Skip to main content

புலம் (பெயர்) பொதுமைப்படுத்தல்கள்



“புலம்பெயர் தமிழர்கள் நடைமுறைச்சாத்தியமில்லாத தமிழீழத்துக்கான தீர்வையும் தேவையேயில்லாத தேசியத்தையும் கள நிலவரங்கள் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்”
சமீப காலங்களில் இப்படியான அல்லது இந்தக்கருத்து சார்ந்த பலகருத்து நிலைகளைக் காணமுடிகிறது. என்னுடைய கேள்வி நடைமுறைச்சாத்தியங்கள் சம்பந்தப்பட்டவை அல்ல. நடைமுறைகள் என்றாலே அது காலத்துக்காலம் மாறுபவை அல்லது மாற்றப்படுபவைதான். அப்போது சாத்தியங்களும் மாறும். அதல்ல விசயம்.
விசயம் இதுதான்.

நான் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து கொழும்பு, சிங்கப்பூர், மெல்பேர்ன் என்று கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்துவிட்டேன். பல புலம்பெயர் தமிழர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பலதரப்பட்ட புலம்பெயர் தமிழர்கள். புத்தகங்கள், இணையத்தினூடு பல ஊர்த்தமிழர்கள் பற்றி அறியவும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னுடைய உய்த்தறிவு எதுவென்றால், எந்தளவுக்கு தமிழ்த்தேசிய ஆதரவு இத்தமிழர் மத்தியில் உள்ளதோ அந்தளவுக்கு இவ்விடங்களிலெல்லாம் எதிர்ப்பும் இருக்கிறது. மகிந்தவுக்கு மொட்டுக்காரர் கொடுக்கும் ஆதரவைவிட வெறித்தனமான ஆதரவைக்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களைக் கண்டிருக்கிறேன். பிரபாகரன் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்று நம்புபவரையும் கண்டிருக்கிறேன். புலிகள், டெலோ, ஈரோஸ், ஈபி என்று பல்வேறு இயக்கங்களில் இருந்து இன்று குடும்பங் குட்டிகளோடு வாழ்பவர்களையும் தெரியும். புலி ஆதரவுக்கும் இங்கே கூட்டம் கூடும். எதிர்ப்புக்கும் கூடும். சிலபேர் இரண்டுக்கும் வருவார்கள். சிறு வயதில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து பின்னர் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் ஒருவரையும் மெல்பேர்னில் அடிக்கடி சந்திப்பதுண்டு. கறுவிக்கொண்டே இருப்பார். இங்கு கூட்டமைப்பு எம்.பி வந்தாலும் கூட்டம் கூடும். மனோ கணேசன் வந்தாலும் கூடும். சைக்கிள் வந்தாலும் கூடும். விஜய்டிவி கோபிநாத் வந்தாலும் கூடும். இலங்கை சுதந்திரதினத்துக்கும் கூடும். எல்லாத்துக்கும் ஒரு ஐம்பதுபேர் கூடுவார்கள். ஒரே கேள்விகளைக் கேட்பார்கள். இதிலே பெரிதாக வேறுபாடுகளை நான் கண்டதில்லை. ஊரில் ஒரு தேர்தல் வருகிறது என்றால் இங்கே கன்னை பிரித்துக்கொண்டு அடிபடுகிறார்கள். வீட்டுக்கு ஒரு கூட்டம். சைக்கிளுக்கு ஒரு கூட்டம். மா, பலா, வாழைக்கும் ஓரிருவர். வீணைக்கு ஒருவர். புறக்கணி என்று சொல்ல இன்னொருவர். எனக்குத்தெரிந்து புலி எதிர்ப்பைப் புலம்பெயர் தமிழர் அளவுக்கு ஈழத்தில் இருப்பவர் செய்ததில்லை. அதன் காரணமும் வெள்ளிடையானது.
உண்மையச்சொல்லப்போனால் இந்தக்கூட்டம் எல்லாமே மிகச்சிறிய சதவிகிதம்தான். நானறிந்து இங்கு பெரும்பாலானவர்கள் தாமும் தம்பாடுமாக இருப்பவர்கள். சத்தம்போடாமல் தம்மாலானவற்றைச் செய்துகொண்டிருப்பவர்கள். மிக எளிமையான லௌகீக வாழ்க்கைக்கு இசைவாக்கப்பட்டவர்கள். ஐந்து நாள் வேலை. தினமும் பிள்ளைகளோடு ஏழு மணிக்குத்தூங்கி அடுத்தநாள் அதிகாலை எழுந்து சோலியைப்பார்ப்பவர்கள். சனி ஞாயிறு நீச்சல், பியானோ, தமிழ், நடனம் என்று பிள்ளைகளோடு அலைபவர்கள். அவ்வப்போது இடம்பெறும் சனிக்கிழமை பிறந்தநாள் கொண்டாட்டங்களில்தான் அவர்களுக்கு அரசியல்பேச சந்தர்ப்பம் கிடைக்கும். அதுகூட காலையில் மறந்துபோய்விடும். இதுதான் கள நிலவரம். இதுதான் பொதுவான பரம்பல். புலம்பெயர் அன்றி உள்ளூர் சமூகத்தின் சிந்தனை, செயற்பாட்டுப் பரம்பலும் இதுவாகவே இருக்கமுடியும். எந்த இனக்குழுக்களுக்களிலுமே இந்தப்பரம்பல்தான் இருக்கும். சிரியாவில் நித்தம் குண்டு வெடித்து நான்கைந்து முனைகளில் நான்கைந்து குழுக்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்றன. அங்கும் சிந்தனைப்பரம்பலை எடுத்துக்கொண்டால் இப்படியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே இயற்கையின் பரம்பலாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
மீண்டும் ஆரம்பித்த புள்ளிக்கு வருவோம்.
“புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடி பிடிக்கிறார்கள்” என்பது எந்தளவுக்கு பொதுமைப்படுத்தலோ அதேயளவு பொதுமைப்படுத்தல்தான் “புலம்பெயர் தமிழர்களுக்குப் புலிக்காய்ச்சல் பிடித்துள்ளது” என்று சொல்வதும். “புலம்பெயர் தமிழர்கள் சைக்கிளில் சுற்றுகிறார்கள்” என்பதுபோலத்தான் “புலம்பெயர் தமிழர்கள் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார்கள்” என்பதும். ருத்திரகுமார் ஜெயரத்தினம் இருக்கும் இதே நாட்டில்தான் மைந்தன்சிவாவும் இருக்கிறார். இந்த நிலையில் குறிப்பிட்ட பொதுமைப்படுத்தல்களை மாத்திரம் எங்கிருந்து கிடைக்கும் தரவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு செய்கிறார்கள் என்று யோசிக்கிறேன். இதனை ஒருவித “Confirmation Bias” ஆகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. என்னுடைய கருத்துக்கு ஒவ்வாதவர்களைத் தாக்குவதற்கு இப்படியான பொதுமைப்படுத்தல்களைத் தெரிவுசெய்து இப்படிச் சாயம் பூசுதல் எனக்குத் தேவையானதாக இருக்கிறது. ஒருவரின் அல்லது ஒத்த கருத்துள்ள சிலரைத் தாக்குவதற்கு அவர்கள் வாழும் இடத்தை பயன்படுத்தமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த insider/outsider dichotomy என்பதன் எல்லை வசதியைப்பொறுத்து வாழும்வீட்டின் அறைக்குள் இருக்கும் படுக்கும் பாய், தலையணை வரைக்கும் போகலாம் என்பதே உண்மை. இந்த வாதவழுவை “Ad Hominem” என்பார்கள் (நாவலோ நாவலில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது). எதிர்வாதம் செய்பவரிடம் இல்லாத ஒன்றை வாதத்துக்கான தகுதியாக நிர்ணயம் செய்து அவரைத் தகுதியற்றவராக்குவது (நீ ஊரில் வாழவில்லை, பேசாதே, நீ என் சாதி இல்லை, பேசாதே, நீ பட்டதாரியில்லை, பேசாதே. இது என் தலையணை, என் பாய், என் அறை, என் வீடு, என் கிராமம், நகரம், தேசம், நாடு, உலகம் …. பிரபஞ்சம்… தகுதியில்லை, பேசாதே).
என் அன்பான வேண்டுகோள் இதுதான். ஒரு வாதத்தை மறுவாதம் செய்யும்போது இயலுமானவரையில் வாதவழுக்களை நீக்கப்பார்ப்போம். பொதுமைப்படுத்தல்கள், அதுவும் வாதம் செய்பவர் சார்ந்த பொதுமைப்படுத்தல்கள் தேவையேயில்லை. நீ இன்னான் பிள்ளை, நீ இன்ன சாதி, ஆகவே நீ இப்படித்தான் பேசுவாய் என்பதெல்லாம் மலினமான கைதட்டல் வாங்கும் உத்திகள். விவாதக் கருத்து சார்ந்துமாத்திரம் உரையாடலாம். இன்னமும் சொல்லப்போனால் கருத்து தெரிவிப்பவர்கள் இவற்றையெல்லாம் யோசித்துப்பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். இலேசில் தம் வாதவழுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இப்போதுகூட நான் சொல்லவந்த விடயத்தை விட்டுவிட்டு தீர்வுபற்றி விவாதம்செய்யக்கூட சிலர் இங்கே வரக்கூடும்.
ஆனால் வாசிப்பவர்கள், கேட்பவர்கள் வாதவழுக்களை இனம்காண ஆரம்பித்தாலே போதும்.
நன்றி.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...