Skip to main content

கணவன் மனைவி!

 

“நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993)  செவ்வாய் கிழமை, வளர்பிறை …..”

குமரன் கொடுத்த அழைப்பிதழை மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி மேலோட்டமாக நோட்டம் விட்டார்.

99731_f260தாலி கட்டு எத்தனை மணிக்கு தம்பி?

பதினொன்றுக்கும் பதினொன்றரைக்கும் நடுவில..

கோயில்லையோ?

இல்ல, பொம்பிள வீட்ட, கொக்குவில் .. குளப்பிட்டி சந்திக்கு கிட்ட,

ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன? கொக்குவில் பெட்டையே? ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ?

இன்றைக்கு மட்டும் இது பத்தாவது தடவை. எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள். 

சரியா தெரிய இல்லை முதலாளி,  வானதியிண்ட தாய் புங்குடுதீவு அடி. .. அப்பர் நயினாதீவாம். ‘எங்கட’ ஆக்கள் தானாம்.

ஆனா தீவாரல்லோ தம்பி? சரி சரி, இந்த காலத்தில இத பாக்கேலுமே? வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம்.

குமரன் பதில் சொல்லவில்லை. சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர் ஆகிவிட்டார். பத்து லட்சம் வரை கொடுத்து தான் வெளியில் வந்ததாக ஊருக்குள் பேச்சு. சொல்லிவிட்டு கிளம்பும்போது தான் குமரனுக்கு இவரிடம் கேட்கலாமா என்று தோன்றியது. தயங்கினான்.

என்ன தம்பி, பம்முறீர்? வந்த விஷயத்தை சொல்லும்

இல்ல … கலியாணத்தன்று இரவு சினிமா படம் போட போறம் … ஐஞ்சாறு படம். நீங்க ஒரு போத்தல் மண்ணெண்ணெய் தந்தா நல்லா இருக்கும்

எண்ணையோ? அது விக்கிற விலைக்கு படத்துக்கெல்லாம் தர முடியாது.. என்னட்ட இல்ல தம்பி.

எதிர்பார்த்தது தான். சங்கரப்பிள்ளையரிடம் ஐந்து சதம் கூட பெயர்க்கமுடியாது. ஒரு நம்பிக்கையில் தான குமரன் கேட்டான். யாழ்ப்பாணத்தில் யாருக்காவது திருமணம்,  சாமத்திய வீடு என்றால் தான் சினிமா படம் பார்க்கலாம். இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் வெடித்த பிற்பாடு மின்சாரம் நின்று போய் பொருளாதார தடையும் சேர்ந்துகொள்ள,  படம் பார்ப்பது என்பது முயல்கொம்பு. இப்படி ஏதாவது நிகழ்வு என்றால் தான், பணம் வசூலித்து ஒரே இரவில் ஐந்து ஆறு படங்கள் பார்ப்பார்கள். அப்புறம் கல்யானவீட்டு வீடியோ வரும்போது இன்னொரு தடவை. ஒரு படக்கொப்பிக்கு வாடகை அறுபது ரூபா. டிவி டெக் வாடகை தனியாக முந்நூறு ரூபாய். ஜெனரேட்டர் இன்னொரு முன்னூறு. அதுவும் யமாகா என்ஜின் என்றால் ஓயிலும் கலந்து விடவேண்டும். அதற்கு நூறு ரூபாய் தனியாக அழவேண்டும். நிஜமான ஜெனரேட்டர்  என்று ஒன்றும் கிடையாது. நீர் இறைக்கும் பம்பை திருகுதாளம் பண்ணி ஜெனரேட்டர் ஆக்கி வைத்திருந்தார்கள். காபரேட்டரில் இன்னொரு திருகுதாளம் செய்தால் மண்ணெண்ணையில் ஓட்டலாம். பெட்ரோல் இல்லாததால் ஸ்டார்டிட்டிங் டிரபிள். அதற்கு தான் இருக்கவே இருக்கிறது தலை இடிக்கு பூசும் ஓடிகலோன். டின்னரும் பாவிக்கலாம்.

இஞ்ச தம்பி .. சித்த நில்லும்

கேட் வரைக்கும் போயிருந்த குமரனை முதலாளி திருப்பி கூப்பிட்டார்.

அரை போத்தில் வேணுமெண்டா தாறன், ஆனா ஒரு கண்டிஷன்

புரிந்தாலும் குமரன் என்ன? என்று சைகையால் கேட்க,

இந்த “புதிய பறவை” படம் போடுவீங்களா?

புதிய பறவையா? அப்பிடி ஒரு படம் இருக்கா?  ஆர் நடிச்சது?

அட, பழைய பேமஸ் படம் தம்பி, சரோஜாதேவி நடிச்சது. சிவாஜி எல்லாம் ..

சிவாஜியை முதலில் சொல்லாமல் சரோஜாதேவியை முதலில் சொல்லும்போதே புரிந்துவிட்டது,  சங்கரப்பிள்ளையாருக்கு சரோஜாதேவி என்றால் கொள்ளை விருப்பம் என்று. அவரின் மனைவி முகமும் உடனே கண்ணுக்குள் வர, குமரனுக்கு கொஞ்சம் துணிச்சல் வந்தது.

போடலாம், ஆனா ஒரு சின்ன சிக்கல், நிறைய பேர் தங்களுக்கு பிடிச்ச படம் போடோணும் எண்டு கேக்கினம். இரண்டு போத்தல் எண்ணை தாற ஆக்களுக்கு தான் அவயல் சொன்ன படம் போடுறதா முடிவு… 

இல்லாத கொள்கை முடிவை குமரன் அறிவிக்க, சங்கரப்பிள்ளை யோசித்தார்.  இரண்டு போத்தல் எண்ணை சந்தையில் நானூறு ரூபாய் போகும். கொடுப்போமா விடுவோமா என்று யோசித்தார். குமரன் அடுத்த பந்தை வீசினான்.

போன மாசம் தானாம் இவன் ரமேஷிண்ட தங்கச்சி சாமத்திய வீட்டில “புதிய பறவை” போட்டவங்களாம். புத்தம் புது கொப்பி, தண்ணி மாதிரி கிளியர்.

“புதிய பறவை” யை இதற்கு முதல் கேள்வியே படாத குமரன் அவிழ்த்துவிட்டதை புரிந்துகொள்ளும் மனநிலையில் சங்கரபிள்ளையார் இருக்கவில்லை. சரோஜாதேவி கண் கண்ணை மறைத்துவிட்டது.

இல்ல தம்பி,  என்ன இருந்தாலும் இரண்டு போத்தில் கொஞ்சம் அதிகம்..அதான்..

பட்சி சிக்கிவிட்டது.

நீங்க சொன்னீங்க எண்டு முதல் படமா போடலாம். பத்து மணிக்கெல்லாம் முடிஞ்சிடும். நித்திரை முழிக்க தேவையில்லை. வெள்ளன போய் கடை துறக்க லேசா இருக்கும்.

ஒருவழியாக சங்கரப்பிள்ளையார் வழிக்கு வந்தார்.

நீங்களும் இளம் பிள்ளைகள் .. இதுகளை பார்க்க தானே வேணும் .. ஆனா நான் தான் எண்ணை தந்தது எண்டு ஆருக்கும் சொல்லிடாத.

ஒரு வழியாக இரண்டு போத்தல் எண்ணைக்கு வழி பண்ணியாச்சு. இன்னும் நான்கு போத்தல் வேண்டும். கீர்த்தியிடம் சொன்னால் ஏற்பாடு செய்து விடுவான். சைக்கிளை நேரே கீர்த்தி வீட்டுக்கு செலுத்தினான். வெள்ளிகிழமை என்றாலும் கீர்த்தி வீட்டில் தான் இருந்தான்.

“இரண்டு போத்தில் எண்ணை ரெடி, சங்கரப்பிள்ளையர் சரிஞ்சிட்டார்”

“அப்ப, நான் டிவி டெக் அரேன்ஜ் பண்ணுறன். காசு சேத்திட்டியா?”

“சேர்க்கோனும், ஆளாளுக்கு தங்களுக்கு பிடிச்ச படம் போட சொல்லுறாங்கள்”

“எல்லாருக்கு சரி எண்டு சொல்லு, கடைசி நேரத்தில படக்கொப்பி கிடைக்க இல்லை எண்டு சொல்லி சமாளிக்கலாம்!”

“காந்தனிட்ட படம் போடுற விஷயம் சொல்லீட்டயா?”

“சொன்னன், அவன் தானும் ஒரு கொப்பி வச்சிருக்கிறானாம். போட போறதா சொன்னான்”

“கலியாண மாப்பிள்ள, அண்டைக்கு இரவு படம் பாக்க போறானே? அவன் தானே அண்டைக்கு முழுக்க படம் பார்ப்பானேடா?“

“அவனுக்கு சும்மா கதை விட மட்டும் தான் தெரியும் மச்சான், ஒண்டும் புடுங்க மாட்டான் பாரு”

அவசர அவசரமாக காரியங்கள் நடந்தன. முக்கிய வீடுகளிடம் சொல்லி ஆயிரம் ரூபாய் சேர்த்தாச்சு.  சைக்கிள் கடைக்காரன் ரமேஷிடம் டிவி, வீசிஆர், ஜெனரேட்டர், படக்கொப்பிகளுக்கு ஓடர்,  எதற்கும் இருக்கட்டுமே என்று “உறங்காத கண்மணிகள்” படக்கொப்பியும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது. தப்பித்தவறி காவல்துறை வந்துவிட்டால், கொப்பியை மாற்றிவிடலாம். பக்கா பிளான் ரெடி.

Brahman hindu priest bleses a young couple in the hindu temle of Chavakachcheri during traditional hindu wedding on 20. November 2005, Chavakachcheri, Jaffna Sri Lanka

செவ்வாய்கிழமையும் வந்தது, ராகு காலம் பன்னிரெண்டு மணிக்கு என்பதால், அவசரம் அவசரமாக ஐயர் மந்திரம் சொல்ல, காந்தன் வானதி கழுத்தில் தாலி கட்டியதும், கட்டும் போது துபாய் பவுனில் செய்த கொடியின் மூன்றாவது திருகு பூட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க, பின்னால் நின்ற வானதியின் தங்கை மேகலா காந்தனுக்கு உதவி செய்ததும், அதை பார்த்த கீர்த்தி “மச்சம்டா காந்தனுக்கு” என்றதும்,  குமரன் அதை ரசிக்காததும் … இந்த கதைக்கு வேண்டாத சம்பவங்கள் என்பதால் காந்தன்-வானதி திருமணம் இனிதே நிறைவு பெற்றது!

மாலை ஆறு மணி. காந்தன் வீட்டின் வரவேற்பறை ஹால் நிறைந்து வழிந்தது. மறுவீடு அழைப்புக்கு மேகலா வீட்டிற்கு சென்றவர்கள். இன்னமும் வரவில்லை. முன் வரிசை முழுவதும் சிறுவர்கள் உட்கார்ந்திருக்க, தொடர்ந்து பெண்களும், பின்னால் ஆண்களும் இருந்தார்கள். மேசையில் 21இஞ்ச் நேஷனல் டிவி. சின்ன பிளாஸ்டிக் ஸ்பானர் கொண்டு தான் அந்த டிவியில் சானல் எல்லாம்  டியூன் பண்ணவேண்டும். வயர் இணைக்கப்பட்ட ரிமோட்.  பக்கத்தில் டெக் என்று அழைக்கப்படும் வீசீஆர். அதிலிருந்து வயர் இழுத்து, யன்னலுக்கு வெளியே முற்றத்தில் வைத்திருந்த ஜெனரேட்டரில் இணைத்திருந்தார்கள்.  ஜெனரேட்டர் என்ஜின் பல தடவை இழுத்தும் ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தது.  உடனே குமரன் அதிலே பொருத்தியிருந்த ஸ்பார்க் பிளாக்கை கழட்டி பார்த்தான். கரி மண்டியிருந்தது. Gasoline-Water-Pump-PTG406-ROBIN-EY28-

என்னடா செய்யிற? என்ஜின் பழுதா? சனங்கள் எல்லாம் வந்திட்டுது

கீர்த்திக்கு புரியாமல் குழம்பினான்.

பொறு, சரி செய்யலாம்

ரமேஷை கூப்பிடுவமா?

ஒண்டும் வேண்டாம், ப்ளாக்ல கார்பன் ஏறிப்போட்டுது, நெருப்பில போடோணும்

ஓ ..தணல் எடுத்து வரட்டா?

கீர்த்தி சொல்லிக்கொண்டே இருக்கையிலேயே அவனை கவனிக்காமல் குமரன் எழுந்து  நேரே வரவேற்பறை பக்கமாக சென்றான். எல்லோரும் இவனையே எதிர்பார்த்து இருந்தவர்கள் போல, இவன் பக்கம் திரும்பினர். குமரன் கூடத்தின் நடுவே இருந்த மேகாலாவை பார்த்து..

“மேகலா இஞ்ச ஒருக்கா வாரும், இந்த பிளாக்க கொஞ்சம் சூடாக்கி தர ஏழுமே, கீழ போட்டிடவேண்டாம் கவனம்..”

திடீரென சபை நடுவே குமரன் தன்னை அழைத்தது மேகலாவுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், வேறு எல்லோரையும் விட்டுவிட்டு தன்னை அழைத்ததை  பெருமையாகவே உணர்ந்தாள். நண்பிகளை பார்த்து சிரித்துவிட்டு, எழும்பும்போது பறக்காதவாறு, குடைவெட்டு பாவாடையை ஒருக்களித்துகொண்டே வந்தாள்.  இந்த இடத்தில் மேகலாவை பற்றி ஒரு சில வரிகள் அறிமுகம் தேவை.  மேகலா யாழ் இந்து மகளிர் கல்லூரியில், பயோ சயன்ஸ் படிக்கிறாள். படிப்பு சுமார் தான். வானதியை விட ஐந்து வயது இளமை. நிறம் கம்மி.  ஆனால் ஒருமுறை பார்த்து சிரித்தாள் என்றால் ஆயுசுக்கும் அவள் பின்னாலேயே அலையலாம். குமரன் ஆறுமாசமாக அலைந்துகொண்டு இருக்கிறான். அவளுக்கு தெரியாது.  வெளியில் கதை விட்டாலும் கிட்டே போய் ஒரு வார்த்தை தனியே பேச குமரனுக்கு பயம். நூறு மீட்டர் தள்ளி தான் எப்போதும் போவான். திரும்பினாலும் தெரியாது. கண்டால் என்ன நினைப்பாள்? 

“மேகலா, சூடு காட்டேக்க உருகிடும், கொஞ்சம் மெல்லிய தணல்ல வைய்யுங்க”

இடையில் புகுந்த கீர்த்தி தன் பங்குக்கு ட்ரை பண்ண

“இல்ல இல்ல, எவ்வளவுக்கு தணல் போட ஏலுமோ அவ்வளவுக்கு போடுங்க, அது தான் நல்லது, ப்ளாக் ஒருநாளும் உருகாது”

“ஓகே, இப்பவே அடுப்புல கொண்டு போய் போடுறன், தாங்க ..”

“ஐஞ்சு நிமிஷம் போதும், அப்பிடியே கொஞ்சம் ஓடிகலோன் இருந்தா கொண்டு வாங்க, என்ஜின் ஸ்டார்ட் பண்ண தேவை”

தலையாட்டிக்கொண்டே மேகலா செல்ல, ரெட்டை ஜடையில் கருப்பு ரிப்பன். ஜடை முடிவில் மடித்து கட்டாமல் நீண்ட முடியாக தெரிவதற்காக தொய்ய விட்டிருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த குமரன் சட்டென கூட்டம் முழுதையும் கொஞ்சம் நிமிந்து பார்த்துவிட்டு வெளியே வந்தான்.  கீர்த்திக்கு அவமானமாயும் கோபமாகவும் இருந்தது, எந்த பொருளுக்கும் ஒரு கொதிநிலை இருந்து ஆகத்தானே வேண்டும் என்று சொல்ல வாயுன்னினான். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. குமரனை பற்றி காந்தனுக்கு சொல்லிவைக்க வேண்டும் என்று நினைத்தான்.  இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. குமரன் தான் முதலில் தொடங்கினான்.

“இங்க தானே இண்டைக்கு முதலிரவு மச்சான்?”

“மாப்பிள்ள வீட்ட இல்லாம என்ன மயிலிட்டியிலயே நடக்கும்?”

கீர்த்திக்கு கடுப்பு இன்னமும் தீரவில்லை.

“படம் போட்டா அவையல டிஸ்டேர்ப் பண்ணாதா? எது மாப்புள பொம்பிளயின்ட ரூம்?”

டிவி மேசைக்கு பக்கத்தில இருக்கிற ரூம் தான், ஆனா அவங்கட பிஸில இதெல்லாம் கேக்காது .. சொல்லப்போனா டிவி சத்தம் அவைக்கு வசதியா ..….

மேகலா வருவது  தெரிந்து கீர்த்தி பேச்சை நிறுத்தினான். சுட சுட ப்ளாகை ஒரு சட்டியில் போட்டுகொண்டு வந்திருந்தாள்.

“ஓடி கொலோன் இல்லை … பேபி கோலோன் தான் இருக்கு, ஓகே யா?”

“அதுவும் வேலை செய்யும், தாங்க”

“கீர்த்தி இதை கொண்டு போய் கவனமா பூட்டு, நான் கோலனை வாங்கிக்கொண்டு வாறன்”

குமரன் கீர்த்தியிடம் ப்ளாகை கொடுக்க, விஷயம் தெரியாமல் அவன் கையால் எடுக்க,  புளாக் சுட்டது.ஸ்ஸ்..

ஏழு மணி இருக்கும். மாப்பிளை பொம்பிளை திரும்பி விட்டார்கள். அவர்களுக்கென்று பிரத்தியேக இரட்டை கதிரை தயார் செய்யப்பட்டு இருந்தது. வானதி சேலையிலிருந்து சாதாரண பாவாடை சட்டைக்கு மாறி இருந்தாள். புது தாலி சட்டைக்கு வெளியே தொங்கியது. கையில் இருபது காப்பாவது இருக்கும். காந்தன் வேஷ்டி கட்டி,  கட்டம் போட்ட சட்டையில். இரண்டு புறமும் தலையணை போட்டிருந்த அந்த இரட்டை கதிரையிலும் இருவரும் ஒட்டியே இருந்தார்கள். வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான். ஆறு மணிக்கே வந்த கூட்டம் இன்னமும் கலையாமல் இருந்தது. சங்கரப்பிள்ளை முதலாளி, மனைவியை வீட்டில் விட்டு விட்டு தனியாக வந்திருந்தார். மேகலாவுடன் அவள் நண்பிகளும் என ஒரு பத்து பேர். காந்தனின் உறவினர்கள், திருமணத்துக்கு வந்தவர்கள் மீண்டும் வந்திருந்தார்கள். வானதியின் குடும்பத்தில் இருந்து அவள் தம்பியும் மாமாவும் வந்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள்.

ஜெனரேட்டர் ஒருவழியாக ஸ்டார்ட் ஆனது.  டிவியை ஆன் பண்ணினால் ப்ளக் என்று ஒரு சத்தம். அவ்வளவு தான். டிவியில் எந்த அசுமாத்தமும் இல்லை. குமரன் டெஸ்டர் ஸ்குரூடிரைவரை வைத்து ஏதோ செக் பண்ணிவிட்டு பியூஸ் போய்விட்டது என்றான். டிவியை பின்புறமாக கழட்ட ஆரம்பிக்க கூட்டம் சலசலக்க தொடங்கியது. எங்கேயோ இருந்த பெரிசு “இந்த காலத்து டிவி எல்லாம் இப்பிடி தான்” என்றது. குமரன் ஒரு வயரை எடுத்து, பல்லால் இழுத்து உள்ளே இருந்த கம்பியை வெளியே எடுத்தான். சத்தகத்தால் அதை நன்றாக சீவி பியூசில் பொறுத்திவிட்டு மீண்டும் டிவியை போட, அது இர்ர்ர் என்று இரைந்து வேலை செய்தது. டெக்கை ஆன் பண்ண, டிவி முழுக்க செங்குத்தாக கலர் கலர் சட்டங்கள். முன்னால் இருந்த சிறுவர்கள் சந்தோஷத்தில் கைதட்டினார்கள்.  குமரன் கூட்டத்தை நோக்கி கை காட்டினான்! மேகலா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

புதிய பறவை, அண்ணாமலை, தேவர் மகன், ரோஜா, செம்பருத்தி என ஐந்து படங்கள். முதலில் எது போடலாம் என கீர்த்தி கூட்டத்தை கேட்ட போது,  முன் வரிசையில் இருந்தவர் எல்லோரும் அண்ணாமலை என்று சொல்ல, சங்கரப்பிள்ளை முதலாளி முகத்தில் கோபம். ஒன்றும் பேச முடியாது. அண்ணாமலை சரியாக ஏழு இருபதுக்கு ஆரம்பித்தது. கூட்டம் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தது. சரத்பாபு திருமணம் முடியும் போது காந்தனும் வானதியும் முதலிரவு அறைக்குள் போய்விட்டதை கூட்டம் கவனிக்கவில்லை.  பாம்பை துரத்திபோகும் ரஜனி,  குஷ்பு குளிப்பதை பார்த்துவிட்டு சொல்லும் “கடவுளே கடவுளே” காட்சி வந்தது. மேகலா என்ன நினைப்பாளோ என்று குமரன் சிரிப்பை அடக்கிக்கொண்டே எங்கேயோ பார்த்தான். கீர்த்தி விவஸ்தை இல்லாமல் விழுந்து விழுந்து சிரிக்க குமரன் அவன் கையை பிடித்து அழுத்திக்கொண்டே சாதுவாக மேகலா என்ன செய்கிறாள் என்று பார்த்தான். அவளோ அடக்கமுடியாமல் சிரித்து சிரித்து பக்கத்தில் இருந்தவள் தோளில் விழுந்துகொண்டிருக்க, குமரனுக்கும் சிரிப்பு வர தொடங்கியது. 

அண்ணாமலை முடியும் போது நேரம் பத்து மணி. என்ஜினை கூல் ஆகட்டும் என்று நிறுத்திவிட்டு சாப்பிட ரெடியானார்கள். மத்தியானம் கல்யாண வீட்டு சோறு கறியை ஒரு பெரிய சட்டியில் போட்டு குழையல். குத்தரிசி சோறு, கத்தரிக்காய் பிரட்டல், உருளைக்கிழங்கு கறி, தக்காளிப்பழ குழம்பு, பீட்ரூட் துவையல், கோவா, பருப்பு, தயிர் என்று எல்லாவற்றையும் போட்டு, ஆளுக்கு ஒரு அப்பளமும் “பிடி உருண்டையும்” கொடுத்தார்கள்.

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே சங்கரப்பிள்ளையார் அவசரப்படுத்த, கீர்த்தி “புதிய பறவை” போட போவதாக அறிவித்தான். சிறுவர்கள் பெருமூச்சு விட, நடுவில் உட்கார்ந்திருந்த மேகலா “ரோஜா” போடவேண்டும் என்று சொல்லும்போது, கீர்த்தி மெலிதாக அவளை பார்த்து கண்ணடித்ததை குமரன் கவனிக்கவில்லை. “புதிய பறவை” யை வீஸிஆர் இல் நுழைத்து ப்ளே பண்ணினான். படம் தெளிவாக வரவில்லை. “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாட்டு ஜவ்வோ ஜவ்வன்று ஆரம்பித்து “நாம் பழகி வந்தோம் சில காலம்ம்ம்ம்” பேயாய் இழுத்து ஸ்டக் ஆகிவிட்டது. குமரன் திட்டிக்கொண்டே வீசிஆர் ஹெட்டில் பங்கஸ் பிடித்துவிட்டதாக சொல்லி திறந்து கிளீன் பண்ணினான். இனிமேல் “புதிய பறவை” படம் போட்டால் டெக் பழுதாகிவிடும். கொப்பி சரியில்லை. சங்கரப்பிள்ளையார் கோபத்தில் எழுந்து போய்விட, ரோஜா இப்போது சின்னத்திரையில்.

ரோஜா முடியும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது.  சொக்கிப்போய் இருந்தார்கள். குமரனுக்கு இப்போதே போய் அந்த வாய்க்குள் நுழையாத கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கவேண்டும் போல இருந்தது.  ஹனிமூனுக்கு கண்டிக்கு போகும்போது ஸ்ரீலங்கா ஆர்மி தன்னை பிடித்துகொண்டு போவதாகவும், மேகலா வந்து பூசா சிறையில் தன்னை மீட்பதாகவும் அபத்தமாக யோசித்தான். பூசாவுக்கு வெளியில் நின்று கட்டியணைக்கும் போது “பட்டிக்காடு” என்று கூப்பிடவேண்டும் போல இருந்தது. அதே போல நீளமான சாம்பல் கலர் ஸ்வெட்டர் வாங்கி கொடுத்து …கீர்த்தி தேவர் மகனை ப்ளே பண்ணினான். இப்போது கூட்டம் அதிகமாக இல்லை. முன்னாலே இருந்து பார்த்த குஞ்சு குருமான் நித்திரையில் கிடக்க, ஆளாளுக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். பெரிசுகள் எல்லாம் அவுட். மேகலா குரூப்பும், பெடியளும் தான். “இஞ்சி இடுப்பழகா” முடியும்போது மேகலாவும் கிளம்பிவிட்டாள்.

“நித்திரை வருது .. நாங்க போறம் .. இருந்து பார்த்திட்டு மிச்ச கதையை சொல்லுங்க”

“எப்ப சொல்ல?”

குமரன் கேள்விக்கு மேகலா ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக்கொண்டு புறப்பட, குரூப் பின் தொடர்ந்தது. இப்போது படம் பார்த்துக்கொண்டு இருப்பது ஐந்து பேர் மட்டும் தான். ஆண்கள். மற்ற எல்லோரும் போய்விட்டிருந்தனர். தேவர்மகன் முடியும் போது நேரம் மூன்று மணி.  கீர்த்தி எழுந்து செம்பருத்தியை ப்ளே பண்ண போகும்போது தான் முதலிரவு அறை சத்தம்போடாமல் திறந்தது.  எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சி, நிறைய ஆர்வம். ஒட்டுமொத்தமாக அறை வாசலை பார்த்தார்கள்.

காந்தன் தான் வெளியே வந்தான். சாரம் அணிந்திருந்தான். மேலே சர்ட் ஒன்றும் இல்லை. தலைமயிர் கலைந்திருந்தது.  வேண்டுமென்றே கலைத்துவிட்டு ‘படம்’ காட்ட வருகிறான் என்று குமரன் கீர்த்தியிடம் முணுமுணுத்தான். காந்தன் நேரே போய் அலுமாரிக்குள் ஒளித்து வைத்திருந்த படக்கொப்பி ஒன்றை எடுத்து வந்தான். கீர்த்திக்கு இருப்பு கொல்லவில்லை.

என்னடா இங்கே வந்திட்ட?

படம் பார்க்க தான்!

இல்ல, மூண்டு மணி .. கலியாணம்… களைச்சிருப்ப..

காந்தன் பேசவில்லை

வானதி எங்கேயடா?

அவள் நல்ல நித்திரை!

நீ?

ப்ச் .. நித்திரையே வர இல்லைடா மச்சி

வந்தா தாண்டா தப்பு!

அது இல்லை … என்னட்ட ஒரு படம் இருக்கு .. எல்லோரும் போயிட்டாங்களா?

ஓமடா .. நாங்க மட்டும் தான் .. என்ன படம்டா இது?..அடிபாட்டு படமா?

ஒரு மலையாள படம் …. மேகலாவும் பிரண்ட்ஸும் போயிட்டுதுகள் தானே?

செம்பருத்தி நல்ல படம் மச்சி, மலையாள படத்தை எவன் பார்ப்பான்? .. ஆர்ட் பிலிம் ஒண்டும் விளங்காது!

கீர்த்தி விஷயம் புரியாமல் சொல்ல குமரன் அவனை வாயை மூடுமாறு சைகை செய்தான்.

ஒருத்தரும் இல்லடா  காந்தன் .. நாங்க மட்டும் தான் .. கில்மா படமாடா மச்சி .. என்ன பெயர்?

குமரன் வாயெல்லாம் பல்லாய் கேட்க, காந்தன் நேரே போய் முதலிரவு அறையை இறுக்கி சாத்திவிட்டு வந்து மெதுவாக சொன்னான்..

“கணவன் மனைவி!”

 

***************************************************** முற்றும் ********************************************************

 

பின்குறிப்பு

சிறுகதை மூலம் : ஆங்கிலத்தில் எழுதிய “Kajan’s Wedding Night!”

படங்கள் : இணையம்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக