Skip to main content

ஸ்டூடியோ மாமா




நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு வியாழமாற்றத்தி்ல் “ஸ்டூடியோ மாமா” பற்றி எழுதியிருந்தேன். சென்றவாரம் கோபி அண்ணாவும் அவரின் நண்பர்களும் பேபி ஸ்டூடியோவுக்குப் போனசமயத்தில் மாமாவைக் கண்டிருக்கிறார்கள். கூடவே நான் எழுதியதும் ஞாபகம் வந்து அவருக்கு இதை வாசித்துக் காட்டியிருக்கிறார்கள்.

“I met the baby studio owner and told him about the blog. When I showed him he was in tears. Especially when he heard that he was like Ilayaraja”

வட்ஸ்அப் மெசேஜை வாசித்தபோது சிரிப்பு, நிறைய அந்தரம், பயங்கர சந்தோசம் ஏற்பட்டது. கோபி அண்ணாவுக்கு நன்றி. இளையராஜாவின் இரண்டு படங்களையும் அண்ணர் எடுத்து அனுப்பியிருந்தார்.
அந்தப்பதிவு மீண்டும்.


ஸ்டூடியோ மாமா


பேபி ஸ்டூடியோ மாமா. இந்த பெயர் திருநெல்வேலியை சேர்ந்த எவருக்கும் இலகுவில் மறந்துபோய் இருக்காது. கூலிங் கிளாஸ். வெள்ளை வேட்டி. வெள்ளை ஜிப்பா. தூரத்தில் பார்த்தால் இளையராஜா சைக்கிளில் வருவதுபோல இருக்கும். இராமநாதன் வீதியில் பழைய நிதர்சனத்துக்கு முன்னாலே நீண்ட காலமாக “பேபி ஸ்டூடியோ” என்ற கடையை நடத்தி வந்தவர். ரெண்டு பொம்மர் அடியோடு பரமேஸ்வரா சந்திக்குப் போய்விட்டார். அப்புறமாக ஆலடிச்சந்திக்கு போனவர் என்று நினைக்கிறேன். பின்னர் அவர் எங்கெங்கெல்லாம் போனார் என்பது மறந்துவிட்டது. ஆனால் அவர் கமராவும், பிளாஷும் அதில் செய்யும் சாகசங்களும் ஞாபகம் இருக்கிறது.

ஊருலகத்தில் எந்த நிகழ்ச்சி என்றாலும் பேபி மாமா வந்தாகவேண்டும். மாமா வந்து போட்டோ பிடிக்கும் வரைக்கும் மாப்பிள்ளை தாலியும் கையுமாய் வெயிட் பண்ணுவார். பிறந்த பிள்ளைக்கு பெயர் வைக்கமாட்டார்கள். செத்தவீட்டில் பிரேதம் எடுபடாது. வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு பெஃயார் அண்ட் லவ்லி பெண்கள் சேலைத்தலைப்பை முன்னுக்கு ஒரு கையால் நைசாகப் பிடித்துகொண்டு அசட்டுச்சிரிப்பு சிரிக்கும் படங்களும் போயிருக்காது. சாமத்தியப்பட்ட பெண்கள் எல்லோரும் இவர் வந்து கமராவில் படம் பிடிக்கும்போதுதான் முதன்முதலாக வெட்கப்படுவார்கள்.

எங்கேயாவது கலியாணவீடு, சாமத்தியவீடு என்றால் மாமா காலையிலேயே வந்துவிடுவார். அனேகமாக தோட்டத்தில் தெரியும் செம்பரத்தை, பார்பட்டன்ஸ் வீட்டுப்படலையின் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருக்கும் வாழைக்குலைகள் என்று ஷூட்டிங் ஆரம்பித்து உள்ளே போய், இரண்டு மூன்று டெக்கரேஷன் எடுத்துவிட்டுத்தான் பொம்பிளை உட்கார்ந்திருக்கும் ட்ரஸ்சிங் டேபிளுக்கு வருவார். முன்னாலே பதினாலு வயசு சரோ காஞ்சிபுரம், கனகாம்பர சடை, ஒட்டியாணம், அட்டியல், பதக்கம் சங்கிலி, முகத்தில் சிவப்புக்கலர் வியர்வை என்று ஒரு மார்க்கமாக நிற்பாள். கமரா பிளாஷ் இரண்டு அடிக்க முதலே பிளவுஸ் கமர்கட்டு தொப்பலாய் நனைந்துவிடும். அடிக்கடி மேக்கப் அக்கா லேன்ஜியால் சரோவின் முகத்தை டச்சப்பண்ணியபடி இருப்பார். சரோவை இப்போது சின்னத்தம்பி குஷ்புவாக்கவேண்டிய கட்டாயத்தோடு மெல்லிதாய் சிரிக்கச் சொல்லுவார் ஸ்டூடியோ மாமா.

அப்பெல்லாம் கமரா என்றாலே பிலிம்கமராதான். பிலிம்ரோலில் கொடாக் கொனிக்கா என்று கொஞ்ச பிராண்டுகள் இருந்தன. கொடாக் ரோலை விட கொனிக்கா ரோல் நல்லது என்பார்கள். முன்னதில் 28 படங்களும் பின்னதில் 36 படங்களும் எடுக்கலாம் என்று ஒரு ஞாபகம். ஒரு சாமத்திய வீட்டுக்கு இரண்டு ரோல் எடுபடும். கல்யாணவீடு என்றால் மூன்று நாலுவரை எடுப்பார். பின்னர் பில்ம் ரோலை கிளாலி, ஓமந்தை தாண்டி கொழும்புக்கு அனுப்பி கழுவி எடுத்து, படம் கைக்கு வந்து சேர எப்படியும் மூன்று நான்கு மாதம் பிடிக்கும். ஒரு பிரவுன் என்வலப்பில் மாமா கொண்டுவந்து கொடுப்பார். ஒரிஜினல் முப்பது ரூபாய். கொப்பிக்கு பதினைஞ்சு ரூபாய். அந்த காலத்தில இப்பிடி ஏதும் நிகழ்ச்சி என்றால் ஆளாளுக்கு ஒரு அல்பத்தை கொண்டுவந்து பரிசளிப்பார்கள். அதற்குள் பெரிதான ஒன்றை எடுத்து இந்த படங்களை பஞ்சு வைத்து போட்டு பார்த்தால் … மாமாவின் படங்கள் கிறிஸ்டல் கிளியராகத் தெரியும். அந்தக்காலத்தில்கூட ஒன்றிரண்டு கறுப்பு வெள்ளை படங்களையும் மாமா எடுப்பார். கலரே இல்லாம ஆளோட கரக்டர் மட்டுமே தெரியும் போர்ட்ரெயிட் படங்கள். கறுப்பு வெள்ளையில் தூக்கிக்காட்டும் என்றும் அவருக்குத்தெரியும்.

ஹீ வோஸ் எ ஜீனியஸ்.

&&&&&&&&&&&&&&





Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக