Skip to main content

ஷாஜகானின் காட்டாறு




அண்மைக்காலங்களில் தமிழில் வாசிப்பது என்பது பெரும்பாலும் அயர்ச்சியையே கொடுத்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவை வாசிப்புக்கு உகந்ததாகாமல் போய்விட்டன என்பதல்ல. அவற்றை வாசிக்கும்போது என் மனநிலை தளம்புகிறது. தமிழில் வாசிக்கும்போது கதைக்களனுக்குள் நுழைந்து ஒன்றிணையமுடியாமல் வாசிப்பு மனநிலை அலைக்கழிக்கப்படுகிறது. நூல்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய புறச்சூழ அரசியலும் விவாதங்களும் அவர்களை வாசிக்கும்போது முழித்துக்கொண்டு ஒவ்வொரு பக்கங்களிலும் நிற்பதைத் தவிர்ப்பது கடினமாக இருக்கிறது. அதனால் அவற்றிலிருந்து வலிந்து விலகி நின்று, எழுத்தாளர்களின் பொதுவெளிகளை அவதானிக்காமல், அவர்களுடைய முகநூல், இணையத்தள, காணொலிப்பதிவுகளைக் கவனிக்காமல் நூல்களை மாத்திரமே தேடி வாசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. வேற்றுமொழி இலக்கியங்களை வாசிக்கும்போது இந்த மனநிலை ஏற்படுவதில்லை. அந்தப் புத்தகங்களை அவற்றின் புறவெளி விவாதங்களைப்பற்றி அறியாமலேயே அணுகமுடிகிறது. அதனால் புத்தகங்களின் உள்ளடக்கங்களோடு நெருங்குவது என்பது இலகாகிறது.  கேட்கப்படாத பாடல்கள்போல வாசிக்கப்படாத புத்தகங்களும் கொஞ்சம் அதிகம் அழகுதான்.

ஆச்சரியமாக ஷாஜகானின் “காட்டாறு” தொகுப்பை வாசித்தபோது மிக இயல்பாக அந்தக் கதையுலகத்துக்குள் நுழைய முடிந்தது. அவரைப்பற்றி அதிகம் அறியாமலிருந்ததும், தன்னைப்பற்றி அவர் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பதும் அதற்குக் காரணங்கள் என்று நினைக்கிறேன். மிக நுணுக்கமான, பல மடிப்புகளைக்கொண்ட கதைகளைச் சொல்லும் இயல்பான கதை சொல்லி ஷாஜகான். இதற்குமுதல் அசோகமித்திரனிடம் இந்தக் கதைசொல்லல் பாங்கை அவதானித்திருக்கிறேன். மூலக்கதைகளில் போகிற போக்கிலே பட்டும்படாமலும் ஷாஜகான் வீசிப்போகும் கிளைக் கதைகள் ஏராளம் கிடைக்கின்றன. பறவைகள் சுமந்துசெல்லும் வேப்பம் விதைகளைப்போல. கதைகள் என்றாலே அவை சொல்லப்படவேண்டியவைதாம். ஆனால் சொல்லப்படும் கதைகளில் பெரிதும் தேடி உணரப்படுவது அவற்றில் சொல்லாமல் விடப்படும் கதைகளே. ஷாஜகானின் கதைகளில் அப்படிச் சொல்லாமல் விடப்படும் கதைகள் ஏராளம் கிடைக்கின்றன. அவை நம்மை அடிக்கடி புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சிந்திக்க வைக்கின்றன. அதுவும் மிக எளிமையான கதைகளில் இவ்வகை உணர்வுகளை விட்டுச்செல்லும்போது அவற்றின் வலிமை இன்னமும் அதிகமாகிறது. 

சென்றமுறை வாசகர் வட்டத்தில் உந்தக் ‘காட்டாறு’ நூலை எடுத்து உரையாடிக்கொண்டிருந்தோம். காட்டாறு நம்மை நிறையப் பேச வைத்தது. நூலை விடுத்து நம் கதைகளையும் வெளியே கொண்டுவந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், ஷாஜகான் தன் கதைகளில் சொல்லாமல் விட்டுப்போனவை எல்லாமே நம் கதைகள்தாம் என்று. 

வழமைபோல அன்றைக்கும் எழுத்தாளரைத் தொடர்புகொண்டு பேசுகின்ற சங்கடமான காரியத்தை நாங்கள் மீளவும் செய்தோம். இனிமேல் அவரை வாசிக்க முயலும்போது அவர் குரலும் ஒருசேர ஒலிக்கப்போகிறதே என்று கவலையாக இருக்கிறது. போகட்டும். அவர்  அதிகம் எழுதுவதில்லை என்பதால் காரியமில்லை. 

எழுத்தைப்போலவே ஷாஜகானின் பேச்சும் நிறைய உண்மைகளோடு கூடி வந்தது. மிக நேர்மையுடனும் அதே சமயம் ஒரு குழந்தைபோலவும் நம்முடைய பேச்சுகளை அவர் கேட்டுக்கொண்டிருந்தார். கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அபத்தமான கேள்விகளை சிரித்து ஒதுக்காமல் விட்டார். சின்னதாக ஒரு மமதை, அதிகாரம் என எதுவுமே இல்லாமல் உரையாடினார். கடைசியில் ராஜா அண்ணன் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை மிக நெருக்கமாக உணரமுடிந்தது. 

“எழுத்தாளர் என்பவர் ஒரு coward என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஒரு செயற்பாட்டாளர் தெருவில் இறங்கிப்போராடிக்கொண்டிருக்கும்போது வெறுங் குற்ற உணர்ச்சியைப் போக்குவதற்காக இரண்டு வரி எழுதித்தப்பிப்பவர்தான் எழுத்தாளர்” 

ஷாஜகான் ஏன் தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்பது அப்போது விளங்கியது.

000

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக