Skip to main content

இடியட்





கடந்த இருவாரங்களாக தாஸ்தாயேவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை ஒலிப்புத்தகமாகக் கேட்டுவருகிறேன். ரயில் யன்னலோரமாக உட்கார்ந்து, அதன் மிதமான தள்ளாட்டத்தோடு கதைகளை வாசித்து வந்தவனுக்கு மகிழூந்திலே பயணம் செய்யும்போது ஒலிப்புத்தகத்தைக் கேட்பது என்பது புது அனுபவம். முன்னால் செல்லும் வாகனம் பாதை மாறும்போதும், சிக்னல் நிறம்மாறும்போதும், பின்னால் வரும் வாகனத்திலுள்ள பெண் மூக்கு குடையும்போதும் புத்தகத்திலிருந்தான நம்முடைய கவனம் தவறும். 

புத்தகத்தை வாசிப்பதற்கும் ஒலிப்புத்தகத்தைக் கேட்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஒலிப்புத்தகத்தில் நமக்கும் புத்தகத்துக்குமிடையே வாசிப்பவர் எப்போதுமே விளக்குப்பிடித்துக்கொண்டு நிற்பார். அது வாசகருக்கும் புத்தகத்துக்குமான நெருக்கத்தையும் ஆழமான அமைதியையும் குலைக்கிறது. கூடவே வாசிப்பவரின் வேகத்துக்கும் குரல்மொழிக்கும் நம்முடைய மனவேகம் இயைவாக்கப்படவேண்டும். நாமே வாசிக்கும்போது எங்கோ ஒரு ஆழத்தில் ஒலிக்கின்ற நம்முடைய தனித்த குரல் இங்கே ஒலிக்காது. எழுத்துநடை போன்று ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு தனித்த நடை உண்டு. வாசகருக்கேயுரிய எள்ளல், சிரிப்பு, ஆண், பெண் முதியவர், சிறுவர் என்ற பலவித பாத்திரக்குரல்கள் உண்டு. ஆனால் ஒலிப்புத்தகத்தில் அவை எல்லாமே இன்னொருவருக்கு சொந்தமாகி அவர் குரலிலேயே வாசிக்கவேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. திடீரென்று பெர்டின்செங்கோ யாரென்ற குழப்பம் வருகையில் முன்னே இரண்டு பக்கங்கள் சென்று பார்த்துவிட்டும் வரமுடியாது. சில வசனங்களை வாசித்தபின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு யன்னல்வெளியே வெறித்துப்பார்க்கும் அனுபவமும் இதில் இல்லை. வேண்டுமானால் சற்று நிறுத்திவிட்டுப் பின்னர் தொடரமுடியும். இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் வாகனத்தில் பயணிக்கின்ற அந்த இரண்டுமணி நேரத்தைப் பயனுள்ளவகையில் பயன்படுத்த இதைவிட வேறுவழி தெரியவில்லை.

“இடியட்” நாவலில் பிரதான பாத்திரம் பிரின்ஸ் மிஸ்கின். நேர்மையான அப்பாவி. அந்த அப்பாவியைக் கொண்டே சென்பீட்டர்ஸ்பேர்க் சமூகத்தின் அபத்தங்களை தாஸ்தாயேவ்ஸ்கி(வழமைபோல) புட்டுப்புட்டு வைப்பார். தாஸ்தாயேவ்ஸ்கியின் பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களைவிட எப்போதுமே விசித்திரங்களாக, புரியாத புதிர்களாக இருக்கும். அதில் ஒருவித மிகையும் இருக்கும். சூதாடியில் வரும் பலீனா, சூதாட்டக் கிழவி. இடியட்டில் வரும் நட்டாசியா பிலிப்போவ்னா என எல்லோருமே மிகைத்தன்மை வாய்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கரீனாவைக்கூட அவ்வளவு குழப்பமான சஞ்சலம் நிறைந்த பெண்ணாக dramatize பண்ணி தோல்ஸ்தாய் காட்டியிருக்கத்தேவையில்லை. பெண்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்கள், புதிரானவர்கள் என்கின்ற பொதுப்படையான ஆண்பார்வையின் விளைவே அது என்று நினைக்கிறேன். சமகாலப் படைப்பாளிகளான லாகிரி(Interpreter of Maladies), கோர்ட்சே (Disgrace) போன்றவர்கள் பெண்களை விசித்திரம் நிறைந்தவர்களாகக் காட்டுவதில்லை. மனச்சிதைவுகள் எல்லோருக்குமே பொதுவானவை. அவை இயல்பு. அதில் ஆண் பெண் வேறுபாடுகள் இல்லை. மனச்சிதைவுகளை அதீத மிகையோடு காட்டவேண்டிய எந்தத்தேவையுமில்லை. ஆனால் அப்படிக்காட்டும்போது ஒருவித கிளர்ச்சி ஏற்படுகிறது. வசதியான அடித்து ஆடக்கூடிய படைப்பு வெளி கிடைக்கிறது. எழுதும்போதும், வாசிக்கும்போதும். அதை வசதியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவே. அட்டைப்படக் கவர்ச்சியின் செவ்வியல் வடிவம் இது. லோலாண்ட் என்கின்ற லாகிரியின் சமீபத்திய நாவலில் வருகின்ற கௌரி பாத்திரம் ஒரு மனச்சிதைவு நிறைந்த பெண் பாத்திரத்தை எவ்வளவு இயல்புத்தன்மையோடு சப்டிலாகக் காட்டலாம் என்பதற்கு பாலபாடம். 

இடியட்டில் பிரின்ஸ் மிஸ்கின் பேசுகின்ற ஒரு வசனம் இரண்டுநாட்களாக மனதைப்போட்டு அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.
Colia : “Hippolyte is an extremely clever boy, but so prejudiced. He is really a slave to his opinions.’ 
Prince : ‘Do you say he is consumptive?’
நம்மில் பலர் முன்முடிபுகளால் நிறைந்திருக்கிறோம். நம்முடைய கருத்துகளின் அடிமைகளாக இருக்கிறோம். அவை சரியாக அமைவதற்காக எந்த எல்லைக்கும் போகத்தயாராகவிருக்கிறோம். ஒருவரை எடைபோட்டுவிட்டே அவருடன் பழகத்தொடங்குகிறோம். நாம் போட்ட எடைக்கு அமையவே அவரை உருவகிக்கிறோம். கல்லுக்குள்ளே சிலை ஏலவே இருக்கிறது, அதை செதுக்கி வெளியே எடுக்கும் வேலையை மாத்திரமே சிற்பி செய்கிறார் என்பது கவித்துவத்துக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் நிஜத்தில் சிற்பத்தை, கல்லைக் காணும்போதே (சமயத்தில் அதற்கு முதலே) சிற்பி உருவகித்துவிடுகிறார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனபிம்பத்திற்கேற்ப கல்லைச் செதுக்க ஆரம்பித்துவிடுகிறார். அதனாலேயே எல்லா சிற்பங்களும் நமக்கு ஏலவே தெரிந்த காந்தியாகவோ பாரதியாகவோ அப்துல்கலாமாகவோ சிவபெருமானாகவோ இருக்கிறார்கள். ஒரு குப்பனோ, சுப்பனோ, நமசிவாயமோ, நாகமுத்துவோ சிலையில் தெரிவதில்லை. தாஸ்தாயேவ்ஸ்கி சொல்லும் விஷயம் “கல்லை ஏன் செதுக்குவான்?” என்பது. அப்படியே விட்டுவிடவேண்டும். அது ஆவுரஞ்சியாகட்டும். தோய்க்கப்பயன்படட்டும். தான்தோன்றி என்றால் கோயில் கட்டி கும்பிடவும் முடியும். ஆனால் நீ செதுக்கி அதன் இயல்பைக் கெடுக்காதே. 

ஒரு இடத்திலே கார்னியா மிஸ்கினைப்பார்த்து "நீ ஒரு முட்டாள்" என்பான். பிரின்ஸ் எந்தச் சலனமுமில்லாமல் இப்படிப் பதில் சொல்லுவான்.

‘I think I ought to tell you, Gavrila Ardalionovitch, that though I once was so ill that I really was little better than an idiot, yet now I am almost recovered, and that, therefore, it is not altogether pleasant to be called an idiot to my face. Of course your anger is excusable, considering the treatment you have just experienced; but I must remind you that you have twice abused me rather rudely. I do not like this sort of thing, and especially so at the first time of meeting a man, and, therefore, as we happen to be at this moment standing at a crossroad, don’t you think we had better part, you to the left, homewards, and I to the right, here? I have twentyfive roubles, and I shall easily find a lodging.’

இன்னுமொரு இடத்தில் மீண்டும் இந்த முட்டாள் பேச்சு வருகையில் பிரின்ஸ் இப்படிச் சொல்லுவான்.

“I am often called an idiot, and at one time I certainly was so ill that I was nearly as bad as an idiot; but I am not an idiot now. How can I possibly be so when I know myself that I am considered one?”

திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.

How can I possibly be so when I know myself that I am considered one?

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக