Skip to main content

யாழ்ப்பாண நண்டு




என் சக யாழ்ப்பாண நண்டு ஒன்றை அண்மையில் தற்செயலாகச் சந்திக்கவேண்டிவந்தது. கவனித்திருக்கவே மாட்டேன். தூர்ந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்க்கும் பழக்கம் எல்லாம் இப்போது அடியோடு போய்விட்டது. ஆனால் உள்ளிருந்த நண்டுக்கு என் காலடித்தடம் கேட்டிருக்கவேண்டும்.
“ஆரது,  நம்மட தம்பியா போறது”
குரல் வந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தேன். குப்பைகள். சிகரட் பெட்டிகள். அணைந்த எச்சம். பியர் போத்தல்கள். கொக்ககோலா, பன்ரா, ஷொப்பிங்பாக் என இன்னபிற பிளாத்திக்குகள். சிறு நண்டும் ஒன்று. கிணற்றுத்தரை முழுதும் நண்டுகள் ஊர்ந்து திரிந்ததில் பக்கங்கள் பல நிறைந்திருந்தன.
“என்னைஸே இப்பெல்லாம் எழுதுறது குறைஞ்சுபோச்சு”
அது கேட்ட தொனியில் மெல்லிய சந்தோசமும் இழையோடியது. இப்படியே தொடர்ந்தால் இவன் எழுதாமலேயே நிறுத்திவிடுவான். ஒரு நண்டு, அதுவும் வெளியில் உலாவும் நண்டு எழுதாமல் விடுவதில் கிணற்று நண்டுக்குத்தான் எத்தனைப் பேரின்பம். என்றோ ஒருநாள் எதேச்சையாக அந்த நண்டு என்னை வாசித்திருக்கலாம். அந்த ஒரு வாசிப்பையே என் எழுத்தாகப் பிரமாணம் செய்து அது வாழ்நாள்பூராகவும் கழித்துவிடும். கேட்டால், ஒரு சோறு, ஒரு பதம் விளக்கம் கிடைக்கும்.
“இல்லையே, எப்போதும்போல எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன்”
“அப்படியா, பெரிசா சிலமனை காணேல்ல, அதான் கேட்டன்”
கூவிக்கொண்டு இருக்கவேண்டும். உல்லாசக் கடற்கரையில் அரைகுறையில் நின்று. எல்லோரும் அரைகுறை எனில் நிர்வாணம் பூண்டு. அதற்கும் திரும்பாவிடில் முரசு கொட்டி. எப்போதாவது அவர்கள் திரும்பும்போது சிரித்து, முகமன்கூறி, முதுகுக்கு சன்கிறிம் தடவிவிட்டு, அவர்கள் விரித்துவைத்திருந்த துவாலையை உதறிமடித்து, இவையெல்லாம் செய்தால்தான் அந்த சிலமன் காணப்படும். மன்னிக்கவும். உள்ளுடைகளை நான் எவரோடும் பண்டமாற்றம் செய்வதில்லை.

நான் நண்டுக்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து நடந்தேன்.
“உமக்குத் திமிர் கொஞ்சம் கூடிப்போயிற்று…. ஊரோடு கூடிவாழப்பாரும். அல்லாட்டி ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்கள். நீர் கொஞ்சம் பிரபலமாகும் தந்திரங்களைப் பழகோணும்”
திமிரா? ஒவ்வொரு அலிஸ் மன்றோ எழுத்தும் நீ ஒன்றுமே இல்லையேடா என்று என்னை எள்ளி நகையாடுவது எவருக்குத் தெரியும்? போலியாக சிரித்து, சந்தர்ப்பங்களுக்காகப் பழகி, சிறு வெளிச்சங்களுக்காகப் பிடிக்காத ஒன்றை எப்படிச் செய்து வாழ்வது? இந்த வாழ்வு என்பது ஒன்றே ஒன்று, கண்ணே கண்ணு என்பதில் உள்ள அலாதி நம்பிக்கை. மரணத்துக்குப் பின் சூனியம் என்பதில் உள்ள நம்பிக்கை. இவ்வாழ்வை பிடித்தவகையில் திகட்டத் திகட்ட வாழ்ந்து கழித்திடல் வேண்டும் என்ற உறுதியைத் தினமும் ஏற்றிக்கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கணமும் மிகப்பெரும் கொடை எனும்போது அதனை மலினத்துக்கு விலைபோகச்செய்வேனோ? இக்கணம் எழுத்தும் பயணமும் பிடிக்கிறது. செய்கிறேன். மறுகணம் பிறிதொரு மொழி படித்தல் இச்சையாகலாம். அறியா மனிதரோடு பழகுதல் பிடித்தல் ஆகலாம். தூக்கம்கூட பிடித்துப்போகலாம். இதில் ஏதும் சமரசங்கள் கிடையாது. மற்றவர் விருப்பும் கிடையாது. அடுத்தவர் மூக்குநுனிவரை என் எல்லை விரிந்துள்ளது. அதுவரை இது என் கிணறு. எவருக்கும் பங்கு கிடையாது.

நண்டுக்கு நான் சொன்னது புரியவேயில்லை. வாழ்நாள் பூராக அது பிற நண்டுகளை இழுத்து விழுத்துவதன்மூலமே சுவர் ஏறமுடியும் என்று நம்பி வாழ்ந்துவிட்டது. அது நான் சொல்வதைக் கேட்பதற்காக என்னைக் கூப்பிடவும் இல்லை.
“நீ ஏன் என் நிகழ்வுக்கு வருகிறாயா?”
ஆதர்ச மன்றொவின் கதை ஒன்று தோன்றி மறைந்தது.

அலிஸுக்கு அவள் எழுதிய சிறு கவிதைக்காக சிற்றிதழ் ஒன்று அது ஒழுங்கமைத்த ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுத்தது. அலிஸும் அந்தச் சிற்றிதழ் எழுத்தாளர்களைச் சந்திக்கும் ஆவலில் பேருந்து பிடித்து அவ்விடம் செல்கிறாள். முகவரியை விசாரித்து அந்த வீட்டை அடையும்போது, வாசலை மறித்தபடி ஒரு பெண் சிகரட் புகைத்தபடி நின்றிருந்தாள். அலிஸ் தயங்கியபடி கேட்கிறாள்.
“சிற்றிதழ் கூட்டம் இங்கேதானா நடக்கிறது?”
அந்தப்பெண் அவளைச் சந்தேகமாகவே பார்க்கிறாள். அந்தப்பார்வையில் பல தொனிகள். இவள் புது எழுத்தாளரா? என்னை எப்படி இவளுக்குத் தெரியாமல் போனது? எனக்குத்தெரியாமல் இப்படி ஒரு எழுத்தாளரா? இவள் ஏன் காரில் வரவில்லை? ஏழையா? பார்த்தால் இளவயது. இவளுக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது. இவ்வளவு சிக்கென்று இருக்கிறாளே. முழங்கால் கவர்ச்சியாக இருக்கிறது. இவள் யாரைக் கவிழ்க்கலாம் என்று வந்திருக்கக்கூடும்? ஆசிரியரையா? அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று இவளுக்குத் தெரியாதா? ஐயோ பாவம்.

இத்தனை எண்ணங்களும் ஒரே கணத்தில் வந்து மறைந்தது அந்தப்பெண்ணின் கண் வெட்டிலேயே தெரிந்தது. அந்தப்பெண் விட்டேற்றியாகச் சொன்னாள்.
“இங்குதான் இருக்கக்கூடும்”
உள்ளே போனால் ஒரு இருபதுபேரளவில் இருந்தார்கள். ஒரே வட்டம்தான். அதில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். மற்றவர்கள் சிரித்தும் உச்சுக்கொட்டியும் ஆமோதித்தும். அவர்கள் அனைவரது முகங்களும் சிற்றிதழ் உலகில் பரிச்சயமானவைதான். மதுக்குவளையை மீளநிரப்ப வந்த ஒருவர் அலிஸை கவனிக்கிறார்.
“ஹவ் ஆர் யு டார்லிங். யு ஆர் ஹியர் போர்?”
எட்மென்ட் ஹார்வர்ட். மஜிக்கல் ரியலிசமும் இருத்தலியமும் கலந்த எழுத்துக்கள் அவருடையது. அவருடைய “சிறு விரல்” என்ற சிறுகதை மிகப்பிரபலமானது. அலிஸ் உற்சாகமிகுதியில் அவர் எழுத்துக்களைப்பற்றிச் சிலாகிக்கிறாள். அவருக்குப் பெருமை தாளவில்லை. ஒரு கட்டத்தில் அவளைப்பற்றி அவர் கேட்க, தான் எழுதிய சிறு கவிதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது என்று அலிஸ் சொல்கிறாள். அவர் அப்படியா என்றார். அந்த அப்படியாவுக்குள் பல சிந்தனைகள் வந்து போயின. இவள் வெறும் சிறியவள். இவளிடம் பேசுவதால் எந்தப்பயனும் கிட்டப்போவதில்லை. எதற்காக இவளோடு நேரத்தை விரயம் செய்தல் வேண்டும். பதிலுக்கு ஆசிரியருடன் அளவளாவினால் அடுத்த வெளியீட்டுக்கு உதவியாக இருக்கும். அவள் பெயரைக்கூட அவர் கேட்கவில்லை.
“சோ கிளாட் மீட்டிங் யூ, ஹெல்ப் யுவர் செல்ப்”
அவர் அவளை ஏனையோருக்கு அறிமுகம் செய்துவைப்பார் என்று அவள் எண்ணினாள். அது நடக்கவேயில்லை. ஏனையோர் அவளை சந்தேகக்கண்ணோடு ஏற இறங்கப் பார்த்துச்சென்றாலும் எதுவும் பேசவில்லை. அற்பமாக நினைத்திருக்கலாம். அல்லது எழுத்தாளர் ஒருவருடைய எஸ்கோர்ட் என்று நினைத்திருக்கலாம். அலிஸ் என்ன செய்வது என்று தெரியாமல் பார் அருகில் போய் நின்றாள். அப்போது பார்டெண்டருடன் பேச்சு ஆரம்பிக்கிறது. மது அருந்தியபடியே அவன் கதைகளை அவள் கேட்க ஆரம்பிக்கிறாள். அவனுக்கு மக்ஸிம் கார்க்கி தெரிந்திருக்கிறது. காமுஸ் தெரிந்திருக்கிறது. கோர்ட்ஸ் தெரிந்திருக்கிறது.
“நீ ஏன் இக்கூட்டத்தில் பங்கெடுக்காமல் பார்டெண்டராக இருக்கிறாய்”

“நான் வெறும் வாசகன் மட்டுமே. எழுத்தாளர்கள் வெறும் போரிங்”

“அப்போ நானுமா?”

“நீ எழுதுவாயா என்ன?”
அலிஸ் சிரித்தாள். இருவரும் கதைகள் பேச ஆரம்பித்தனர். அடுத்த சில மணிநேரங்கள் அந்த பார்டெண்டர் அவளுக்குக் கதைசொல்லியாக விரிகிறான். மதுவும் கதையும் கொடுத்த போதை உச்சமாக அவள் தள்ளாடியபடியே வீடு திரும்புகிறாள்.

நண்டு திரும்பவும் கேட்டது.
“நீ என் நிகழ்வுக்கு வருகிறாயா"
நான் சொன்னேன்.
“அங்கு பார்டெண்டர் யாரேனும் இருப்பார்களா? இல்லையேல் புகைப்படம் பிடிப்பவர் எவராவது? அல்லது சிறு குழந்தை என்றாலும் தகும்.” 


நண்டு தீவிரமாகப் பதில் அளித்தது.
“குழந்தைகள் இலக்கியக்கூட்டத்தை கூச்சலிட்டுக் குழப்புவார்கள். பெண்கள் வரும் இடமென்பதால் மது பரிமாறுவதும் அழகில்லை. படங்களை நீரே எடுத்துத்தரமுடியுமோ?"


எதிர்பார்த்ததுதான். தீர்க்கமாகச் சொன்னேன்.

“நான் வருவதாக இல்லை. வேறு காரணங்கள் சொல்லலாம்தான். இன்னொரு கொண்டாட்டம் உண்டு. வார இறுதியில் வேலை. சுகவீனம். ஆனால் உண்மைக்காரணம் வர இஷ்டமில்லை. மன்னிக்கவும்”

“இதைத்தான் திமிர் என்கிறேன்.  நான் உம்முடைய நிகழ்வுக்கு வரவில்லையா?"

கூனிக்குறுகிப்போனேன். நிகழ்வுகளுக்கு ஆர்வமேலீட்டால்தான் மனிதர் வருகிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கை சிறுவயதிலிருந்தே ஆழப்பதிந்துவிட்டிருந்தது. சிறுவயதில் உதயன் சிறுகுறிப்புகளைப்பார்த்து அக்கூட்டங்களுக்குச் சென்று, மூலையில் அமர்ந்து, கேட்டு ரசித்துவிட்டு வந்த சிறுவன் ஏன் இன்னமும் வளரவேயில்லை என்று என்னையே நொந்துகொண்டேன். அக்கூட்டங்களிலும்கூட பெரியவர்கள் பரஸ்பர மாட்டு யாவாரம்தான் செய்திருக்கிறார்கள் என்பது இச்சிறுவனுக்கு ஏன் தெரியாமலேயே போனது?

நண்டு என்னை விடுவதாகயில்லை.
“இது பாழுங்கிணறு தம்பி. இங்கே இப்படித்தான். இப்படி இருந்தால்தான் பிழைக்கமுடியும்”
‘இல்லை’ என்று கிணற்றினுள் எட்டிப்பார்த்துக் கத்தவேண்டும் என்று தோன்றியது. உள்ளே சக நண்டுகளை இழுத்து வீழ்த்தி வாழ்ந்து கழித்த எச்சங்கள் கோதுகளாகக் குவிந்துகிடந்தன. சில சிறு நண்டுகள் படம் கீறிக்கொண்டிருந்தன. குப்பை நாறிக்கொண்டிருந்தது. இந்தக்குப்பை சீக்கிரமே நிரம்பிவிடுகையில் நீங்கள் எல்லோரும் வெளிவந்தே ஆகவேண்டும் என்று சொல்லத்தோன்றியது. அல்லது ஒரு நாள் மழைபொழிந்து கிணற்றை நிரப்பும். அதுவும் இல்லையேல், இன்றே சுவரில் தனித்து ஏற ஆரம்பித்தால் மீண்டுவிடலாம். நீ இழுக்காதவரை மற்ற நண்டுகள் கணக்கே எடுக்காது. சொல்லவேண்டும் என்று வாய்நுனிவரை வார்த்தைகள் வந்து விழுந்தன. 

ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே இன்னொரு நண்டு சுவரில் ஏற ஆரம்பித்ததைக் கவனித்த அந்த நண்டு அதனை இழுத்து வீழ்த்த ஆரம்பித்திருந்தது. நான் அயர்ச்சியுடன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். அப்போது வழியில் யாரோ நடந்து வரும் தடம் கேட்டது. 

என் கிணற்றுக்கு வெளியே.

000

Photo Credits : judithcutlerart

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக