Skip to main content

Go, Set A Watchman

இன்று "உலகம் முழுதும்" ஹார்ப்பர் லீ யின் "Go, Set  A Watchman" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று வாங்கக்கூடும். ஹார்ப்பர் லீயின் முதல் நாவலான "To Kill A Mocking Bird" அறுபதுகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை அந்நாவல் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது அவருடைய் இன்னொரு நாவல் வெளியாகிறது என்ற ஆவல். ஐம்பத்தைந்து வருட காத்திருப்பு. சும்மாவா?


To Kill A Mocking Bird, அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஊறிப்போயிருக்கும் பழமைவாத பால், இன, நிற பேதங்களை ஒரு சிறுமியின் பார்வையில் எளிமையாகச் சொல்லும் நாவல்.

மேகோம்ப் என்கின்ற தென் மாநில சிறு கவுண்டி ஒன்றிலே ஸ்கவுட் எனும் சிறுமி, தன்னுடைய அண்ணன் மற்றும் தந்தையுடன் வாழ்கிறாள். தந்தை அத்திக்கஸ் ஒரு வழக்கறிஞர். கறுப்பினத்தவர் ஒருத்தர் வெள்ளையினப்பெண்ணை வல்லுறவு செய்ததான ஒரு பொய்க்குற்ற வழக்கில், அந்தக்கறுப்பினத்தவர் சார்பாக அத்திக்கஸ் வாதிடுகிறார். இதுதான் நாவலின் இழை. அதை வைத்து,  பலவித மனிதர்கள், அவர்களின் குணங்கள், வெள்ளையினத்துக்குள்ளே இருக்கும் உள் சாதிகள், பெண்களை அச்சமூகம் பார்க்கும் விதம், கறுப்பினத்தவரின் சமூக நிலை என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல கதை பல விசயங்களை கவர் பண்ணும். அவர்கள் வீட்டுக்கு அருகே பூ ராட்லி என்று ஒரு "விசரன்". அந்த ஊரில் அவனால் அப்படித்தான் இருக்கமுடியும். பூ ராட்லியை வைத்து ஹார்ப்பர் லீ பண்ணும் நுணுக்கங்கள் அபாரமானவை.

அத்திக்கஸ் தார்மீக நெறிகள் வழுவாத பக்குவப்பட்ட மனிதர். சமூக நீதிக்காக போராடுபவர். ஆனால் மாற்றம் என்பது ஒரு இரவில் வரப்போவதில்லை என்பதை புரிந்தவர். பல நூறு ஆண்டுகளாக புரையோடிப்போயிருக்கும் சிந்தனைகளை ஒரு அத்திக்கஸ் மூலம் மாற்றமுடியாது என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். அவசரப்பட்டு தாழியை உடைக்கமாட்டார். முரண்டுபண்ணி, எதிர்ப்போரை விலக்கிவைத்துவிட்டு  பின் எதிர்ப்போரையே திருத்துவதும் முடியாதது என்பதை அத்திக்கஸ் பிள்ளைகளுக்கு விளங்கவைப்பார். தன் குழந்தைகளுக்கு  அவர் நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்கும் பாணி பார்த்து பயிலவேண்டியது.  அத்திக்கஸ் நமக்கெலாம் ஒரு ரோல் மொடல்.



அத்திக்கஸ் மேகொம்ப் ஊருக்கு செய்ததையே "To Kill A Mocking Bird" நாவல் மொத்த அமெரிக்காவுக்கும் செய்தது என்று நினைக்கிறேன். நோகாமல் சொல்லவேண்டியதை சொல்லும் வித்தை ஹார்ப்பர் லீக்கு நன்றாகவே தெரியும். வாசிக்கும்போது சின்ன சலனம் வரும். நல்லவர்களாகக்கூட மாறிவிட மனம் உந்தும். அதுதான் நாவலின் வெற்றி. இது பதின்ம வயது சிறுவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல். உலகின் மிக முக்கியமான நூறு புத்தகங்களுக்குள் இலகுவாக உட்காரும் இந்நாவலுக்கு பிறகு வேறு எதையும் ஹார்ப்பர் லீ எழுதவில்லை. ஊடகங்களையும் விட்டு விலகியியே இருந்தார். இப்போது மனுஷிக்கு தொண்ணூறு வயது. தானும் தன்பாடுமாக இருப்பவர்.



"To Kill A Mocking Bird" எழுதுவதற்கு முன்னர் வேறு ஒரு நாவலை ஹார்பர் லீ எழுதி பதிப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். அது பதிப்பாளரை அவ்வளவு கவரவில்லை. அதில் வரும் இளம்பெண் ஸ்கவுட் பிஞ்ச்சின் சிறுவயது பருவத்தை மட்டும் நாவலாக எழுதுங்கள் என்று பதிப்பாளர் ஹார்பருக்கு சொன்னாராம். அதன்பின்னர் எழுதியதுதான் "To Kill A Mocking Bird".

இப்போது அந்த நிராகரிக்கப்பட்ட முதல் நாவலின் கை எழுத்துப்பிரதியை ஹார்ப்பர் லீயின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து. தங்க முட்டை குஞ்சு பொரிக்க பயன்படாது, ஆனால் யாருக்கு வேண்டும்? தொண்ணூறு வயசு மனுஷியிடமும் குமுதம் ஜெயகாந்தனிடம் வைரமுத்து சிறுகதைக்கு வாழ்த்து வாங்கியதுபோல எப்படியோ எழுத்து அனுமதி வாங்கிவிட்டார்கள்.  அதன் விளைவுதான் இன்று வெளியாகப்போகும்,

"Go, Set A Watchman"

இந்த நாவலில் அத்திக்கஸ் பாத்திரம் சிதைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அவருடைய குணாதிசயம் கூட இதில் வேறு என்கிறார்கள். கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது. நாவல் "To Kill A Mocking Bird" கட்டியமைத்திருக்கும் அத்தனை சித்திரங்களையும் கசக்கி எறிந்துவிடும்போல இருக்கிறது. ரகுமான் "முன்பே வா" பாட்டுக்கு ராப், குத்து என்று முதலில் போட்டு, பின்னர் வேண்டாமென்று மெலடியாக்கினார் என்று வையுங்கள். இப்போது அந்த குத்து வேர்ஷன் வெளியானால் எப்படி இருக்கும்?

"Go, Set A Watchman" வாசித்துவிட்டு சொல்கிறேன்!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக