Skip to main content

வரலாறு என்கின்ற பசப்புக்காரி



அவள் மரணித்தபோது
வரலாற்றுக் கிடங்கை கிளறி
அவளை
வெளியே தூக்கிப்போட்டார்கள்.
உடல் துடித்தது.
வெளிச்சம் பாய்ச்சினார்கள்.
அவள் நிர்வாணம் கூசியது.
குறிப்பெடுத்தார்கள்.
ஒலி பரப்பினார்கள்.
ஒளி பரப்பினார்கள்.
சொல் பரப்பினார்கள்.

அவள் நிர்வாணத்தை தரிசித்தவர்

யாவரும் நிர்வாணியாயினர்.
தம் கைகளைக் கட்டி மறைத்துப்பார்த்தனர்.
உடை அணிந்தனர்.
உடைகள் அனைத்தையும் அணிந்தனர்.
ஊரவர் உடைகளையும் அணிந்தனர்.
அவர்தம் நிர்வாணம் இன்னமும் பட்டவர்த்தமானது.

பதறிப்போய் அனைவரும்
கிடைத்த இடங்களில்
கிடங்குகளை கிண்டினார்கள்.
ஒருவன் ஆறடி ஆழத்தில் கிண்டினான்.
ஒருவன் ஓரடியில் கிண்டினான்.
ஒருவன் வெறுமனே புழுதி கிளறினான்.
எல்லோரும் அவளை தத்தமது
கிடங்குகளில் போட்டு நிரவினார்கள்.
தமது கிடங்கே அவள் வரலாறு என்றார்கள்.
ஒரு வரலாற்றுக்கிடங்கு
ஒருத்தியின் மரணத்தோடு
ஆயிரம் கிடங்குகளாகியது.
எது நிஜம்?
எந்தக்கிடங்கில் அவள் உடல் கிடந்தது?
எதில் இல்லையோ அதில்!
அது முரண்.
நிஜம் முரண்.
வரலாறு முரண் நகை.
வரலாறு ஒரு பாலியல் தொழிலாளி போன்றது.
உனக்கு வேண்டினாப்போல அது உடல் நெளிக்கும்.
வரலாற்றில் அவள் வீராங்கனையா?
ஆகட்டும்.
துரோகியா?
நன்று.
கொடுமைக்காரியா?
வைத்துக்கொள்.
வரலாற்றுக்குத் தேவை
நாளைக்கான நீட்சி.
அதற்கு அது யாரோடு
வேண்டுமானாலும் புணரும்.
புணர்தலுக்காக யாரையும் கவரும்.
உனக்கும் வரலாற்றில் இடம்
கொடுப்பதாகச் சொல்லி
ஆசை காட்டும்.
முதலில் நெருங்குவாய்.
பின்னர் தழுவுவாய்.
ஈற்றில் புணருவாய்.
புணர்ச்சி முடிந்த
அயர்ச்சியில்தான் வரலாறு
உன்னை வஞ்சித்தது விளங்கும்.
அப்போது நீ ஏலவே
வரலாறு ஆகியிருப்பாய்.

நாளை உனக்கும் மரணம் உண்டு.
உன்னையும் தோண்டுவர்.
நிர்வாணப்படுத்துவர்.
உன் உடலையும் கிடங்குகளில் பிரித்துப்போடுவர்.
நீ யார் என்பதை மற்றவர் தீர்மானிப்பார்.
திருத்தம்.
நீ பாவி என்பதை மற்றவர் தீர்மானிப்பர்.

வரலாறு என்கின்ற பசப்புக்காரி
எப்போதாவது உன்னைப்பார்த்து
சிரித்து வைத்தால்,
வேண்டாம், அது ஒரு சனியன்.
ஒதுங்கிவிடு.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக