மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன.
இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல்
அவதாரங்களுக்கு தயாராகின்றனர்.
சூரியன் தீக்குளித்தவன் போல
வெப்பம் மேலேறி அலறுகிறான்.
தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம் தேடி
பதுங்குகுழிகள் தேடுகின்றார்கள்.
அவள் வருகிறாள்.
சித்தார்த்தர்கள் போதிமரத்து
குயிலிசையில் மயங்குகிறார்கள்.
ராஜாவின் வீட்டுக்கு ரகுமான் விரைகிறார்.
வரவேற்பரையிலோ வைரமுத்து.
எறும்புக்கும் கவிதை வருகிறது.
அவனிடம் வருகிறாள்.
சமயலறை வெந்நீர் கொதிக்கமாட்டேன்
என்று அடம்பிடிக்கிறது.
அவளுக்கான பருக்கை சோற்றோடு
அட்சய பாத்திரம் அப்படியே காத்து கிடக்கிறது.
மகிழூந்தின் பக்கத்து இருக்கை அனிச்சையாய் தூசு தட்டப்படுகிறது!
அகலிகை பயம் இன்றி கற்களில் பாதம் படுத்த முடிகிறது.
அறிவும் அறியாதனவும் அச்சம் அகற்றுகின்றன.
அவள் வந்து விடுவாள்.
தோற்றவனை பார்த்து
"இன்று போய் நாளை வரவா?"
என்று மனம் பண்படுகிறது.
இந்த இப் புள்ளிக்கான கோட்டை
திரும்பி பார்க்கையில்
எதிர்கால துன்பங்களில்
நம்பிக்கை துளிர் விடுகிறது.
எதை நீ கொண்டுவந்தாய்? என்பவனிடம்
உனக்கெதுக்கு எல்லாமே? என்று கேட்க தோன்றுகிறது.
"எப்போதாவது காதலித்திருக்கிறாயா?"
நான் கேட்கும்போது மட்டும்
காடு விழுந்து விழுந்து சிரிக்கிறது.
அவளேகினான்.