Skip to main content

தீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்

 

14

 

இரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்தும் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன.  சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து அகத்தியில் தனியனாக ஒரு பறவை குறண்டிக்கொண்டு தூங்கியது. இன்னொரு பறவை பறந்துவந்து மேற்கிளையில் அமர்கிறது. அது வந்தமர்ந்த அசைவில் தண்ணீர் தெறித்து கீழே இருந்த பறவையின் தூக்கம் கலைகிறது. இப்போது தூக்கம் கலைந்த பறவை மேற்கிளைக்குத் தாவுகிறது. தண்ணீர் மீண்டும் சிதறுகின்றது. இப்போது இரண்டு பறவைகளுமே செட்டை அடித்து கிளைக்குக் கிளை தாவி குரங்குச் சேட்டை புரிய ஆரம்பிக்கின்றன. அகத்தி மரமே அதிர ஆரம்பிக்கிறது.  நான்கடி தள்ளி யன்னலினூடே நானிருந்து பார்க்கிறேன் என்ற விவஸ்தையே இல்லாமல் பறவைகள் இரண்டும் காதல் செய்கின்றன.  

தேநீர் சுட்டது.

“புரிதலில் காதல் இல்லையடி. பிரிதலில் காதல் சொல்லுமடி” என்று ஒரு பாட்டே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் முல்லைத் திணைக்கு எப்போதுமே சிறப்பு உண்டு. “மழை பெய்கின்றது.  கொன்றை பூத்துவிட்டது. மாரிக்காலத்தில் வீடு வருவேன் என்றாரே, வரவில்லையே” என்று புலம்பும் தலைவிக்கு தோழி சொல்வாள், “அடியே இது கோடை மழையான வம்பமாரி. கொன்றையும்  உன்னைப்போலவே ஏமாந்து பூத்துவிட்டது. மாரிக்கு இன்னமும் மாதமிருக்கிறது” என்று. “கொம்புசேர் கொடியிணரூழ்த்த, வம்ப மாரியைக் காரென மதித்தே” என்பார் கோவர்த்தனார். இப்படி ஏராளமான அகத்திணை முல்லைப்பாடல்கள் பிரிவித்துயரில் உச்சம் கண்டிருக்கின்றன. அவற்றின் வழி வந்த வள்ளுவரும் பல சங்கப்பாடல்களை இரண்டு வரிகளாக்கினார். “ஆயன் குழல்போலும் கொல்லும் படை” என்பார் வள்ளுவர். இடையனின் புல்லாங்குழல் இசை ஷெல் கூவும் சத்தம்போல நாராசமாய் ஒலிக்கிறதாம் தலைவிக்கு!

அகத்திணை, திருக்குறள் வரிசையில் கம்பர் இல்லாமல் என்ன பிரிவுத்துயர்? கமபராமாயாணத்திலேயே அற்புதமான காண்டங்கள் இரண்டு. ஒருபக்கம் பகலையும் இரவாக்கும் கிஷ்கிந்தா மலைக்காடுகள். நிறைய மழை. இராமனின் புலம்பல். கிஷ்கிந்தா காண்டம். மறுபுறம் அசோகவனத்தில் சீதை. சுந்தரகாண்டம். அதுவரைக்கும் ஆற அமர காதலைப்பாட கம்பனுக்கு அதிகம் நேரம் கிடைக்கவில்லை. இரண்டு காண்டங்களிலும் முல்லைத்திணை வசமாக வாய்த்தது. பிறகென்ன?

மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே! -
இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ?

அருவியில் சிக்கி அசைந்து ஆடி நெளியும் காட்டுக்கொடி சீதையின் அழகை நினைவூட்டுகிறது இராமனுக்கு. இப்படியேன் என்னைக் கொல்கிறாய் என்கிறான் இராமன். சொல்லாத அர்த்தமும் உண்டு. இந்தக்கொடிபோலவே சீதையும் அவ்விடம் துன்புறுகிறாளோ என்கின்ற ஏக்கமும் அதனுள் அடக்கம்.

சுந்தரகாண்டத்தில் சீதை விருத்தம் விருத்தமாக பிரிவுத்துயர் ஏங்குவாள். அதிலே சீதை சினத்தில் பாடும் பாடல் ஒன்று மிகவும் பிடிக்கும்.

'கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர்; நினையா
வில்லாளனை, யாதும் விளித்திலிரோ?

எல்லாரும் என்னையே கொடுமைப்படுத்துவீர். அவனைப்போய் ஒண்டும் செய்யமாட்டீங்களா? அப்படிச்செய்தால் இவ்வளவுநாளும் என்னை மீட்க வராமல் இருப்பானா? எத்தனை அற்புதமான வார்த்தைகள். கல்லா மதியே முழு நிலவுக்கு. கதிர்வாள் நிலவே பிறை நிலவுக்கு. பிரிவுத்துயர் நிலவழிந்து வளரும்போதெல்லாம் தொடர்ந்திருக்கிறது அவளுக்கு!

பின்னர் சீதையை அனுமன் கண்டு கணையாழி பெற்று மீள்வது தெரிந்தகதை. அனுமன் இராமனை திரும்பவும் காணும்போது பாடிய “கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்” என்பதும் அனைவருக்கும் தெரிந்த பாடல். அதென்ன கண்டனன் என்று சொல்லிவிட்டு கண்களால் என்கிறார். கண்களால்தானே காண்பது? கேள்வி வருகிறதல்லவா? அதன் அர்த்தம், அவளை நான் கண்டேன். ஆனால் அவள் கற்பினுக்கு அணி என்பதை அவள் கண்களாலேயே கண்டேன் என்பது. எனக்கு கம்பனில் முரண்பாடு ஏற்படும் பல இடங்களில் இதுவும் ஒன்று. அதென்ன கற்பு? சீதையை கண்டதல்லவா பெரியவிடயம்? கற்பு என்பதே தேவையற்ற வார்த்தை என்று கம்பர் மறுதலித்திருக்கவேண்டாமா? பாடல் பாடிய காலத்தைப் பொருட்டில் கொண்டாலும்கூட அனுமனுக்கு அது தேவையற்ற வேலை என்றே தோன்றுகிறது.

இந்தப் படலத்தை அருணாச்சலக் கவிராயர் இராமநாட கீர்த்தனையில் மிகச் சுவையாகச் சொல்லியிருப்பார். அந்தப்பாடல் இதுவரை எழுதப்பட்ட இராமயணப் பாடல்களிலேயே அதி உச்ச வரிசையில் சேரக்கூடிய ஒன்று. காட்சி  ஒன்றுதான். கணையாழியோடு அனுமன் இராமனைச் சேரும் இடம்.  அனுமனுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. பரவசத்தில் மூன்றுமுறை கண்டேன் என்பான்.

“கண்டேன் கண்டேன் கண்டேன்”

அவ்வளவுதான். அந்தக் காட்சிப்படிமத்தை யோசித்துப்பாருங்கள். அதிகம் வெளிச்சமில்லாத அடர்ந்த வனப்பகுதி. மெலிதாக மழை தூறுகிறது. இராமன் ஒரு மரத்தடியில் சீதையைப்பிரிந்த துயரத்தில் சோர்ந்திருக்கிறான். கூடவே இலக்குவன். இப்போது அனுமன் வருகிறான். பாடல் ஆரம்பிக்கிறது. மிக மெதுவாக, நிதானமாக சூழலை குழப்பாத இசையோடு அனுமன் பாடுவான்.

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா நான் (கண்டேன்)
அண்டரும் காணாத இலங்காபுரியில்
அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை (கண்டேன்)

பனிகால வாரிஜம் போல நிறம் பூசி
பகலோடு யுகமாக கழித்தாலே பிரயாசி
நினைதங்கி ராவணன் அந்நாள் வர
ச்சிச்சி நில்லடா என்றே ஏசி
தனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி
சாரும் போதே நானும் சமயமிதே வாசி
இனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி
ராம ராம ராம என்றெதிர் பேசி

கவிராயர் எழுதியது நாட்டிய அரங்கத்துக்கு. சும்மா சொல்லக்கூடாது, கவிராயர் காரியத்திலும் கண்ணாயிருக்கிறார். “அண்டரும் காணாத இலங்காபுரியில் அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை” வரிகள் அனுபல்லவியில் வந்தது தற்செயல் அல்ல!

இந்தப்பாடலுக்கு மிக இயல்பான நாட்டிய அரங்கை கற்பனை செய்யுங்கள். அனுமன் விவரிக்க விவரிக்க ஒருபுறம் அசோகவனக் காட்சிகள் விரிகின்றன. இராமன் கதைகேட்க அருகில் நிற்கும் இலக்குவனின் நிலையை யோசியுங்கள். அவன் கோவக்காரன். இதோ இப்போதே சீதையை மீட்கலாம் என்று வில்லை ஏற்றியிருக்கவும் கூடும். அல்லது ஊர்மிளை என் செய்வாளோ என்று அவள் ஞாபகம் வந்து புலம்பவும் கூடும். இதனை மேடையில் அரங்கேற்றினால் சொத்தையே கொடுக்கலாம். இந்தப்பாடலில் இசையும் அதி அற்புதம்.

பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வேர்ஷன் ஒன்று இருக்கிறது. டிவைன்.

 

இதுக்குமேலே என்னத்த எழுதுறது?

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக