குமரனின் அப்பா இன்று தான் வருகிறார். காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும் தூக்கம் இன்றி உழன்றுவிட்டு அடிக்கடி எழும்பி நேரம் பார்த்து பார்த்து வெறுத்துப்போனான். அடடே குமரனைப்பற்றி சொல்லவேயில்லை. எப்படித்தொடங்குவது? நான் தான் குமரன் என்று சொன்னால் வேலை இலகுவாக முடிந்துவிடும். ஆனால் அதில் ஒரு சங்கடம் இருக்கிறது. இதையெல்லாம் ஏன் எழுதுகிறாய் என்பார்கள். அட மறந்துவிட்டேன், சத்தியமாக இந்த குமரன் நான் இல்லை. எங்கள் வீட்டில் அப்போது படலை இருக்கவில்லை. இரும்பு கேட் தான், ஓஹோ படலையை கேட் என்று மாற்ற அதிகம் நேரம் பிடிக்காது என்ன? ம்ம்ஹூம் ஏன் வீண் வம்பு, அது படலை தான். நான் குமரனும் இல்லை! குமரன், வரும் ஆவணிக்கு அவனுக்கு பதின்மூன்று வயது ஆகிறது. எங்கே வசிக்கிறானா? இதெல்லாம் இந்த கதைக்கு தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். எப்போதாவது யாழ்ப்பாணம் வந்திருக்கிறீர்களா? வந்தால் அங்கே பரமேஸ்வராச்சந்தி என்று ஒரு பிரபல முச்சந்தி இருக்கிறது, ஆம் அதே தான், பல்கலைக்கழகத்துக்கு அண்மையில், நிறைய பையன்கள் கூடும் சந்தி. ம