“ஒரு மின்னல் கோடு எங்கே போய் முடிவடைகிறது என்று எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அநேகமாக இன்னொரு மின்னலில் அது போய் முடியலாம். அல்லது தரையில்” ஏப்ரில் “ஶ்ரீலங்கனா?” அம்மாவின் அந்த ஒரே வார்த்தையில்தான் எத்தனை கேள்விகள். எத்தனை உணர்ச்சிகள். அது ஆச்சரியமா? இகழ்ச்சியா? வெறுப்பா? இவள் எப்போதுமே இப்படித்தான் என்ற அவநம்பிக்கையா? அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து ஒரு சிங்கப்பூரியனைத் தேடிக்கண்டடைவேன் என்று அம்மா முட்டாள்தனமாக யோசித்திருக்கச் சந்தர்ப்பமில்லை. ஆனால் அது ஒரு சீன இனத்தவனாகவாவது இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கக்கூடும். குறைந்தபட்சம் வெள்ளை என்றாலும் இந்தளவுக்கு எதிர்வினை இருந்திருக்காது. மகிழ் பற்றி அவரிடம் சொல்லாமலேயே விட்டிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் யாரோடாவது பகிர்ந்துகொள்ளத்தானே வேண்டும். மலையேற்றம் போகும்போது தெரிந்தவர் ஒருவராவது நான் எங்கே போகிறேன், எத்தனை நாளில் திரும்புவேன் என்பதை அறிந்துவைத்திருக்கவேண்டாமா? தொலைந்துபோய்விட்டால் எங்கென்று தேடுவார்கள்? “எத்தனை நாட்களாகப் பழக்கம்?” “ஆறு மாதங்களாக மமா… ஆனால் சீரியசாக இந்த மூன்று மாதம்தான்” பேஃஸ்டைமில் அம்ம