Skip to main content

நிலத்திலும் பெரிதே

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்ற முத்தமிழ் அரங்கில் மேடையேறிய மூன்றாவதும் இறுதியுமான சங்கப்பாடல்.

இதைப்பற்றி நான் எழுதியே ஆகவேண்டும்.
குறுந்தொகையில் இடம்பெறும் இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலின் காட்சி இப்படி விரிகிறது. தலைவியைத் தேடி வந்திருக்கும் தலைவன் அவள் முன்னே தோன்றாது விளையாட்டுக்காக வேலியின் அப்புறமாக ஒளிந்திருக்கிறான். இதனைத் தோழி கண்டுவிட்டாள். தோழிக்குத் தலைவன்மீது கொஞ்சம் கோபம். என்னடா இவன், எப்போது பார்த்தாலும் இவளே கதியென்று அலைகிறானே, ஆனால் தலைவியைக் கைப்பிடித்து மணம் செய்து கூடி வாழவேண்டுமே என்ற சிந்தையே இவனுக்கு இல்லையே என்று அவள் பொருமுகிறாள். அதனால் அவனுக்குக் கேட்கும்வகையில் தலைவியிடம் தலைவனைப்பற்றிப் பழி சொல்கிறாள். ஆனால் அதைக்கேட்ட தலைவி வெகுண்டெழுந்துவிட்டாள். ‘என்ன பேச்சு பேசுகிறாய், நம் நட்பு எத்தனை உயர்ந்தது தெரியுமா?’ என்று தோழிக்குத் தலைவி விளிப்பாள்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தேவகுலத்தார் பாடிய பாடல் இது.
நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
இப்போது வெள்ளி நாவலில் ஒரு காட்சி. முழுமதி இரவொன்றின் நடுச்சாமம் கழிந்தும் தூங்காது தவிக்கும் கோடன் நிலவோடு பேசிக்கொண்டிருக்கிறான். அப்போது அவனோடு வந்து இணைகிறாள் வெள்ளி. நிலவுக்கும் முகிலுக்குமிடையேயான நட்புபற்றி பேச்சு போகிறது. உள்ளிடை நெருப்பாக இருவரிடத்திலும் காதல். காதல் என்ற சொல்லுக்கு அதன் இக்காலத்து அர்த்தம் பின்னாளில் வந்தது. சங்க காலத்தில் காமமும் நட்பும்தான். இந்தக் காமமும் நட்பும் கலந்த உணர்வை எவர் ஆரம்பிப்பது என்கின்ற இயல்பான தயக்கம் இருவரிடத்தேயும் இருக்கும். அவன் சொல்லலாம் என்று எத்தனிக்கையில் வெள்ளி பேச்சை மாற்றி இக்கவிதையை ஆரம்பிக்கிறாள்.
“நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று”
இவன் நவீனத்து இளைஞன் அல்லவா? தனக்கு விளங்குமாப்போல சொல்லு என்று அவன் வெள்ளியிடம் கேட்கிறான். அப்போது வெள்ளி சொல்லும் பாடல் இது.
“ஆழமது, கடலிலும் ஆழமாம்
அகலமது, புவியிலும் அகலமாம்
நெடியதிது, வானிலும் நெடியதாம்
கோதையது கோடனொடு நட்பு”
தேவகுலத்தாரின் நாடனொடு நட்பை வெள்ளி கோடனொடு நட்பாக்கிவிட்டாள்.
