Skip to main content

வெள்ளி கொண்டாட்டம்


மழை நின்றும் தூவானம் அடங்காத மனநிலை எனக்கு. வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வு நிகழ்ந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மனது இறுதி நாள் நிகழ்வினதும் அதற்கான பயணத்தினதும் கணங்களையே அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வை இவ்வண்ணமே நடத்தவேண்டுமென்பது எனது நெடுநாள் கனவு. மன்றை அன்புடையோர் அனைவரும் நிறைத்திருக்க ஒரு பக்கம் ஜனகனின் ஓவியங்களும் மேடையில் அற்புத நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேணும். வெள்ளியின் பட்டறைக் காட்சி நாட்டிய அரங்காய் அமைதல் வேணும். என் மதிப்புக்குரிய முதலாந்தலைமுறை இலக்கிய ஆர்வலர் மட்டுமன்றி இங்கு வளர்ந்த இரண்டாம் தலைமுறை இலக்கியவாதிகளும் வெள்ளி பற்றிப் பேசிடுதல் வேணும். லாகிரியின் மேடைகளைப்போல, நூலை எழுதியவருடன் ஒரு தீவிர வாசகர் சோஃபா உரையாடலை உட்கார்ந்து செய்யவேண்டும். இப்படி ஏராளமான எண்ணங்கள். கனவு காண்பதும் கதை எழுதுவதும் தனித்த செயல். எளிது. ஆனால் எப்படி அவற்றை நடைமுறைப்படுத்துவது?
அப்போதுதான் என் அன்புக்குரிய மெல்பேர்ன் வாசகர் வட்ட நண்பர்களிடம் வெள்ளியின் கொண்டாட்டத்தை நிகழ்த்தித்தர முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர்களோ எந்தத் தயக்கமுமின்றி மனமுவந்து இந்நிகழ்வைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். தம் குடும்ப நிகழ்வினைப்போல இதற்காக உழைத்தார்கள். நாட்கள் நகர நகர, என் மனதில் வெறும் தென்னங் குரும்பையில் செய்த தேராய்க் கிடந்த நிகழ்வு உருள் பெருந்தேராக மலர்வதைக் காண்கையில் உன்மத்தத்தில் திளைக்க ஆரம்பித்தேன்.
‘வினை நலம் வேண்டிய எல்லாம் தரும்’ என்ற குறளடிகளே ஞாபகத்துக்கு வருகின்றன. என் அத்தனை அன்புடையோரும் கூடிவந்து, கூட்டுச்சேர்ந்து இந்நிகழ்வை ஒரு கொண்ட்டாட்டமாக எதற்கு நிகழ்த்தவேண்டும்? நெடுந்தொலைவிலிருந்து ஒன்றரை மணி நேரம் வாகனம் ஓட்டிவந்தும் நிகழ்வில் கலந்துகொண்டவர் பலர். வாசக நண்பி ஒருவர் சிட்னியிலிருந்து இதற்காகவே பயணம் செய்திருந்தார். சங்க நிலத்தின் ஊற்றாம் மதுரையிலிருந்து என் அண்ணன் வந்திருந்தார். இவை யாவும் வினை நலம் செய் பயனன்றில் வேறேது?
யாருக்கு நன்றி சொன்னாலும் அன்பு சிறு மாற்று குறைந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அனைவரும் என் அன்புடையோரே. இவர்தம் உறவை விளிக்க வழியின்றித் தவிக்கையில் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் குறுந்தொகை வரிகளே துணைக்கு வருகிறது.
“நசை பெரிது உடையர். நல்கலும் நல்குவர்”






Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக