Skip to main content

நன்றே செய்க

கடந்த சிலவாரங்களாகவே எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணரின் தந்தையார் சுகவீனமில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சந்திக்கச் செல்லவில்லை. செல்லுபடியாகாத உப்புச்சப்பற்ற காரணங்களால் அடுத்த கிழமை, அடுத்த கிழமை என்று பிற்போட்டுக்கொண்டேயிருந்தேன். நமக்குத்தெரிந்தவர்களை மரணம் அண்டாது என்கின்ற ஒரு ஆழ்மனது நம்பிக்கை எப்போதுமே எம்முள் இருக்கிறதோ என்னவோ. 

அந்த நம்பிக்கை அண்மைக்காலத்தில் குறைய ஆரம்பித்திருக்கிறது. பத்து, இருபது வயதுகளில் எனக்குத்தெரியாத தாத்தா, பாட்டிமார்களே அதிகம் இறந்துகொண்டிருந்தார்கள். முப்பதுகளில் இப்போது அங்கிள்களும் அன்ரிகளும் பிரியத்தொடங்கி இருக்கிறார்கள். சிறுவயதில் நான் ரசித்து வளர்ந்த ஆளுமைகள் இப்போதெல்லாம் ஒவ்வொருவராய் மறையத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் பத்திருபது வருடங்களில் என் நண்பர்களும் பிரியத்தொடங்குவார்கள். ஆர்மிக்காரன் மூவ் பண்ணத்தொடங்கிவிட்டான். தூரத்தில் விழுந்துகொண்டிருந்த ஷெல்கள் நம்மூரையும் தாக்கி, அயலட்டத்தையும்தாக்கி இப்போது வீட்டுவாயிலிலும் விழுந்து வெடிக்க ஆரம்பிக்கின்றன. ஒருநாள் அது என் கட்டிலிலும் விழுந்துவெடிக்கவே செய்யும்.

இந்த அங்கிளுக்கு மூளையில் கட்டி. சிகிச்சை ஏதும் கண்டறியப்படாத புற்றுநோய். நோய்முற்றி இனி வேறு வழியேதும் இல்லை என்று “Palliative Care” வோர்டிலே விட்டுவிட்டார்கள். “Palliative Care” க்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை. சிகிச்சை பலனில்லாத மரணத்தறுவாயில் இருக்கும் நோயாளிகளுக்கான விடுதி இது. இவர்களுக்கு மருந்தில்லை. வெறும் சேலைன்கூட இல்லை. மூச்சுச்சிரமம் என்றால் ஒக்சிஜன் கொடுப்பார்கள். உடல்பாகங்கள் உருக்குலைந்து வலி அதிகம் என்றால் மோர்பின் கொடுப்பார்கள். அவ்வளவுதான். “உங்கள் நோய்க்கு எம்மிடம் மருந்தில்லை, வேறு வழியில்லை, நீங்கள் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவீர்கள்” என்று கட்டிலில் அமர்ந்து கையைப்பிடித்து பண்பாக மன்னிப்புக்கேட்கும் தோரணையில் சொல்லிவிட்டு வைத்தியர் விலகிவிடுவார். அதன்பிறகு ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒருமாதமோ நோயாளி அதற்குள் இருக்கலாம். வெளியில் போவதென்றாலும் ஒகே. உள்ளேயே இருந்து புத்தகம் வாசிக்கலாம், சிகரட் பிடிக்கலாம். டிவி பார்க்கலாம். உறவினர்களுடன் பேசிக்கொள்ளலாம். நடந்து திரியலாம். எந்த உணவும் சாப்பிடலாம். ஆனால் அவற்றினால் வரும் சிக்கல்களுக்கு வைத்தியம் செய்யமாட்டார்கள். Care மாத்திரமே. Cure இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அங்கங்கள் செயலிழந்து, மூச்சு நின்று, இத்தனை வருடங்கள் பேசிப், பழகித், தொட்டு, உணர்ந்து, வாழ்ந்த ஒரு உயிர் பார்த்துக்கொண்டிருக்கையில் இறந்துவிடும். Just like that. இறந்துவிடும்.

“பொதுவாக பிரேதம் என்றால் ஒருவித பயம் வரும். ஆனால் இது என்னுடைய அப்பா. பக்கத்திலேயே எப்பவும் இருக்கோணும்போல இருந்துதுடா. கையைப்பிடிச்சு தடவிக்கொண்டே இருந்தன்” என்றார் அந்த அண்ணர். முகத்தில் அடித்தது.

அண்மைக்காலமாக வைத்தியசாலை அனுபவங்கள் அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொருமுறையும் வைத்தியசாலைக்குச் செல்லும்போது கார்பார்க்கிலும், நடைபாதையிலும், வைத்தியசாலைக் கூரை முகடுகளிலும் மரணங்கள் உட்கார்ந்துகொண்டு யாருக்கோ காத்துக்கொண்டிருக்கும் பிரமையை உணருவதுண்டு. தலையைக் குனிந்துகொண்டே செல்வதுண்டு. “Beautiful Mind” பேராசிரியர் நாஷைச் சுற்றி பிரமைகள் திரிவதுபோல மரணங்கள் நம்மோடு கூடவே திரிந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. ஏதோவொரு செய்தியை நமக்குச் சொல்லவிழைகின்றன

ஒவ்வொரு கணமுமே நமக்குக் கிடைக்கும் கொடை. அதை சரியாகப் பயன்படுத்தல் வேண்டும். “எப்பவெண்டு தெரியாது, ஆகவே இருக்கிற டைமை வேஸ்ட் பண்ணாமல் உனக்கு என்ன பிடிக்குதோ அத தயங்காமல் செய்” என்றே ஒவ்வொரு மரணமும் படித்துப் படித்துச் சொல்லி மாய்கின்றது. ஆனால் கேட்கமாட்டோம். கேட்கவே மாட்டோம். இரண்டே நாளில், இந்த மரணம் கொடுத்த அதிர்ச்சி மறைந்ததும் மீண்டும் நேரத்தினை வீணடிக்க ஆரம்பித்துவிடுவேன். ஷிட்.

யோசிக்கையில், உலகமே “Palliative Care” விடுதிபோன்றே எனக்குத்தோன்றுகிறது. நாமெல்லோருமே சிகிச்சையே இல்லாத மரணம் என்ற வியாதி தாக்கப்பட்டிருக்கும் நோயாளிகள்தானே.

நன்றே செய்க. அதனையும் இன்றே செய்க.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக