அம்மாவின் சமையலுக்கு அடிமையாகாதவர்கள் வெகுசிலரே. அதன் காரணமும் எளிமையானது. சிறுவயதுமுதலே அம்மாவின் சமையலுக்கே எங்கள் நாக்குகள் இசைவாக்கப்பட்டிருக்கும். சிலபேருக்கு அது அம்மம்மாவின் சமையலாகவோ அக்காவின் சமையலாகவோ அமைந்திருக்கலாம். ஆனால் அடிப்படை ஒன்றுதான். எந்தச் சுவைக்கு சிறுவயதில் நாக்கு சப்புக்கொட்டியதோ அதையே நிஜமான ருசி என்று பெரும்பாலானவர்கள் வாழ்நாள் முழுதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அற்புதமான பாஸ்டாக்களையும் விறகு நெருப்பு பிட்ஸாக்களையும் தென் கிழக்கு ஆசிய குவே தியோக்களையும் அவற்றின் ருசியே அறியாமல் நாம் எள்ளி நகையாடிக் கவிதை எழுதுவதும் அதனால்தான்.