Skip to main content

தீரா உலா


ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தபின்னர், கிளைமக்ஸுக்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் கிறுக்கு குணம் எல்லோருக்கும் இருந்திருக்கும்.

காதல்கோட்டை தேவயானியும் அஜித்தும் தாங்கள் தவறவிட்ட சந்திப்புக்களைப்பற்றி எத்தனைதடவை பேசியிருக்கக்கூடும்? யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். “காதல் கவிதை” படத்தில் கமலிக்கும் சூரியாவுக்கும் கல்யாணம் என்று சின்னி ஜெயந்த் சொல்லுகின்ற காட்சி ஒன்றுகூட இருக்கிறது.

அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக்கும் ராதாவும் ஓடிப்போய் சந்தோசமாக குடும்பம் நடத்தியிருக்கமுடியுமா? பள்ளிக்கூட மாணவர்கள். உழைப்பில்லை. பணக்கார வீட்டுப்பெண் ராதாவால் சமாளித்திருக்கமுடியுமா? அலைகள் ஓய்வதில்லை மீதிப்பாகம் “காதல்” படமாகவே மாறியிருக்கும் சாத்தியம் அதிகம். பாவம் அந்தப்பெடி.


“மறுபடியும்” படம் பார்த்துவிட்டு வீட்டிலே சின்ன சண்டை. நிச்சயமாக அரவிந்த்சாமியும் ரேவதியும் பின்னர் சேர்ந்திருப்பார்கள், அது வெகு இயல்பு என்று அக்காவோடு வாதிட்டு இருக்கிறேன். அதன் முடிவே அப்படித்தான் எடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா என்பது என் நீண்டகால வாதம்.

தளபதியில் அந்த ரஜனியின் “வெறுங்காவல்” டயலாக் தொடர்ந்திருக்க சாத்தியமில்லை. ரஜனிக்கும் பானுப்பிரியாவுக்கும் இயல்பாக காதல் ஒருநாள் மலர்ந்திருக்கும். மழைநாள், இடி, கடுங்குளிர், தூரத்து டீக்கடையில் இளையராஜா பாட்டு "வெறுங்காவலை" உடைத்திருக்கும். புத்தம்புது பூ பூத்ததோ ஷூட்டிங் நடந்திருக்கும்.

இதயம் படத்தில் முரளியும் ஹீராவும் சேர்ந்திருக்கவே சாத்தியம் அதிகம்.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் நாங்கள் படம் முடிந்து தியேட்டர் வாசலைக்கடக்க முன்னமேயே சிம்பு சமந்தாவை ப்ரொபோஸ் பண்ணியிருக்கக்கூடும். Samantha was too good to miss out.

மூன்றாம்பிறையில் அவ்வளவு உணர்வு பூர்வமாக கிளைமக்ஸை முடித்திருந்தாலும் யோசித்துப்பார்த்தால் அந்த முடிவு ஒரு சப்பைதான். ஸ்ரீதேவி எப்படியும் தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை கேட்டுத்தெரிந்திருப்பாள். அவளை கண்டுபிடிப்பது கூட கமலுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்திருக்காது.

இந்தியன் கமல் சந்தனக்கட்டை வீரப்பன் போல ஒருநாள் அம்புலன்சுக்குள் சுடப்பட்டு கிடந்திருப்பார்.

அந்நியன் சதாவின் நிலை இன்னமும் மோசம். கொல்லப்பட்டிருப்பாள்.

முதல்வன் அர்ஜூன் அடுத்த தேர்தலிலேயே தோற்று காமராஜர் ஆகியிருப்பார்.
இதுதான் யதார்த்தம்.

ஆனால் ரசிகன் இதெல்லாம் யோசிக்கமாட்டான். யோசிக்கவைக்காமல் படம் எடுப்பதுதான் திறமை. சினிமாவே ஒருவித கண்கட்டி வித்தைதானே.

ஒரு சில படங்களில், பின்னர் என்ன நடந்திருக்கும் என்கின்ற காட்சிகளையும் இயக்குனர்கள் வைப்பார்கள். நியூ படத்தின் இறுதிக்காட்சி அப்படிப்பட்டது. அதிலே அப்பா சூர்யாவும் மகன் சூர்யாவும் பேசும் காட்சியில் ஒரு இன்டலிஜென்ஸ் இருக்கும். சூர்யா அகத்தியனுக்கு பிறகு தமிழில் உருவான சிறந்த இயக்குனர். நடிப்பாசையால் நாதாரி தறிகெட்டுப் போயிட்டுது.

இனி கொஞ்சம் நம்ம கற்பனை குதிரையை தூசு தட்டுவோம்.

மௌனராகம். அதில் மோகனும் ரேவதியும் எப்படி குடும்பம் நடத்தியிருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தேன்.

படத்தில் இருவருக்குமே செம் ஈகோ. அமுசடக்கிகள். உள்ளே இருக்கும் காதலை சொல்லக்கூட ஈகோ தடுக்கும். எதெற்கெடுத்தாலும் நாய் பிடி. பேய் பிடிதான். அதற்காக பிரிவது வரைக்கும் போய்விட்டு சேருவார்கள். பார்க்க வெகு சுவாரசியமாகவிருக்கும். கடைசியில் இருவரும் கட்டிப்பிடிக்கும்போது, பார்க்கிறவனுக்கு யாரையாவது உடனடியாக காதலித்து சண்டைபிடிக்கவேண்டும்போல தோன்றும். அப்படி ரசிகனை நினைக்கவைத்ததுதான் படத்தின் வெற்றி.

ஆனால் நிஜ வாழ்க்கையில் டங்குவாரு கிழிஞ்சிருக்கும்.

அவர்களின் அந்த குணவியல்புகள் ஆதாரமானவை என்று வைத்துப்பார்த்தால், வாழ்க்கை பூராக இருவரும் சண்டை பிடித்திருக்கவே சாத்தியம் அதிகம். ஒவ்வொருமுறை சண்டையிலும் கூட முதலில் சமாதானமாவதும் ரேவதியாகத்தான் இருக்கும். மோகன் வெளிப்படையாக அன்பைக்கூட காட்டத்தெரியாதவன். Way too much of ego.

இன்றைய தேதியில் டெல்லியில் அதே காலனியில் அவர்கள் வசித்துவந்தால் இந்தக்காட்சி அரங்கேறலாம்.

ஒரு வயதான அம்மாவும் வயதான ஐயாவும் ரயில் நிலையத்துக்கு முன்னாலே இருந்து பம்மிக்கொண்டு நிற்கிறார்கள். ஐயா ஏதோ சில பேப்பர்களை அந்தம்மா கையில் திணிக்கிறார். அம்மாக்காரி அவரைப்பார்த்து அழுதபடி ஏதோ சொல்கிறார். பின்னர் அந்த ஐயா கொடுத்த பேப்பர்களை கிழித்து எறிகிறார்.

திடீரென்று ரயில் ஹோர்ன் அடிக்கிறது. இந்தம்மா மெதுவாக ஓடுது. இப்ப கமரா கோணம் திரும்பி மூலையில் இருந்த பெட்டிக்கடையை காட்டுகிறது. அப்போதுதான் ரயிலில் இருந்து இறங்கிய ஒருவன் பெட்டிக்கடை முதலாளியிடம் பேசும் சீன்.

“என்னண்ணே அந்த அம்மாவுக்கும் ஐயாவுக்கும் இடையிலே ஏதும் சண்டையா?” 
”கண்டுக்காதீங்க தம்பி”
”இல்லண்ணே அந்த அம்மா அழுதுகிட்டே ஓடுது..தள்ளாத வயசில. பாவம்”
”பின்னால அந்த ஐயா விக்கித்துப்போய் கிழிஞ்சு போன பேப்பர்களை பார்த்துக்கிட்டு இருப்பாரே!”
”ஆமாண்ணே”
”இப்ப ஏதோ நினைவு வந்தவராய் ரெயிலை நோக்கி திடீரென்று ஓடுவாரே”
”அட ஆமா!”
”இந்தம்மாவும் அழுதுகொண்டே வந்து .. ஒரு சின்ன பிரேக் போட்டு..”
”ரெண்டு பெரிசும் கட்டுப்பிடிக்குதுங்க அண்ணே"
”இதே சீன்தான் தம்பி ...கண்றாவி ..முப்பது வருஷமா நடக்குதாம் .. என்ர அப்பாரு சொல்லியிருக்காரு… முன்னெல்லாம் இதுக பசங்களும் அழுதுகிட்டே பின்னால வருவாங்க .. இப்ப அவிகளுக்கும் அலுத்து போச்சு! ரெண்டு பெரிசுமே களைச்சுப்போய் நம்ம கடையிலதான் டீ குடிக்க வருவாங்க.. பாருங்களேன்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கிறீச் என்ற சத்தத்தில் வாகனமொன்று, வீதியை கடந்துகொண்டிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்மணியை இடித்துத் தள்ளியது. இடித்த வாகனம் நிறுத்தாமல் ஓடியது. டீக்கடைக்காரார் சலனமேயில்லாமல் தொடர்ந்தார்.
"என்ன தம்பி, வண்டி நிக்காம ஓடுதேன்னு யோசிக்கறீங்களா? உள்ளே குண்டா ஒரு பெண்மணி, டென்சனா இருந்தாங்களா?"

"ஆமாண்ணே .. யாருன்னு தெரியுமா?"

"மகளிரணி தம்பி, பழைய திமுக பிரபலம் .. இப்ப காங்கிரஸில சேர்ந்துட்டுது, பாவம் புருஷன்காரன் .. நாகர்கோவில் பக்கம் பாதிரியாரா போயிட்டாப்ல"

கூட்டம் கூடிவிட்டது. பயங்கர மழை. எங்கிருந்தோ ஒருவர் யாரையோ தேடிக்கொண்டு வந்தார்.
“தம்பி .. இந்தப்பக்கம் ஒரு அம்மா வந்தாங்களா?”

“அந்தா, சிக்னலுக்கு கீழே நனைஞ்சுகிட்டு நிக்காங்களே, அவுங்களா சார்?”

வந்தவர் சந்தோசத்தில் கத்திக்கொண்டே ஓடினார்.
“தாரா......”  

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக