூடியிருந்து கொக்கான் வெட்டியதும் புளியங்கொட்டையில் சுண்டிவிளையாடியதும் இன்னும் பசுமையான நினைவுகளாக. சுற்றியுள்ள வளவிலே பிடுங்கிய கறுத்தக் கொழும்பான், அம்பலவி மாம்பழங்கள் ஒரு அறையிலே வைக்கோலில் ஒளிந்திருக்க, பழுத்து மஞ்சளானவற்றைப் பொறுக்கியெடுத்து ருசி பார்த்ததும் பலாப்பழத்தை ஆச்சி கீறித்தர தேங்காய் எண்ணெயை கையில் பூசி சுளையை சுவை பார்த்ததும் இன்றும் நாவில் நீரூறுகின்றது. இன்னும்பல. அந்த வீட்டிலே மாமா குடும்பம் வசிக்கிறார்கள். யாழ்ப்பாணம் வரும்போது மாமாவுடன் நடுமுற்றத்தில் இருந்து "scrabble" விளையாட வேண்டும். மழை பெய்யும் அழகை விறாந்தையில் இருந்து இரசிக்க வேண்டும். இப்படி இன்னும்பல ஆசைகள். இன்னும் அந்த வீடு உயிரோட்டத்தோடு இருப்பது எனக்குப்பெருமைதான். நாச்சார் வீட்டை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி சகோதரன்
-சுகந்தினி 

பல நாற்சார் வீடுகளில் நடுவிலுள்ள முற்றத்திலிருந்து தண்ணீர் வெளியேற ஒரு வழி இருக்கும். பல வீடுகளில் அது எங்கே என்று கூடத் தெரியாது. அது பெரும்பாலும் அடைபட்டிருக்கும். ஒரு நீண்ட கம்பியால் குத்தி அந்த வழியை மீண்டும் உண்டாக்கி மழை நீரை வெளியேற்றுவதே ஒரு பெரும் பாடு.
பெரும்பாலான நாற்சார் வீடுகள் உயரமாக இருக்கும் மழைத் தண்ணீர் கசியாமல் இருக்க.
-ப்ரீத்தி 

நாற்சார் வீடு பசுமை நினைவை மீட்கிறது! ஈழத்தில் இரண்டுமாடி நாற்சார், மொட்டை மாடி நாற்சார் சுற்று அல்லு பகுதிச் சுற்று உள்ள வீடுகளும் நிறைய இருந்தன. இரண்டு உள்முற்ற அமைப்பைக் கண்ட அனுபவம் எனக்கும் இல்லை!
--கமலாபாலன் 


Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக