Skip to main content

கல்லைக்கண்ட அரசியல்வாதி!

 

rock-painter

கல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம்? 

கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மொழியின் முதலுறவே கல்லாகத்தானே இருந்திருக்க முடியும்? அதை கற்றதனாலாய பயனே எம் இனம்! எம் இலக்கியங்களில் கல்லுக்கென்று எப்போதுமே தனியிடம் இருக்கும். கல்லும் கவி சொல்லும். கல்லுக்குள் பெண் இருப்பாள். சமயங்களில் கல்லோடு கட்டி கவிஞர்களை கடலிலும் போடுவார்கள். "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா" என்று கல்லை கடவுளாக்கியவர்கள் நம் முன்னோர்கள். அந்தக்கல்லையே கவிப்பொருளாக்கிய அரங்கு இது. தலைப்பு "கல்லிலே கலைவண்ணம் கண்டார்". அரங்கில் கல்லைக்கண்ட விஞ்ஞானியாக கீர்த்தனா, கல்லைக்கண்ட சாமியார்யாக ஆனந்த், கல்லைக்கண்ட கந்தசாமியாக (பாமரன்) ஜெயகாந்தன்
மற்றும் கல்லாய் அமைந்து மறுமொழியை கேதாவும் பகர்ந்தார்கள்.

இதில் என் பங்கு அரசியவாதி. கல்லை அரசியல்வாதியாகவும் அரசியல் கண்ணோட்டத்திலும் நோக்கியிருக்கிறேன். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் (முழு தொகுப்பு கிடைத்தவுடன் பகிர்கிறேன்).  நன்றி.

புதுமைக்கு புடம்போட்டு
இளமைக்கு இடம்கொடுத்து
தமிழ் வாழ வடம் பிடிக்கும் – கேசி
தமிழ் அவையே, தலை வணக்கம்.

கல்லுக்கு அவை அமைத்து
சொல்லுக்குள் பொருள் தொடுத்து
கவிபாட வந்திருக்கும்
கற்றோர்க்கு முதல் வணக்கம்.

சுவையில்லா கவிதைக்கு
கரகோசம் எதுக்கென்று
கல்லாக சமைந்திருக்கும்
சிலருக்கும் ஒரு வணக்கம்.

நானொரு கல்லுளி மங்கன்.
கவிதை எனக்கு,
வரும்.….ஆனா வராது…
சொல்லுக்கும் எனக்கும் காததூரம்.
என்னோடு கவிசொல்லும்
தோழர்களை பார்க்கின்றேன்.
ஒருபக்கம் டோனி அபோட்.
மறு பக்கம் ஸ்காட் மொரீசன்.
ஜூலி பிஷப் கீர்த்தனா.
கேதாரசர்மா கோத்தா.
இன்னிலையில் இங்கெனக்கு
எங்கிருந்து கவிதைவரும்?
பாவமெண்டு ரெண்டு வரி
படகு ஏறி வந்தாலும்,
நடுவழியில் மறிக்கப்பட்ட
அகதியாக திரும்பிவிடும்.

நான் ,
கல் பற்றி கவி சொல்ல,
அதை திருப்பி நீர் எறிய
எதுக்கு இந்த பொல்லாப்பு?
கவிதையை விடுவோம்.
ஒரு கதை விடுகிறேன்.

இது ஒரு கல்லின் கதை.
கல்லு விழுந்த காரணத்தால்
பேரு வந்த ஊரு கதை
யாவும் கற்பனை!

அது ஒரு அழகான
யாழ்ப்பாணத்து
விடியாத அதிகாலை.
பென்னம்பெரிய கல்லு ஒண்டு
கல்வியங்காட்டு சந்தியிண்ட
சென்டரில கிடக்கு எண்டு
வெள்ளனவே வெளிச்சிட்டுது.

கல்லு விழுந்த கதையைகேட்டு
அள்ளுப்பட்டு வந்த சனம்
சங்கக்கடை வரிசை போல
தள்ளுப்பட்டு நிற்கிறது.

அம்மாமார் சோட்டியோட
அப்பாமார் சாரத்தோட
அக்காமார் ஆரத்தோட
அண்ணாமார் ஈரத்தோட!

அவசரத்தில் வந்தவரும்
விளக்காத வாயால
ஆவெண்டு பார்த்ததில
ஊரெல்லாம் நாற்றத்தில.

ஏது இந்த கல்லு?
எப்படி இங்கு வந்தது?

இளந்தாரிப் பெடியள் வந்து
உருட்டிப்பார்க்க
அசையவில்ல.
ஆச்சாரி மார்வந்து
சுரண்டிப்பார்க்க
தங்கமில்ல.
பரிவட்டகல்லேண்டு
தூக்கிப்பார்க்க,
முடியவில்லை.
கரண்டியில பாலு ஊத்தி
குடுத்துப் பார்த்தா
கடவுள் இல்ல!

ஏது இந்த கல்லு?
எப்படி இங்கு வந்தது?

வீரர்கள் பலர் சேர்ந்து
ட்ரோஜானின் குதிரைபோல
ஊருக்குள் வந்திருக்கும்
எம்மினத்தின் மித்திரரோ?

தலைவனுக்காய் காத்திருந்து
காணாமல் தாளாமல்
பூலோகம் உருண்டுவந்த
நவயுகத்து அகலிகையோ?

பருப்போடு அரிசி எண்டு
பொறுப்பற்ற அயல்தேசம்
நம்தலையில் உருட்டிவிட்ட
கருங்கல்லு பாறையிதோ?
பிரேமதாசா போட்ட பீக்குண்டா?
இல்லை,
நாமே நம் தலையில் போட்டுக்கொண்ட
அணுகுண்டோ?

எட்ட நின்று பார்த்த சனம்
இன்னும் நல்லா குழம்பிப்போச்சு.
இதுக்கு மேலே தாமதித்தால்
இன்னல் ஏதும் வருமென்று
அவசரமா அரசியலின்
தலைவரையும் அழைத்தாச்சு.

அரசியல்வாதி வருகிறார்.
பராக் பராக்.
வெள்ளைச் சட்டை.
வெள்ளை வேட்டி
வெளிச்சம் பட்டா
கிளப்பும் பட்டை.
தொங்குதாடி மீசையோட
கட்டைதுரை வருகிறாரு.

பராக் பராக்.
கல்லா மனிதராய்
பேயாய் கணங்களாய்
எல்லாப் பிறப்பும்
ஓட்டுக்காய் பிறந்திழைத்து
படுகுழியில் எம்மினத்தின்
விடுதலையை புதைத்தொழித்த
பெருமகனார் வருகிறார்.
பராக் பராக்.

வந்தவரு மலையளவு
முன்னிருந்த கல்லைக்கண்டு
கண்விரிய பார்த்தவரு.
கால் நனைய நிற்கிறாரு.
நானொருவன் இங்கிருக்க
பாறையினை கொண்டுவந்து
போட்டவனை கண்டறிந்து
போடவேண்டும் என்கிறாரு.

ஈழத்தில் மீதிருக்கும்
எறிபத்த நாயனார்
எனைவிடுத்து யாரு உண்டு?
தாடியினை தடவுறாரு.

கல்லு வெட்டி போட்டிடவும்
நாயை வெட்டி போட்டிடவும்
என்னைவிட்டால் இந்த ஊரில்
விண்ணன் எவனும் இருக்கிறானோ?
நம்மாளு குழம்பிவிட்டார்.

கிட்டக்க சென்று
தட்டொன்று தட்டியும்
கெட்டியாய் நின்றது கல்லு.
வெட்டியும் கொத்தியும்
திட்டியும் பார்த்தார்.
சிலமனும் இல்லை.
முன்ன பின்ன அசையவுமில்ல.
என்ன இது கல்லு?
இத்தனை அடிகளையும்
வலியோடு சுமக்கிறதே.
இது நம்
ஈழத்து தமிழனின்
கூர்ப்படைந்த பிறப்போ?

சந்தேகம் வந்தது.
கூட்டமாக கல்லெடுத்து
கூரை எல்லாம் விட்டெறிந்த
சாதுக்களை நினைத்தபடி
வீம்புக்கு கல்லெறிந்தார்
கம்மென்று இருந்தது கல்லு.
நெருப்பெடுத்து
எரித்தும் பார்த்தார்.
கல்லு சிரித்தது.
என்ன இது?
அடித்தும் எரித்தும்
அசையாமல் இருக்கிறதே.
இணக்க அரசியல் செய்யும்
ஈழத்து முசுலிமோ?

இந்தப்பக்கம் ஆராய்ச்சி
இப்படியா போகையிலே
அந்தப்பக்கம் ஆமத்துறு
கூட்டம் வந்து நிற்கிறது.

தெற்கிலிருந்து வண்டியேறி
தெய்யோ என்று வந்திறங்கி
அய்யோ என்ற கூட்டத்தினை
நையப் புடைத்து துரத்திடிச்சு.

வரலாறு வழமைபோன்று
வலியவனால் புனையப்பட்டது.

இது
வெறும் கல்லு அல்ல.
அவரின் பல்லு என்று
மகா பள்ளு ஒன்று
உடனே பின்னப்பட்டது.
பாறை அருகில் கூரை போட்டு
அரசு மரத்து கொப்பு ஒன்று
அரை நொடியில் நாட்டப்பட்டு
அந்த இடம் சுடப்பட்டது.

கல்லு விழுந்த காரணத்தால்
கல் வியங் காட்டுக்கு
கல்லோயா என்றபெயர்
மறுகணமே இடப்பட்டது.
ஆரியகுளத்து தாமரை மலர்கள்
ராணுவ வண்டியில் வந்து இறங்கி
பந்தலோடு பன்சலையும்
பத்து நொடியில் நடப்பட்டது.

இதைக்கண்ட நம்மாளு
எட்டு நாலு பல்லு தெரிய
பிக்குமாரு கூட்டத்தோட
கூடிக்குலவி நிற்கிறாரு.

காலு மேல காலு போட்டு
வாழ வேண்டும் எண்டிருந்தா
கல்லு மண்ணு பார்க்காம
காலில் விழ வேணுமெண்டு

காணி நிலம் எமக்கு வேண்டாம்
சோறு மட்டும் போதும் என
வீணி வடிய நம்ம வீரர்
அடிக்கிறாரு கிரிபத்து.

கல்லைக்கண்டும் நாயைக்கண்டும்
அடிக்க ஒரு நாதியற்று
நின்ற சனம் அத்தனையும்
நிராயுதபாணியாச்சு.

இந்தப்பெருமை எங்களுக்கு
இன்று நேற்று வந்ததில்லை.
ஏழு நூறு நண்பரோடு
ஆழி தாண்டி வந்தவனை
கூடி நின்று பார்த்ததாலே - நாட்டை
கோட்டை விட்ட கூட்டம் இது.

அன்று தொட்டு இன்று வரை
கல்லைக்கொடுத்து அடிவாங்கி
நாடு தாண்டி ஓடிவந்து
கூழு குடிக்கும் கோஷ்டி இது.

ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு
நன்றி சொல்லி செல்லுகிறேன்.

அரிசிக்குள்ளே புதைந்திருக்கும்
குறுனிக்கல்லை பொறுக்கிடவே
மலையெடுத்து குடைபிடிக்கும்
மாயக்கண்ணன் தேவையில்லை.

இது புரிந்தால் எல்லோரும்
எம்மருகே விழுந்திருக்கும்
கல்லைநகர்த்தி போடுவதில்
கஷ்டமேதும் இனியில்லை.

நன்றி வணக்கம்.


நன்றி : கேசி தமிழ் மன்றம்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக