Skip to main content

ஈழத்து இராமாயணம்.

 

மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன் அண்ணாவும், பாரதியாக கேதாவும், பெரியாராக ஆனந்தும் அரங்கேறினார்கள். நிகழ்வை தொகுத்துவழங்கியவர் பன்னிரண்டு வயது, மெல்பேர்னில் பிறந்து வளர்ந்த சிறுவன் துவாரகன்.


நன்றி கேதா

அவை வணக்கம்

கம்பநாடன் கவிதையிற் போல
கற்றோர்க்கிதயம் களியாதே - என்று
வந்திருக்கும் அனைவருக்கும்
அன்பு வணக்கங்கள்.

இன்றைக்கு இங்க வந்து
மன்றத்தில் பேச சொல்லி
பொங்கல் தந்த சடையப்ப
வள்ளலுக்கும் வணக்கங்கள்!

காலத்தை வென்று வாழும்
காவிய நாயகர்கள்
நால்வருக்கும்
தமிழில் ஒரு
ஹாய்!

பண்டார வன்னியரே.
அண்ணர் வெளியில பெரும் வீரம்.
ஆனா வீட்டில வெறும் ஜில்லா!
வன்னியன் உம்மை
முன்னேயே கண்டிருந்தால்
ஆரியனை எதுக்குவீணா
ஹீரோவா போட்டிருப்பேன்?

a01123u2கோவலனின் காதலியே.
உன் காவலனுக்கு,
கண்ணகியும் நீயே
மாதவியும் நீயே!
அப்படிப்பார்க்காதே.
கவியரங்கில் கடுஞ்சமர்
மூள்வது ஜகஜம் – அதற்காக
சமர் டைமில்
காட்டுத்தீயை
சாபம் இடாதே.

பாரதியே.
உன் கண்ணம்மா கவிதைகளை
கண்டதுமே உளம் மகிழ்ந்தேன்- ஆனாலும்
கண்ணகியை பார்த்து
சின்னஞ் சிறு கிளி எண்டால்
தென்னந்தோப்பு கிளியெல்லாம்
டென்ஷன் ஆகிப்போகாதோ?

பெரியாரே.
நித்தியானந்தருக்கு எதற்கு பெரியார் வேடம்?
கடவுள் இல்லை என்று சொன்னீராமே.
அதையே தான் நானும் சொன்னேன்.
'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;
'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;
'அன்றே' என்னின், அன்றே ஆம்;
'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை!
என்று அன்றே எழுதினேன் நான்.
அதுதானே பகுத்தறிவு?
அதை அறிந்திடுவார்
எவருமே பெரியாரே!

அவையடக்கம்

இனி என்கவிக்கு வருகின்றேன்.
கவிதை என்று எழுதி நானும்
கனகாலம் ஆகிப்போச்சு.
கலியாணம் முடிச்சதுல
டச்சும் கொஞ்சம் விட்டு போச்சு.
விட்டத்த பார்த்தபடி
நீங்க வேற இருப்பதால
மிச்சமா இருந்தவரியும்
சுத்தமா ஓடிப்போச்சு.

தட்டுங்களேன்.
இங்கனம் கவிதைகளும்
சமயத்தில் திறக்கப்படும்.

கம்பனென்ற காரணத்தால்
பண்டைத்தமிழ் கவிபாடி
சங்கடத்தில் நெளியவைக்கும்
எண்ணமேதும் எனக்கில்லை.

கவிதை பாடி அடுத்தவரியில்
பொருளும் கூட உரைக்கின்ற
விளங்காத வேலையை – நான்
செய்யவும் போவதில்லை.

புறநானூறில் கவி வடித்தால் – கேவலம்
முகநூலில் கூட லைக் இல்லை

எதுக்கு வீண் பொல்லாப்பு?

கூவத்திலே குதித்தபின்னர்
கோவணம் என்ன வேண்டியிருக்கு?

புரியாத தமிழிலே
இன்னமும் பறை தட்ட
நான் என்ன
வெண்முரசு எழுதும் ஜெயமோகனா?
இல்லை,
ஈழத்து இலக்கியம் படைக்கும்
இணையத்து எழுத்தாளனா?

நான் கம்பன்.
காலத்தை வென்ற காவியம் படைக்க
காலத்தில் நின்று கவிதை எழுதும்
வித்தை வரம் பெற்றவன்.

வெண்பாவும் விருத்தப்பாவும் இன்று
காலாவதியான பால்மாக்கள்.
நான்
புதுக்கவிதை எனும் மொந்தையிலே
பழங்கதையை பகரப்போகிறேன்.
இது
பாற்கடலை பருக துடிக்கும்
சுண்டெலியின் ஆசை.
பழைய மெட்டின்
ஜீவன் கெடுக்கும்
ரீமிக்ஸு ஓசை.
மொக்கை என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடி நான்எழுதும்
வெறும் எழுத்து குப்பை.

முன்னுரை

mg_5421-1024x768-1பாமரனை இராமனாக
மாற்றிவிட்டா என்ன ஆகும்?
பக்கத்துவீட்டு பொண்ணு
சீதையானா என்ன ஆகும்?

லட்சத்து விந்துகளில்
ஒற்றை விந்தாய் முந்திநின்ற
ஒவ்வொரு மனிதனுமே
அவதார புருஷன் தானே..

ஆரியன் தான் இராமன் என்ற
வேலியினை உடைந்து இன்று – நம்
ஊரவனை காவியத்து
தலைவனாக ஆக்கப்போறேன்.

பால காண்டம்

தாழையடியில் வாழ்ந்துவந்த
தமிழ்வாத்தி
தசரதன்.
வாத்திக்கு வாய்த்த
பொண்டாட்டி கைகேயி.
ஒத்தையா கட்டினாலும்
எட்டு பேருக்கு ஈடு அவள்.
கத்தியே சாதிக்க தெரிந்த
வித்தை ஆற்றும் காரியவாதி.

வாத்திக்கும் இவளுக்கும்
ஆஸ்த்திக்கு ஒரு புள்ள.
அவன் பேரு இராகவன்.
நம் காப்பியத்து தலைவன்.
வில்லு வித்தை
சொல்லு வித்தை
எதுவுமே எட்டாத
விரல்வித்தை இராமன்..

விசுவா மித்திரரும்
இராகவாச் சாரியாரும்
நல்லூரு திருவிழாவுக்கு
ஒன்றாக போகிறினம்.

சிஷ்ஷை ஏதும் மாட்டும் என்று
சாமியாரின் வேண்டுதலு.
திரிஷா தான் வேணுமெண்டு
இராமனது தேடலது.

பச்சை சாத்தி இறக்கையில
பார்த்தபொண்ணு எல்லாமே
மொத்தமாக எலிமினேட்டு.
சுப்பர்பொண்ணு ஆரெண்டு
தேடிக்கொண்டு இருக்கையிலே
வைல்ட் கார்டு ரவுண்டுல
தான் வந்து சேர்ந்தா சீதா.

loveஆத்தாடி கண்ணு அவ்வளவு அழகு.
யாழ்ப்பாணம் ஒருகாலும்
காணாத பொண்ணு.
நானூறு லைக்கு வாங்கும்
பேஸ்புக்கு போட்டோ போல
அவ குடுத்த போசுக்கு
சரிஞ்சான் நம்மாளு.

கவிதை ஒன்று சேலை கட்டி
புவியில் வந்து நின்றதடி – நெஞ்சு
குழியம் வரை வந்த வரி
புரவியேறி பறந்ததடி.
பறவை நீ பாடிபறக்க
நானுனக்கு வானமடி.
வானமே நீயானால்
நிறமாவேன் நீலமடி.

கச்சான் பாக்கு பேப்பரில்
கடிதம்எழுதி சுருட்டிவைத்து
ஜனகனாரு அசந்த சமயம்
ஜானகியிடம் கொடுத்தானே.

கொடுத்தவனின் கவிதையிலே
அகமகிழ்ந்து நிமிர்கையிலே - இவள்
கண்ணோடு கண்கவ்வி
அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்.
இருவரையும் தூரநின்ற
வாத்தியாரும் நோக்கினார்.

ஆரணிய காண்டம்

ஏஎல் எக்ஸாம் நேரத்திலும்
வாலை சுருட்டி இருக்காம
மிஸ்டு கோலும் எஸ்எம்எஸ்ஸும்
வாழ்க்கையாகி போனதில,
மூணு தரம் முக்கிப்பார்த்தும் – முழுசா
மூணு எஸ்ஸு தாண்ட இல்ல.

வெட்டியா இந்தப்பெடி வீதியில திரிஞ்சுதெண்டா
கொட்டியா எண்டு சொல்லி ஆர்மி உள்ள போடுமென்று
வட்டிக்கு பணம் குடுக்கும் கூன்முதுகு பாட்டி ஒன்று
இட்டு கட்டி சொன்னதில தாய்மனிசி பயந்து போட்டு.

amayanam cartoon (4)நாட்டை விட்டு இராகவனும்
போட்டில்ஏறி போகவேண்டும்.
ஆஸியில குடியமர்ந்து
காசுநல்லா சேர்க்கவேணும்.
கேஸு வென்ற பின்னால
நாடு திரும்பி வந்து – நீயும்
காட்டாத காட்டெல்லாம்
ஊருக்கு காட்டவேணும்.

கைகேயி இராமனுக்கு கட்டளையை போட்டுவிட்டு
காணியை அடகுவச்சு காச கையில் குடுத்திட்டாள்.
அன்னையிண்ட வாக்கினையும் மறுக்காம இராகவனும்
அவதார நோக்கிற்கு துணையாக இருந்திட்டான்.

சுதியோட தாளத்தை பிரிப்பதுவும் நன்றன்று.
பிரிவாலே சுடுகின்ற பெருங்காடு இலதென்று
விதியோட சதியால மனையாளும் சொல்லிடவே.
மதியாளை கூட்டிக்கொண்டு சதிபதியும் சென்றானே.

கப்பலுக்கு கட்டவென்று பத்து லட்சம் ரொக்கமாக
மன்னரோட மகனிண்ட முகவரிடம் கொடுத்தானே.
நாளைக்கு காலையில நீர்கொழும்பு வாருமென்று
ஊமல் தம்பி சொன்னவாக்கை வேதவாக்காய் எடுத்தாரே.

அடுத்தநாள் காலையில ஐஞ்சுலாம்பு சந்தியில
பஸ்சுக்கு நிக்கையிலே எல்லாமே முடிஞ்சு போச்சு.
வெள்ளைவான் வண்டிஒண்டு வேகமாக ஓடிவந்து
விசுக்கென்று ஜானகியை இழுத்துப்போட்டு ஓடிப்போச்சு.

சுந்தர காண்டம்

இல்லாளும் ஒருகணத்தில் இல்லாம போனதில
சொல்லொன்றும் சிக்காம விக்கித்து நின்றானே.
பொல்லாத மைந்தரிடம் சிக்கிவிடும் முன்னாலே.
நல்லாளை மீட்கவழி தெரியாம திகைத்தானே.

முறைப்பாடு போடவென
போலீசிட்ட போனாலோ
மொழியேதும் புரியாம
முழிஞ்சிட்டு நிற்கோணும்.

காணாமல் போனோரின்
ஆணையத்தில் பதிஞ்சாலும்
நட்டஈட்டை வாங்கிக்கொண்டு
செத்தவீடு செஞ்சிடோணும்.

பாதையது தெரியாமல்
சேதுவான இராமனிடம்
கோதையதை கடத்தியது
கோத்தாவின் ஆள்என்று
சுட்டு விழுந்த பட்சி ஒன்று
சூசகமாய் சொல்லியது.

கோதண்டராமனுக்கு
அஞ்சும் கெட்டு
அறிவும் கெட்டு
போயிட்டுது.
கெட்ட வார்த்தையை
பட்டை நாமமாய்
கொண்டவனை
தட்டி கேட்பது எப்படி?
சாத்தானுக்கு எப்படி
வேதம் ஓதுவது?
தூது ஒன்று வேண்டுமே.
வாயு புத்திரனுக்கு யாரு தோது?

யோசித்து பார்த்ததில யூகேயின்
பிரதமரே ஆஸ்தான தூதர் என்று
மகஜர் ஒன்று கொடுத்தாச்சு.
அனுமாரும் இலங்கை போயி
பேச்சுவார்த்த செஞ்சுபார்த்தார்.
அலைவரிசை முன்னாலே
நெருப்பெடுத்து ஏசியிட்டார்.
சீதையினை இராமனிடம்
சீக்கிரமே சேக்காட்டி
சீமை எல்லாம் சேர்ந்துநின்று
சாத்திடுவோம் என்றுசொன்னார்.

ஈழத்து உறவுக்கு இன்னல் எண்டு கண்டவுடன்
ஐயாவும் அரைநாளு உண்ணாம இருந்தாரே.
வேலைநாளு இல்லாத வீக்கெண்டில் ஒருநாளு
வெளிநாட்டு தமிழர்கூடி ஆர்ப்பாட்டம் செய்தாரே.

ஈஸ்வரனின் தேவியிடம்
ஞானப்பால் குடித்திட்ட
திருஞான சம்பந்த
மூர்த்தியிடம் போய்கேட்டால்
இராசதந்திர போர் ஒன்றே
இனி எங்கள் கதிஎன்று
போகாத ஊருக்கு
நோகாம வழி சொன்னார்.

ஜானகியை எண்ணிவாடி
இராகவனும் தேய்ந்துபோனான்.
வெஞ்சிறையில் இந்த கணம்
என்னை எண்ணி வெம்புவாளோ?
பஞ்சுவிரல் பட்டுஉடல்
செந்தணலில் பொசுங்கிடுமோ?
இரக்கமற்ற கூட்டத்திண்ட
அரக்கபசிக்கு இரைஅவளோ? – இல்லை
இருந்து என்ன பயன் என்று
இறந்து பட்டு போனாளோ?

யுத்தகாண்டம்

இன்ன பிற எண்ணங்கள்
வந்து போன பிற்பாடு
சாட்சிகாரன் காலைவிட
சண்டைக்காரன் மேல் என்று
ஆட்சிக்கார ஆக்களிண்ட
பந்தங்களை பிடிச்சுபார்த்து
எந்தச்சிறை என்றறிந்து
தன்னந்தனியே சென்றானே.

வில்லேந்தா இராமனிடம்
வெஞ்சிறையின் காவலரும்
இன்று போய் இனி நாளைவா
என நாள்தோறும் சொல்லிட்டார்.

போனவனும் பொறுக்காமா
சிறைவாசல் முன்னாலே எம்
முன்னோர்கள் போல
முறைப்பாக நின்றானே.

Mar152013_3இரண்டு நாளா நின்றவனை
மூன்றாம் நாள் காணவில்லை.
தேடிப்போன வாத்தியாரும்
நாலுநாளா திரும்பவில்ல.
இராகவனும் ஜானகியும்
என்றைக்குமே திரும்பாத
ஏராளம் தமிழர்களில்
ஓராளாய் போயினரே.
இந்தக்கதை இதற்கு மேலே
சொல்லும் வலு எனக்கு இல்லை.

காவியமா சொன்னதுவோ
நம் தேசத்தின் சோகக்கதை.
அங்கே புதைகுழிகளை
தோண்டிப்பார்த்தால்
சீதைகளும் இராமர்களும்
எலும்புகூடுகளாக வெளிவருவர்.
அவர்கள் விரல் இடுக்கில்
சமயத்தில்
கணையாழிகளும்
மங்கிப்போய் கிடக்கும்.

வெற்றிகொண்ட வீரரிண்ட
சரித்திரத்த மட்டுமின்றி
சாதாரண மனிதரோட
கதையினையும் சொல்லவேணும்.
முடிவில்லா தொடருமிந்த
அடிவாங்கும் கதைகள் இனி
தொடராம இருப்பதற்கு
என்னவாச்சும் செய்யவேணும்.

முடிவில்லா தொடருமிந்த
அடிவாங்கும் கதைகள் இனி
தொடராம இருப்பதற்கு
என்னவாச்சும் செய்யவேணும்.

நன்றி வணக்கம்.

*************************

படங்கள்
www.sooddram.com/
www.ujiladevi.in
www.4tamilmedia.com
http://gloriousjaffna.wordpress.com/
http://www.tamilvu.org/

Comments

  1. அருமை ஜே.கே! வாழ்த்துக்கள்.
    வரமுடியாமல் போனதர்த்க்கு வருத்தங்கள்.

    Uthayan.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உதயன். வீடியோ இந்தவாரம் பதிவேற்றுகிறேன்.

      Delete
  2. நம்கதை தொடர் ராமாயணம் தான் போல !

    ReplyDelete
    Replies
    1. எப்பவாவது ஒரு நாள் இந்த கதையும் முடியவேணும் தானே .. பார்ப்பம்.

      Delete
  3. our sad story. God bless.
    siva

    ReplyDelete
  4. Please send your writing to ananda vikatan. you will come to lime light lile Mr Muttulingam. His answers to reades in Vikatan is amasing. One day you will achive. But you must start sending my dear.
    Siva

    ReplyDelete
    Replies
    1. Ganesh I sent one article to Ananthavikatan .. There wasn't even an acknowledgement. I can't just keep sending to them who don't even acknowledge an email?

      I appreciate your intention. But I only get embarrassments. I will write and I will keep writing. One day my chance will come I hope.

      Now I am working on the kollai purathu kathalikal book. A publisher Vannam is interested. Hope this turns out well.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட