வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார். எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம். அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா? நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான். எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா? நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள். எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா? ***** பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர். அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி பட...