இதை எழுதிய கணமே ஒரு உன்மத்தம்தான். நாவலுக்கு வடிவமைப்பு செய்யும் வேலை நடக்கிறது. கஜன் இந்தக் கவிதை வந்தடைகின்ற இடத்தை வாசித்துவிட்டு ‘டேய் நல்லாத்தான் இருக்கு. திரும்பவும் காதலிக்கலாம்போல பீலிங் வருது’ என்றான். நாவல் பதிப்புக்குத் தயாராகிவிட்டது. ஸம்ரக்‌ஷணாவும் ஜீவியும் இந்த முத்தமிழ் அரங்கைப் பற்றிப் உரையாடிக்கொண்டிருக்கையில் இந்த “ஆழமது” பாடலுக்கு மெட்டுப்போட்டு தரமுடியுமா என்று ஸம்ரக்‌ஷ்ணாவிடம் கேட்டேன். ஸம்ரக்ஷணாவால் தமிழ் நன்றாக பேசமுடியும். ஆனால் வாசிப்பது கொஞ்சம் கடினம். அதனால் ஒரு கஃபேயில் வைத்து அவருக்கு வெள்ளி நாவலையும் பாடல்களையும் விளக்குகிறேன். எனக்கு இராகங்கள் பற்றிய பெருத்த அறிவு ஏதுமில்லை. ஆனால் இக்காலங்களில் ஹம்சத்வனி இராகம்மீது தீராத காதல் ஒன்று ஏற்பட்டதில் அந்த இராகத்துப் பாடல்களைக் கேட்டுக்கொண்டேயிருப்பேன். அதனால் ஹம்சத்வனியில் மெட்டுப்போட முடியுமா என்று அவரிடம் அதிகப்பிரசிங்கித்தனமாகக் கேட்க, “அதுக்கென்ன அண்ணா?” என்று நான் கேட்ட கணத்திலேயே வந்து விழுந்தது ஒரு மெட்டு. மலைத்துப்போய் அதை அக்கணமே பதிவு செய்து மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டேயிருந்தேன். பின்னர் பேராசையில் சசி அண்ணாவுக்கு அழைப்பெடுத்து இதற்கு இசைக்கோர்ப்பு செய்து தரமுடியுமா என்று கேட்டேன். அவருக்குக் கொஞ்சம் தயக்கம். “நீ பாட்டையும் எழுதி மெட்டையும் போட்டுத்தந்தா எனக்கென்ன வேலை?” என்றார். ஆயினும் அன்பின் நிமித்தம் அதற்கு இசை கோர்த்துக் கொடுத்தார். அதுதான் வெள்ளி முன்னோட்ட இசையாக முன்னர் வெளியானது.
“ஆழமது” பாடல் முன்னோட்ட இசையைப் பல தடவைகள் கேட்டதாலோ என்னவோ, இப்போது அப்பாடலையும் இணைத்து மேடையேற்றலாம் என்ற எண்ணம் ஜீவிக்கும் ஸம்ரக்‌ஷணாவுக்கும் வந்துவிட்டது. அதன் நீட்சிதான் இந்த அரங்கு. நெடியதிது வானிலும் நெடியதாம் எங்கையில் ஜீவி வானையே வில்லாய் வளைத்து நிற்கும். என் கண்ணே பட்டுவிடும்போல. மூலப்பாடலையும் வெள்ளி சொல்லிய அதன் எளிமையான வடிவத்தையும் கோர்த்து இருவரும் மேடையேற்ற கேதா அதற்கு அழகாக விளக்கம்கொடுத்தார்.
சாந்தி அக்கா கேட்ட கேள்விதான் ஞாபகம் வருகிறது. ஏன் எழுதவேண்டும்? யோசித்துப்பாருங்கள். சங்கப்பாடல் ஒன்று இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் வாழ்ந்து என்னை வந்தடைகிறது. அதைப் படித்த பிரவாகத்தில் நாவல் ஒன்று மலர்கிறது. அதை வாசித்து நான்கு பேர் இப்படி இணைகிறார்கள். அவர்களுடனான என் நட்பு கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பாய் ஆகிவிடுகிறது.
எழுதுவதற்கு வேறு காரணமேதும் வேண்டுமா என்ன?
கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன்
இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா
பொருளும் நயப்பும் - கேதா
காணொளியாக்கம் - வசந்த்


நன்றி : மெல்பேர்ன் வாசகர் வட்டம்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக