இந்தச் சூழலைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பக்கம் பழைய பூங்கா. பூங்கா முழுதும் பிரிட்டிஷ்காலத்தில் நடப்பட்ட, அடர்த்தியாக வளர்ந்துநிற்கும் மலைவேம்புகள். அம்மரங்களின் உச்சிகளில் இலைகளுக்குப் போட்டியாகத் தொங்கிக்கிடக்கும் வௌவால்கள். பழையபூங்காவுக்குள் அப்போது காவல்துறை பயிற்சிமுகாம் இருந்தது. எப்போதாவது யாராவது தவறுதலாக வெடிவைத்தால் அத்தனை வௌவால்களும் தூக்கம் கலைந்து எழுந்து கூட்டமாக மேற்குப்பக்கமுள்ள பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்மேலே ஒரு விரிப்புபோல மேவிப்பறக்கும். மற்றபடி அத்தனை வௌவால்களும் பகலில் சிறு சிறு சலசலப்புகளுடன் தொங்கியபடி. மைதானத்தின் வடக்கு மூலையில் இரண்டுமாடி வீடு ஒன்று. அதிபர் பங்களோ. கிட்டத்தட்ட எழுபது எண்பது வருடங்கள் பழமையானது அந்த வீடு. அதுவும் பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்டதுதான். பங்களோவின் சுவர்களைத் தொட்டால் சுண்ணாம்புப்பூச்சு உதிரும். அவ்வளவு பழசு. ஆனால் அந்தப் பழமைதான் அச்சூழலை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. அந்த பங்களோவின் போர்ட்டிகோவில் ஒரு சாய்மனைக்கதிரை. கதிரைக்குப்பக்கத்திலேயே தேநீர்கோப்பை வைத்து எடுக்கவென அளவான உயரத்தில் ஒரு ஸ்டூல்.