Skip to main content

ஆதிரை வெளியீடுகள்


 சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ‘சமாதானத்தின் கதை’ வெளியானது.

ஆதிரை பதிப்பகத்தின் முதல் வெளியீடு இது. அவர்களே எழுத்துப் பிழை திருத்தி, அட்டை வடிவமைப்பு, லே அவுட் எல்லாம் செய்து, அச்சடித்து, விநியோகித்து புத்தகங்கள் விற்று முடிந்ததும் அதற்கான உரிமைத் தொகையையும் கொடுத்தார்கள். ஈழத்தில் சில வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் செய்தார்கள். இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும்கூட வாசிப்பு நிகழ்வுகளை செய்யப்போவதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்குள் கொள்ளைநோய் பரவிவிட்டது.
'சமாதானத்தின் கதை’ வெளியாகிச் சில மாதங்களிலேயே ஏ.பி.எம் இத்ரீஸ் தொகுத்த ‘என்ட அல்லாஹ்’ எனும் இன முரண்பாட்டுக்கால முஸ்லிம்களின் பாடுகளைச் சொல்லும் சிறுகதைகளைக்கொண்ட நூல் வெளியாகியது. அதன் பின்னர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்த்த சிங்களச் சிறுகதைகளின் தொகுப்பு ‘திருமதி பெரேரா’. பின்னர் சயந்தனின் ‘அஷெரா’. இப்போது மறுபடியும் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்த்த ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ எனும் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது.
எல்லாமே ஆதிரை வெளியீடு இந்த ஒரு வருடத்தில் பதிப்பித்த புத்தகங்கள்.
இதில் ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்நூலின் இலங்கைப் பிரதிகள் இலங்கையிலேயே அச்சிடப்படுகின்றன. விலை வெறுமனே 390 ரூபாய்கள். எல்லாப்புத்தகங்களையும் ஓர்டர் பண்ணியாயிற்று. தபால்துறையின் தாமதம், இன்னமும் புத்தகங்கள் வீடு வந்தபாடில்லை.
‘ஊருக்கு உழைத்தல் யோகம்’ என்பதற்கு நண்பர் கேதா ஒரு அற்புதமான விளக்கம் கொடுப்பதுண்டு. ஊருக்கு உழைக்கும்போது ஒருவித யோக மனநிலையில் இருக்கவேண்டுமாம். யார் என்ன சொன்னாலும் சகித்துக்கொண்டு ஒரு யோகிபோல இயங்கினாலேயே இங்கே தப்ப முடியும். புத்தகங்களின் வெளியீடும் அப்படிப்பட்டதுதான். நாரி பிரியும் வேலை. பண இலாபம் என்று பெரிதாக ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. மன நிறைவுக்குச் செய்யும் வேலைதான் இது. அந்த உழைப்பின் அருமையை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற வகையில் ஆதிரை வெளியீட்டாளர்களுக்கும் விற்பனைக்கூடங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த அன்பும் நன்றியும். குறிப்பாக சயந்தனுக்கும் வைதேகிக்கும்.
ஒரு விசயம். புத்தகங்களுக்குக் கால்களோ இறக்கைகளோ தாமாக முளைப்பதில்லை. அவற்றை வாசகர்களே சுமந்து செல்லவேண்டும். இவை தகும் என்று அவர்கள் உணரும் நூல்களைப் பரிந்துரைக்கவேண்டியதும் வாசகர்களுடைய கடமையே. இன்றைக்குப் பிரபல பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் புத்தகங்களைத் தாமாகத் தேடிப்போய் வாசித்து விமர்சனம் செய்வதில்லை. தன்னைச் சார்ந்தவர்கள் எழுதிய, தன்னைத் தேடி வரும் புத்தகங்களையே அவர்கள் முன்மொழிவதுண்டு. இந்தச் சூழ்நிலையில் தாம் நம்பிக்கை வைத்து வெளியிடும் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் பெரும் பொறுப்பு பதிப்பாளர்களிடம் இருக்கிறது. அதற்கு உதவி செய்யவேண்டிய கடமை வாசகர்களாகிய எங்களிடம் இருக்கிறது. இதனை ஆதிரை முன்னின்று செய்வது மிகுந்த உவகையைக் கொடுக்கிறது.
வாழ்த்துகள்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக